السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 25 January 2026

காலித் பின் வலீத் (ரழியல்லாஹு அன்ஹு)

 


காலித் பின் வலீத் (ரழி)


இஸ்லாமிய வரலாற்றில் காலித் பின் வலீத் (ரழி) ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. உயரமான மலை போன்ற உறுதியான தோற்றம், மற்றும் பரந்த மார்புகள், குறிப்பிட்டுச் சொல்லும் தகுதிகளான கழுகு போன்ற கூர்ந்த பார்வை, தொலை நோக்குச் சிந்தனைத் திறன், சிறந்த அறிவாற்றல், நல்ல நினைவாற்றல் மற்றும் உயர்ந்த சிந்தனைகள், உறுதியான கொள்கைப் பிடிப்பு ஆகிய குணநலன்களை ஒருங்கே பெற்றவர் தான் காலித் பின் வலீத் (ரழி). இஸ்லாமிய போர் வரலாற்றில் இவருக்கென தனிஇடம் உண்டு. இவருக்கு நிகரான குதிரை ஏற்ற வீரரும், வாள் வீச்சு மற்றும் பல்வேறு ஆயுதங்களைப் பிரயோகிக்கும் திறமை படைத்தவர்கள் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்தார்.


உஹதுப் போர்க்களத்தில் எதிரிகளின் தரப்பில் இருந்து கொண்டு, முஸ்லிம்களை கதிகலங்கச் செய்த காலித் பின் வலீத் அவர்கள், அல் முஃதா போரிலே முஸ்லிம்கள் தரப்பில் கலந்து கொண்டு, இஸ்லாமிய எதிரிகளைக் கதிகலங்க வைத்த பெருமைக்குரியவர். தன்னுடைய தனித் திறமை மற்றும் போர்த்திட்டத்தின் காரணமாக ரோமர்களைப் புறமுதுகிட்டோடச் செய்து, முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த மாவீரர். ரோமும், பாரசீகமும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் படை நடத்தி வருகின்றார் என்ற செய்தி கேட்டவுடன், அவர்களின் கைகளில் இருந்த வாள் ஆட்டம் காணும் அளவுக்கு எதிரிகளின் இதயத்தில் அச்சத்தை ஊட்டிய வீரத்தின் விளைநிலம் காலித் பின் வலீத் (ரழி) ஆவார்கள்.


இறைநிராகரிப்பாளர்களின் முன்பு காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பெயர் உச்சரிக்கப்படுமானால், அவர்கள் கதிகலங்கினார்கள், அவரது வலிமை மிக்க தாக்குதல்கள் அவர்களை நிலைகுலையச் செய்தன. அதன் மூலம் மிகப் பெரிய வெற்றியை இஸ்லாமியப் போர் வரலாற்றில் ஈட்டிக் கொடுத்த பெருமை காலித் பின் வலீத் (ரழி) அவர்களைச் சாரும்.


இதன் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் “ *அல்லாஹ்வின் வாள்” என்றழைக்கக் கூடிய சைபுல்லாஹ்* என்ற பட்டப் பெயரைச் சூட்டி காலித் பின் வலீத் (ரழி) அவர்களைப் பெருமைப்படுத்தினார்கள். இஸ்லாமிய வரலாற்றிலும் சரி.., இன்னும் வரக் கூடிய நாட்களின் போர் வரலாற்றிலும் சரி.., காலித் பின் வலீத் (ரழி), என்ற மாபெரும் வீரருக்கு தனிச் சிறப்பிடம் என்றென்றும் உண்டு.


வெற்றிகள் அவரது காலை வந்து முத்தமிட்டன, அவரது எதிரிகள் கூட அவரது வீரத்தை மெச்சும் அளவுக்கு அவர் தன்னிகரற்ற வீரராகத் திகழ்ந்தார்.


பிறப்பும் வளர்ப்பும்


மக்காவின் பனூ மக்சூம் என்ற குலத்தில் வலீத் பின் முகீரா என்பவருக்கு மகனாகப் பிறந்த காரணத்தால், அவரது பெருமைமிக்க குலப் பெருமையின் காரணமாக, இளமையிலேயே எல்லோராலும் அறியப்படக் கூடிய மனிதராகக் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள். அவரது இளமைக் காலத்திலேயே தூர நோக்கு, திட்டமிட்டு செயலாற்றுதல், எடுத்த காரியத்தை கனகச்சிதமாக நிறைவேற்றுதல் ஆகியவற்றின் காரணமாக பனூ மக்சூம் கோத்திரத்து வாலிபர்களில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தார்கள்.


உஹதுப் போர் முதல் ஹ{தைபிய்யா வரைக்கும் இஸ்லாமிய எதிரிகளின் தரப்பில் இருந்த காலித் பின் வலீத் அவர்கள், இஸ்லாமிய எதிரிகளின் இராணுவத்தின் துணைப் பிரிவுக்குத் தலைவராகவும், குதிரைப் படைக்குத் தலைவராகவும் இருந்து பணியாற்றிய அனுபவமிக்க இவர், அதற்குப் பின் இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் அவரது வாழ்வை வெளிச்சமேற்றியதன் காரணமாக, பின்னாளில் இஸ்லாமியப் போர்ப்படைத்தளபதியாகப் பரிணமித்தார். இஸ்லாத்தின் எதிரிகளை நிலைகுலையச் செய்து, இஸ்லாமிய சாம்ராஜ்யம் அரபுப் பிரதேசத்தை விட்டும் பரவத் துணை புரிந்தார்.


இஸ்லாத்தைத் தழுவு முன்


இஸ்லாத்தினை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக கலந்து கொண்ட அத்தனை போர்களிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராக மார்தட்டி நின்ற காலித் பின் வலீத் அவர்கள், ஒவ்வொரு முறையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம் அவர்களது குணநலன்களால் கவரப்பட்டு, தன்னுடைய நோக்கத்தை சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டார். இறுதியாக இஸ்லாம் என்னும் வெளிச்சப் புள்ளி, அவரது இதயத்தைக் கவ்வி இருந்த இருளைத் துடைத்தெறிந்தது. அவரது தலைமை இஸ்லாமிய போர் வரலாற்றில் சூரியனாகப் பிரகாசித்தது.


ஒருமுறை போரின் பொழுது, நபித்தோழர்கள் பின்னிற்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதிய லுஹர் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள். இது தான் தக்க சமயம் என்று எண்ணிக் கொண்ட காலித் பின் வலீத் அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்த தோழர்களையும் தாக்கி, அந்தப் போரைத் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வதற்குத் தாயரானார். ஆனால் *கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு படை ஒன்று, அவரைப் பின்னுக்கு இழுப்பதைப் போல உணர்ந்த காலித் பின் வலீத் அவர்கள், தன்னுடைய முயற்சியைக் கைவிட்டார்.* முஸ்லிம்களை எதிர்க்கும் துணிவையும் இழந்து விட்டார்.


மீண்டும் அஸர் தொழுகை நடந்து கொண்டிருந்தது. இந்தமுறை கண்டிப்பாக சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது என்று சூளுரைத்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்த தோழர்களையும் நெருங்கிய பொழுது, *கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி அவரைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டதோடு, அவரால் நகரக் கூட இயலாமல் போனது.* அப்பொழுது தான் ஒரு முடிவுக்கு வந்தார், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மோதுவது வெட்டி வேலை, அவரை ஏதோ ஒரு சக்தி பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது, இந்த நிலையில் அரேபியாவை மட்டுமல்ல, அரபுப் பிரதேசத்தையும் கடந்து இந்த முழு உலகத்தையும் அவர் ஒரு நாள் வென்று விடுவார் என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு, தனது முயற்சிகளைக் கை விட்டு விட்டார்.


கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு படை ஒன்று, அவரைப் பின்னுக்கு இழுப்பதைப் போல உணர்ந்த


மலக்குமார்கள் கூட்டம் முஸ்லிம்களை பாதுகாப்பு பணியில் இருந்தனர்


இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் இறைநிராகரிப்பாளர்களுக்கும் ஹ{தைபிய்யாவில் வைத்து உடன்படிக்கை நடந்து முடிந்ததுடன், இனி நமது நிலை என்ன? நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்ற மனநிலைத் தடுமாற்றத்துக்கு உள்ளானார். அடுத்து எந்த முடிவை எடுப்பது என்ற குழப்பத்தில் தடுமாறிய காலித் பின் வலீத் அவர்கள், எத்தியோப்பியாவிற்குச் சென்று விடலாமா? என்று கூட நினைத்தார். பின் எத்தியோப்பியாவிற்கு நாம் எப்படிச் செல்வது? ஏற்கனவே, எத்தியோப்பியாவின் மன்னர் நஜ்ஜாஸி முஸ்லிம்களின் ஆதரவாளராக மாறி, முஸ்லிம்கள் அங்கு பாதுகாப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நினைவு அவருக்கு வந்ததும் தன்னுடைய அந்த முடிவையும் மாற்றிக் கொண்டார். பின் நாம் ஹர்கல் தேசத்துக்குச் சென்று தன்னுடைய மதத்தை விட்டு விட்டு, ஒரு கிறிஸ்தவனாகவோ அல்லது யூதனாகவோ மதம் மாறி விடலாமா? என்று பல்வேறு சிந்தனைகள் அவரது மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. ஆனால் எந்த முடிவுக்கும் அவரால் வர இயலவில்லை. இன்னும் எதுவாக இருப்பினும் இந்த அரேபியா மண்ணிற்குள் இருந்து தான் அந்த மாற்றம் நிகழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். போர், சண்டை என்று அனைத்தையும் விட்டு விட்டு அமைதியாக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமா? என்று பலவித நினைவுகள் அவரது நினைவை அலைக்கழித்துக் கொண்டிருந்தன, ஆனால் எதிலும் ஒரு முடிவுக்கு வர இயலாதவராக இருந்தார். அப்பொழுது ஏற்கனவே இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டிருந்த அவரது சகோதரர், காலித் பின் வலீத் அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அந்தக் கடிதத்தில் தன்னுடைய சகோதரரைப் பற்றி விசாரித்தும், இன்னும் அதற்கும் மேலாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களைப் பற்றி விசாரித்தார்கள் என்ற செய்தியையும் அதில் குறிப்பிட்டிருந்ததைக் கண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு இனம் புரியாததொரு உளக் கிளர்ச்சி ஏற்பட்டது. இன்னும் காலித் பின் வலீத் அவர்கள் ஒரு நாள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். அவரது அறிவு, ஆற்றல், சிந்தனைத் திறன், தொலை நோக்குப் பார்வை ஆகிய இறைவனின் அருட்கொடைகள் அனைத்தும், காலித் பின் வலீத் அவர்களை இதே நிலையில் விட்டு வைத்திருக்கப் போவதில்லை என்பதனையும் அதில், அந்த சகோதரர் குறிப்பிட்டுக் கூறியிருந்தார்.


இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்


மேலே உள்ள செய்திகள் யாவும் காலித் பின் வலீத் அவர்களை பல்வேறு சிந்தனைகளைத் தோற்றுவித்ததோடு, என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்களா? நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வேன் என்று சொன்னார்களா? எனக்கென பிரகாசமான எதிர்காலம் ஒன்று இருக்கின்றது போல் தெரிகின்றது என்று தனக்குத் தானே கூறிக் கொண்ட காலித் பின் வலீத் அவர்கள், தான் கண்ட கனவை இப்பொழுது அசை போட்டுப் பார்க்க ஆரம்பித்தார். அடர்ந்த, காற்றோட்டம் இல்லாத குகை போன்ற இடத்தை விட்டு பச்சைப் பசேலென்ற மிகப் பரந்த பசுஞ்சோலைகளின் பக்கம் தான் மீண்டு வருவதாகக் கண்ட கனவையும், இப்பொழுது தனக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உணர்வலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தார். இனி நாம் இங்கு தங்கியிருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்தவராக, இனி மதீனாவை நோக்கிச் செல்வது என்ற இறுதி முடிவை எடுத்த அவர், நாம் தனியாகப் போவதை விட, நம்முடன் யாரையாவது துணைக்கழைத்துச் செல்வது நல்லது என்று நினைத்து, யாருடன் செல்வது என்ற சிந்தனைக் குழப்பத்தில் ஆழ்ந்த பொழுது, உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களின் நினைவு வர, தனது நோக்கத்தை அவரிடம் தெரிவித்தார்.


உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களும் தனக்கும் அப்படியொரு நோக்கம் இருப்பதாகக் கூறிய அவர், சரி இருவரும் சேர்ந்து இணைந்தே மதீனாவிற்குச் சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திப்பதென்று முடிவாகியது. இருவரும் மதீனா நோக்கிப் புறப்பட்ட பொழுது, இடையில் அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்களைச் சந்தித்தனர். அவர், நீங்கள் இருவரும் எங்கே புறப்பட்டு விட்டீர்கள் என்று கேட்ட பொழுது, அவர்கள் தங்களது நோக்கத்தைத் தெரிவித்தார்கள். தாங்கள் மதீனா சென்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களது கரங்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார்கள். மதீனா செல்லும் குழுவின் எண்ணிக்கை, இரண்டு இப்பொழுது மூன்றாக மாறியது.


மூவரும் மதீனாவை ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு, ஸஃபர் மாதம் முதல் தேதியன்று சென்றடைந்தார்கள். முதலில் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்த காலித் பின் வலீத் அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புன்னகை தவழ வரவேற்றார்கள். பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களைப் பற்றிக் கொண்டு, திருக்கலிமாவை முன்மொழிந்து இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். மிகவும் பாசத்துடன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை நோக்கிய அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


காலித் பின் வலீத் (ரழி) அவர்களே….!


உங்களது புத்திசாலித்தனம், கல்வி ஞானம், தொலை நோக்குப் பார்வை ஆகிய நற்பண்புகளை வைத்துக் கணித்து, என்றாவது ஒருநாள் நீங்கள் இஸ்லாத்திற்குள் நுழைவீர்கள் என்று நான் நினைத்தேன் என்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.


இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எனக்கு மன்னிப்பு உண்டா? என்ற கேட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்..!


நான் என்னுடைய வாள் பலத்தினால் பல்வேறு இன்னல்களையும், தீமைகளையும் புரிந்துள்ளேன். இதற்கு முன் இஸ்லாத்திற்கு நான் இழைத்த கொடுமைகளுக்காக மன்னிப்புக் கோரி இறைவனிடம் பிரார்த்தனை புரியுமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களை வேண்டிக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு, இறைநிராகரிப்பில் இருந்து கொண்டு நீங்கள் செய்த அத்தனை பாவங்களும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் காரணமாக, தானாகவே அழிந்து போய் விடுகின்றன என்று பதில் கூறினார்கள்.


இல்லை..! யா ராசூலுல்லாஹ்..! இருப்பினும், நீங்கள் எனக்காக பிரார்த்தனை செய்தாக வேண்டும் என்று மீண்டும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் வலியுறுத்தவே, இறைவா! காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பாவங்களை மன்னித்தருள்வாயாக! அவர் மீது கருணை காட்டுவாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.


அதன் பின்பு அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்களும், பின்பு உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள்.


கண்ட கனவு நனவாகுதல்..!


பின்பு தான் கண்ட கனவைப் பற்றி காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், அபுபக்கர் சித்தீக் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.


காரிருள் கொண்ட அறை என்பது நீங்கள் அறியாமைக்காலத்தில் இருந்து கொண்டிருந்த இறைநிராகரிப்பு என்பதாகும். பின் அதனை விட்டு வெளியேறி பரந்த புல்வெளியை நோக்கி வருவது என்பது, இறைநிராகரிப்பில் இருந்து வெளியேறி, இஸ்லாத்தினுள் நுழைவதனைக் குறிக்கும். அந்தக் கனவு நீங்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் காரணமாக இப்பொழுது நனவாகி இருக்கின்றது என்றும், அவர்களது கனவிற்கு அபுபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் விளக்கமளித்தார்கள்


காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பயம் காரணமாகவோ அல்லது பெருமைக்காகவோ இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வியல் முன்மாதிரிகள் தான் அவரை இஸ்லாத்தின் பால் ஈர்க்கக் காரணமாக அமைந்தன. மனித குல வரலாற்றில் சத்தியத்தை நிலைநிறுத்துவதற்காக பாடுபடுகின்ற மனிதர்கள் தொலை நோக்குச் சிந்தனையுடனும், வெளிப்படையான போக்குகளுடனும் தங்களது வாழ்வை அமைத்துக் கொள்வது என்பது, அவர்களது அடிப்படை மற்றும் சிறப்புத் தன்மைகளாக இருந்து வந்துள்ளன. எனவே தான் எதனை சத்தியம் என்று ஏற்றுக் கொண்டார்களோ அதனை வெளிப்படையாக மக்களுக்குத் துணிவுடன் அறிவிக்க அல்லது எடுத்து வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இந்த இரண்டு அடிப்படை அம்சங்களாகிய துணிவு மற்றும் வெளிப்படையான தன்மை ஆகிய இரண்டும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களிடம் காணப்பட்டதே, அவர்களை இஸ்லாமிய வரலாறு போற்றும் மாவீரராக உயர்த்திக் காட்டிக் கொண்டிருக்கின்றது.


அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் வரைக்கும், இஸ்லாத்தின் பரம விரோதியாகவே இருந்தார். உஹத் போரிலே முஸ்லிம்கள் எளிதாக வெற்றி பெற்றிருக்கக் கூடிய அந்த வாய்ப்பை தவிடு பொடியாக்கி, தான் எந்த நோக்கத்திற்காக வந்தாரோ அந்த நோக்கத்தை அடைவதில் அவர் காட்டிய உறுதி மற்றும் தீவிரப் போக்கு ஆகியவைகள் தான் முஸ்லிம்களின் வெற்றியை நிலைகுலையச் செய்தது எனலாம். இருப்பினும், அந்தப் போரில் இறைநிராகரிப்பாளர்கள் வெற்றி பெற இயலாமல் போனதுடன், இனி நாம் முஹம்மது (ஸல்) அவர்களை வெற்றி பெற இயலாது என்ற நிலைக்கு, மன ரீதியாகத் தள்ளப்பட்டனர். முஸ்லிம்கள் நம்மை விஞ்சி விட்டார்கள், இனி அவர்களை நாம் எதுவும் செய்துவிட இயலாது என்று அனைத்து குறைஷித் தலைவர்களும் முடிவுக்கு வந்த பின்னரும், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மற்றவர்களது முடிவை மண்ணில் போட்டுப் புதைத்து விட்டு, ஒரு குதிரைப் படையை ஒருங்கிணைத்துக் கொண்டு மலைப் பகுதியில் புகுந்து முஸ்லிம்களை எதிர்த்துப் போரிட்டு, முஸ்லிம்களுக்கு கடுமையான சேதத்தோடு, உயிர் சேதத்தையும் அதிகம் ஏற்படுத்தி விட்டார் காலித் பின் வலீத் அவர்கள்.


இத்தகைய மனிதர் தான், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்பும் அதே வீரத்தோடும், விவேகத்தோடும் தான் எந்த நோக்கத்தை அடைய போர் முகத்துக்கு வந்தோமோ அந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக, வேகம் குன்றாது போரிட்டார் இந்த வீரமகன். அவர் தனது உயிரையும், பொருளையும், ஆவியையும் இறைமார்க்கத்திற்காக அற்பணித்து விட்டிருந்தார். அவர் என்றைக்கு இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டாரோ அன்றிலிருந்து, சத்தியத்தை மேலோங்கச் செய்யவும், அசத்தியத்தை வேரோடு சாய்க்கவும் போரிட்டுக் கொண்டே இருந்தார். இன்னும் மிகவும் கடுமையாக கால கட்டங்களில் கூட அவர், கொஞ்சம் கூட தடுமாற்றத்தை தன்னுடைய உள்ளத்தில் உலா விட்டதில்லை, நம்பிக்கையை இழந்து விடவில்லை.


காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் காட்டிய வீர தீர சாகசங்களை இன்றளவும் உலகம் வியந்து போற்றிக் கொண்டிருக்கின்றது. அவரது வீரம் செறிந்த அந்த தருணங்களை இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இஸ்லாத்தின் எதிரிகள் கூட போற்றும் அளவுக்கு, அவரது வீரத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். முந்தைய ஜெர்மன் படைத்தளபதியாக இருந்த ஜெனரல் அரோன் ரோம்மல் என்பவரிடம், அவருடைய வெற்றியைக் குறித்துக் கேட்ட பொழுது, நான் காலித் பின் வலீத் அவர்களது தந்திரத்தைக் கையாண்டு கொண்டிருப்பதன் மூலம் தான் இத்தகைய வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றேன் என்று பதில் கூறியிருக்கின்றார்.


ரோமப் பேரரசன் சீஸரை மண்ணுக்கு இரையாக்கி வைத்தது, காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் திட்டமிட்ட தாக்குதல்களும், அவர் தன்னுடைய படைவீரர்களை ஒருங்கிணைத்து செயலாற்றச் செய்ததது தான், அதன் காரணமாகும்.


ரோமும், பாரசீகமும் அன்றைக்கு இருந்த செல்வச் செழிப்பில் மற்றும் இராணுவ அமைப்பில் முஸ்லிம் படை அவர்களை வெற்றி கொள்வது என்பது இயலாத காரியம் என்றே, உலகத்தின் கணிப்பு இருந்திருக்கும். ஆனால், அத்தகைய படையை மண்ணோடு மண்ணாக ஆக்கி, அவர்களது பேரரசை புழுதி படியச் செய்த வரலாற்று நிகழ்ச்சியை ஏற்படுத்திக் காட்டியவர் காலித் பின் வலீத் (ரழி). சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே நடந்த அந்த இடையறாத போரில், இறைவனது துணை கொண்டு காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் வெற்றியைத் தவிர வேறெதனையும் கண்டதில்லை. தோல்வி என்பதே அவரது வரலாற்றில் இல்லை, என்ற சரித்திரத்தைப் படைத்தவர் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்


அல் முஃதா போர்


இன்றைய சிரியாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதி அல் முஃதா. இந்த இடத்தில் நடந்த போர் தான் இஸ்லாமிய வரலாற்றில் முஃதா போர் என்றழைக்கப்படுகின்றது. இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பின் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் முதன்முதலாக இந்த முஃதா போரில் சாதாரண படை வீரராகக் கலந்து கொண்டார்கள். இந்தப் போரில் கலந்து கொண்ட தளபதிகள் மூவர் ஒருவர் பின் ஒருவராக வீர மரணம் அடைந்து விட, நான்காவதாக தலைமைப் பொறுப்பை ஏற்கும் பாக்கியம், காலித் பின் வலீத் (ரழி) அவர்களிடம் வந்தடைந்தது. அப்பொழுது, முஸ்லிம்களின் படையில் வெறும் 3000 படைவீரர்கள் தான் இருந்தனர், இன்னும் அவர்கள் மிக நீண்ட காலம் போர் செய்து சற்று களைப்படைந்தும் இருந்தனர். ஆனால் எதிரிகளின் பக்கமோ 2 லட்சம் படைவீரர்களும், இன்னும் அவர்கள் முழு ஆயுத பலத்தோடும் போருக்கு வந்திருந்தனர். அவர்களின் கண்களில் போர் கனல் தெறித்துக் கொண்டிருந்தது. பின்வரும் சம்பவத்திற்குப் பின் போர் மும்மூரமாக ஆரம்பித்தது.


இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நம்பிக்கையைப் பெற்றதொரு தோழர், ஹாரிஸ் பின் அம்ர் அஸ்தி (ரழி). இந்தத் தோழர் மூலமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கடிதத்தை, பஸ்ராவின் மன்னர் ஹாரிஸ் பின் அமி ஷம்மார் கஸ்ஸானி என்பவருக்கு அனுப்பி வைத்தார்கள். அவர் செல்லும் வழியில் முஃதா என்ற இடத்தில் அமைந்துள்ள சிறு நகரமான பல்கா என்ற இடத்தை இந்தத் தோழர் அடைந்தவுடன், அந்தப் பகுதியின் கவர்னராக இருந்த சர்ஜீல் பின் அம்ர் கஸ்ஸானி என்பவர், இவரின் வருகையை அறிந்து, அந்த நபித்தோழரை கைது செய்து, கொலையும் செய்து விட்;டார். இந்தத் துயரச் செய்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடைந்தவுடன், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இதே காலகட்டத்தின் இன்னுமொரு நிகழ்ச்சியும் நடந்தது. அதாவது, ஒரு பதினைந்து நபர் கொண்ட முஸ்லிம்களின் குழு ஒன்று, சாத் அல் அத்லா என்ற பகுதியில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது, இந்தப் பதினைந்து பேர் கொண்ட குழுவும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதே கால கட்டத்தில் ரோமப் பேரரசன் மதீனாவைத் தாக்கப் போவதாகவும் அறிவித்திருந்தான்.


எனவே, மேற்கூறிய சம்பவங்கள் தான் இந்த முஃதா போர் நடைபெறுவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மிகப் பெரிய படையைத் தயார் செய்து, அந்தப் படைக்கு முதல் தளபதியாக ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்களையும், அவர் இறந்து விட்டால் பின் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களையும், இன்னும் அவரும் வீரமரணம் எய்து விட்டால், அப்துல்லா பின் ரவாஹா (ரழி) அவர்களையும் தளபதிகளாக முறையே நியமித்துக் கொள்ளும்படி, முஸ்லிம்களுக்கு அறிவுரை வழங்கி முஃதா போருக்கு முஸ்லிம் வீரர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.


இந்த மூன்று தளபதிகளும் மரணமடைந்து விட்டால், பின் படைவீரர்கள் தங்களுக்குள் கலந்தாலோசனை செய்து கொண்டு, தங்களுக்குள் ஒரு தளபதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அறிவுரையும் வழங்கி அனுப்பி வைத்தார்கள்.


ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, வெள்ளைக் கொடியைத் தனது கையில் ஏந்திய வண்ணம் போர் முகத்துக்கு தனது படையை அழைத்துச் சென்று, எந்த இடத்தில் ஹாரித் பின் அம்ர் அஸ்தி (ரழி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்களோ, அந்த இடத்திலேயே தனது படையை இறக்கி, கூடாரம் அடித்து நிலைப்படுத்தினார்கள். இன்னும் நிலைகுலையாத தன்மையையும், எதிரிகளை எதிர்க்கும் போது தங்களது பாதங்கள் உறுதியாக இருப்பதற்கும் அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.


இன்னும் வயதானவர்களையும், இன்னும் குழந்தைகளையும் பெண்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள். இன்னும் இந்த உலக வாழ்வை ஒதுக்கி விட்டு, இறைதியானத்தில் ஈடுபடக் கூடிய துறவிகள் மற்றும் சந்நியாசிகள் ஆகியோரையும் கொலை செய்வதைத் தடுத்தார்கள். இன்னும் நீங்கள் ஏற்றுக் கொண்ட உடன்படிக்கையை மீறாதீர்கள், நீங்கள் ஏற்றுக் கொண்ட அமானிதங்களையும் முறித்து விடாதீர்கள் என்று அறிவுரை வழங்கினார்கள். எந்தக் கட்டடம் தரை மட்டமாக்கப்படுவதையோ இன்னும் மரங்களை வெட்டி நிலத்தில் சாய்க்ப்படுவதையோ படைவீரர்கள் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டார்கள். தங்களது தளபதியான இறைத்தூதர் (ஸல்) அவர்களது மேற்கண்ட அறிவுரையைச் செவி மடுத்த பின், உண்மையில் மிகவும் சிரமமாக கடிமானதொரு பணியை நிறைவேற்றுமுகமாக முஸ்லிம் படைவீரர்கள் போர்க்களம் நோக்கித் தங்களது பயணத்தைத் துவங்கினார்கள். கடுமையாக நிலப்பரப்புகளின் ஊடாகப் பயணித்த பின் இறுதியாக பால்கா என்ற அந்த குறிப்பிட்ட இடத்தை முஸ்லிம்கள் அடைந்தார்கள். அந்த இடத்தை அடைந்த பின்பு, அங்கு ஏற்கனவே இவர்களை எதிர்பார்த்து, ஹிர்கல் நாட்டு மன்னன் ஒரு படையை அனுப்பி வைத்திருப்பதை அறிந்து கொண்டார்கள். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பின் கனத்தை எடை போட்டுப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்களது தோழர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்ட சத்தியத்தை நிலைநாட்டுவதற்கு, தங்களது உயிர், பொருள், ஆவி அத்தனையையும் அற்பணிக்குமுகமாக களத்தில் இறங்கினாhகள்.


தளபதிப் பொறுப்பை ஏற்றிருந்த ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்கள், தனக்குக் கீழ் உள்ள தோழர்களின் வீரத்தை ஊக்குவிக்குமுகமாக தான் வெகு விரைவாக எதிரிப்படைகளுக்குள் ஊடுறுவிச் சென்று முன்னேறிக் காட்டினார். ஒருவர் நான்கு நபரைச் சமாளித்து, அவர்களை உற்சாகப்படுத்திக் காட்டினார். எங்கும் அழிவும், மரண ஒலமும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. எதிரிகளை ஊடறுத்துச் சென்ற ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்கள் இப்பொழுது வீர மரணம் எய்தினார்கள். பின் ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். எதிரிகளை ஊடறுத்துச் செல்ல விரும்பிய ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களுக்கு, எதிரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்த காரணத்தால், அந்த வாய்ப்பு எளிதாக இருக்கவில்லை. எனவே, தான் ஏறி வந்த குதிரையில் இருந்து இறங்கி, எதிரிகளின் தலைகளைக் கொய்ய ஆரம்பித்தார். ஆனால், எதிhகளில் ஒருவன் அவரது வலது புஜத்தில் கடுமையானதொரு தாக்குதலைத் தொடுத்ததன் காரணமாக, அவரது வலது கரம் துண்டிக்கப்பட்டுக் கீழே விழுந்தது. வலது கரத்தில் ஏந்தியிருந்த கொடியை இடது கரத்திற்கு ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் மாற்றிக் கொண்டார்கள். பின் அந்த எதிரி இடது கரத்தையும் வெட்டிச் சாய்த்தான். இருப்பினும் தான் ஏந்திய அந்தக் கொடியை தரையில் விழ அனுமதிக்காத ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள், தனது கால்களைக் கொண்டு அந்தக் கொடியை ஏந்திக் கொண்டார். இறுதியாக எதிரிப்படை வீரன் கொடுத்த அடியை தாங்கவியலாத ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் வீர மரணமடைந்தார்கள். இப்பொழுது, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அறிவுரைப்படி, மூன்றாவது தளபதிப் பொறுப்பை அப்துல்லா பின் ரவாஹா (ரழி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். கீழே விழ இருந்த கொடியை கையில் ஏந்திப் பிடித்த அப்துல்லா பின் ரவாஹா (ரழி) அவர்கள், தளபதிப் பொறுப்பின் கீழ் மிகச் சிறந்த வீரத்தை காட்டி எதிரிகளைக் கலங்கடித்தபின் அவரும் வீரமரணம் எய்தினார்.


எண்ணிக்கையில் வந்த பலவீனம்


தங்களது படைத்தளபதிகளில் மூவரை ஒருவர் பின் ஒருவராக இழந்து விட்டிருந்த முஸ்லிம் படைவீரர்கள், இப்பொழுது மனதளவில் சற்று நிலைகுலைந்து போயிருந்தார்கள். இன்னும் எதிரிப் படைக்கும் முஸ்லிம் படைக்கும் இடையே இருந்த எண்ணிக்கை வித்தியாசமும் அவர்களது மனோ பலத்தை சற்று அசைத்துத் தான் பார்த்துக் கொண்டிருந்தது. வெற்றி கிடைக்குமா? என்ற அச்சமும் நிலவியது. ரோமப் படையின் எண்ணிக்கையே அவர்களை இந்த எண்ணத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருந்தது.


இன்னும் முஸ்லிம்களின் கொடி கீழே விழக் கூடிய நிலையில், எதிரிகளின் கரங்களுக்குள் சிக்கக் கூடிய நிலையில் இருந்து தப்பித்துமிருந்தது. கீழே விழ இருந்த கொடியை தாவிப் பிடித்து கைகளில் ஏந்திக் கொண்ட தாபித் பின் அர்க்கம் (ரழி) அவர்கள், தான் ஏந்திய அந்தக் கொடியை, சற்றும் எதிர்பாராத நிலையில் காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் கரங்களில் சேர்த்தார். அந்தக் கொடியை காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் கைகளில் சேர்க்கும் பொழுது, காலித் பின் வலீத் (ரழி) அவர்களே! தயவுசெய்து இந்தக் கொடியைப் பிடித்துக் கொள்ளுங்கள். இந்த மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உங்களால் தான் தலைமைப் பொறுப்பை ஏற்று, அதனை செவ்வனே நிறைவேற்ற முடியும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.


கைகளில் கொடியைப் பிடித்துக் கொண்டு, என்னருமைத் தோழரே! இது இக்கட்டான சூழ்நிலை என்பதை நானறிவேன், ஆனால் என்னை விட நீங்கள் தான் இறைநம்பிக்கையில் முந்திக் கொண்டவரும், இன்னும் பத்ருப் போரில் கலந்து கொண்ட அனுபவமிக்கவரும் கூட. எனவே நீங்கள் தான் தலைமைப் பொறுப்பிற்கு தகுதி வாய்ந்த நபர் என்று கனிந்த குரலில் கூறினார். இறைவன் மீது சத்தியாக..! உங்களது மன வலிமையும், உங்களது தியாகமும் அற்பணமும் ஏற்கனவே நிரூபணமானதொன்று. கீழே விழுந்த அந்தக் கொடியை தங்களது கைகளில் சேர்ப்பித்து விட வேண்டும் என்ற நோக்கமல்லாது வேறு நோக்கத்திற்காக நான் அதனை எடுத்துக் கொள்ளவில்லை. தயவு செய்து இந்தக் கொடியைப் பெற்றுக் கொண்டு, தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதன் மூலம் இந்த இக்கட்டான சூழ்நிலையை, தங்களது அனுபவம் மற்றும் செயல்திறன், திட்டமிடும் ஆற்றல் மூலம் சமாளித்துக் காட்டுங்கள் என்று வேண்டிக் கொண்டார்.


இராணுவத் தந்திரங்கள் மூலமாக எதிரிகளை அச்சுறுத்தக் கூடிய தலைவர் ஒருவர் தான் இப்பொழுது நமது வீரர்களுக்கு தேவைப்படுகின்றார். எதிரிகளைத் துவம்சம் செய்யும் திட்டங்களுடன் நமது வீரர்களை வழிநடத்திச் சென்று, எதிரிகளை நிலைகுலையச் செய்வதன் மூலம் நமது வீரர்கள் சற்று மனவலிமை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். பின் படையினரின் பக்கம் திரும்பிய அவர், என்னருமைத் தோழர்களே! காலித் பின் வலீத் (ரழி) அவர்களை நமது தலைவராக நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? என்று கேட்டார். அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் எங்களுக்கு தளபதியாகப் பொறுப்பேற்பதில் சந்தோஷமே என்று கூறினார்கள். இப்பொழுது, கொடியைக் கைகளில் ஏந்திக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், முஸ்லிம் படைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மிகவும் உக்கிரமாக நடந்த அந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஒரு வாள் உடைந்து போக இன்னொரு வாளை மாற்றி மாற்றி.., இவ்வாறாக அந்தப் போரில் ஒன்பது வாள்களைப் பயன்படுத்;தி எதிரிகளைத் துவம்சம் செய்தார்.


எதிரிகளுடன் ஒப்பிடும் பொழுது, முஸ்லிம் படைவீரர்கள் மிகக் குறைந்த அளவே இருந்தனர். காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தந்திரமும், போர் திட்டங்களும் எதிரிகளின் திட்டங்களை தவிடுபொடியாக்கின. ஒரு சில முஸ்லிம் வீரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை மறைந்திருக்கச் செய்து, திடீரென போர்க்களத்திற்குள் நுழையுமாறு பணித்தார்கள். திடீரென ஏற்பட்ட இந்த போர்க்களச் சூழலில், ஏற்பட்ட புழுதிப் படலம் மற்றும் ஆரவாரம் எதிரிகளை நிலைகுலையச் செய்தது. திடீர் திடீர் என வந்து போர்க்களத்திற்குள் குதித்த முஸ்லிம்களைப் பார்த்த ரோமப் படைகள், புதிய படைப் பிரிவு வந்து கலந்து கொண்டிருக்கின்றது என்று நினைத்து, அச்சத்திற்குள்ளாயினர்.


ரோமப் படைவீரர்களின் இந்த மனநிலைத் தடுமாற்றத்தைத் தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், எதிரிகளின் வளையத்திலிருந்து தனது படைவீரர்களை பாதுகாப்பான பகுதிக்கு அனைவரையும் அப்படியே, ஒதுக்கி அழைத்துச் சென்று விட்டார்கள். இதற்கு முன்பு ரோமர்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற மமதையில் இருந்தார்கள். ஆனால், முஸ்லிம்களோ அவர்களின் ஒருவரையும் உயிருடன் போர்க்களத்திலிருந்து திருப்பி அனுப்பவில்லை. அவர்களது நம்பிக்கைக்கும் காரணமிருந்தது. அதுவென்னவெனில், சற்று சில காலங்களுக்கு முன்பு தான் பாரசீகத்தை அவர்கள் வெற்றி கொண்டிருந்தார்கள். அந்த வெற்றிப் போதையானது, எண்ணி விடக் கூடிய அளவிற்கு இருந்த முஸ்லிம்களையும், வெகு எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற போதையை ஏற்றி இருந்தது.


இறைவன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு வழங்கியிருந்த அந்த ஆற்றல்களும், திட்டமிடல்கள், வீரம், நிலைகுலையாத தன்மை ஆகியவற்றின் காரணமாக, எதிரிகளை வென்றெடுக்கக் கூடிய ஆற்றலைத் தந்திருந்தான்.


முதல் நாள் போரிலேயே காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஒரு வாள் உடைந்து போக மறுவாள் என்று, ஒன்பது வாள்களை அவர் மாற்றி மாற்றி போர் செய்தததைப் பார்த்து விட்ட, ரோமர்கள் இனி நாம் ஒருக்காலும் வெற்றி பெற முடியாது என்ற நிலைக்கு வந்து விட்;டனர். இரண்டாவது நாள் போரில், எதிரிகளுக்கு அச்சத்தை ஊட்டி, அந்த அச்சத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதோடல்லாது, தனது படைவீரர்களை மீண்டும் ஒருங்கிணைத்து, எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்திச் சென்றதையும் அவர்கள் கண்டு விட்டு, இனி வெற்றி என்பது இல்லை என்ற முடிவுக்கே வந்து விட்டனர். மோசமான, மிகவும் ஆபத்தான இந்தச் சூழ்நிலையில் தனது படைவீரர்களை ஒருங்கிணைத்து அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்திச் சென்றதோடல்லாமல், எதிரிகளையும் நிலைகுலையச் செய்த காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் திட்டம், இன்றைக்கும் உலகப் போர் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.


மக்கா வெற்றி


காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்பு நடந்த முக்கியமான நிகழ்;ச்சி மக்கா வெற்றியாகும். இந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை பனூ சலீம், பனூ கஸீமா, பனூ ஃகஃப்பார் மற்றும் பனூ ஜஹீனா ஆகிய குலங்களை ஒருங்கிணைத்த படைப்பிரிவுக்கு தளபதியாக நியமித்து, மக்காவின் கதா என்ற பகுதியின் வழியாக நுழையும்படிப் பணித்தார்கள். இன்னும், மக்காவிற்குள் நுழையும் சமயத்தில் மக்கா வாசிகளில் எந்தக் குலமாவது உங்களை எதிர்த்தால் என்னுடைய அனுமதியைப் பெற்றுக் கொண்ட பின்பு, அவர்களுடன் போர் புரியுங்கள், எந்த எதிர்ப்பும் இல்லை என்று சொன்னால், எந்த நிலையிலும் போரை நீங்களாகத் துவங்க வேண்டாம் என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள். இன்னும் உங்களது ஒவ்வொரு முயற்சியிலும், இந்தப்புனித நகரத்தில் எந்தவித இரத்தமும் சிந்தப்படக் கூடாது, இந்த நகரத்தின் புனிதத் தன்மை கெட்டு விடாது பாதுகாப்பதில் குறியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். மக்கா வெற்றியின் பொழுது, 10 ஆயிரம் முஸ்லிம் வீரர்கள் கலந்து கொண்டார்கள், இந்த எண்ணிக்கையானது மக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் எண்ணிக்கையை விட அதிகமானதாகும். எனவே மக்காவின் சூழ்நிலை இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கும் நிலையில் இல்லை. மக்காவை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிக எளிதாகவே எந்தவித இரத்த சிந்தப்படாது வெற்றி கொண்டார்கள்.


இருப்பினும், இக்ரிமா பின் அபீ ஜஹ்ல், சஃப்வான் பின் உமைய்யா, சஹ்ல் பின் அம்ர் ஆகியோரின் தலைமையில் திரண்ட மக்கத்து குறைஷி வாலிபர்கள், காலித் பின் தலைமையில் மக்காவிற்கு நுழைந்து கொண்டிருந்த படைப்பிரிவை தடுத்து நிறுத்தும் நோக்குடன், கந்தமா என்ற இடத்தில் திரண்டார்கள். முஸ்லிம்களின் படைப்பிரிவுக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமை தாங்கி வருவதைக் கண்ட அவர்கள் தாங்கள் வெற்றி பெறுவோம் நம்பிக்கையை இழந்த அவர்களது, வாள்களும், ஆயுதங்களும் ஏன் பாதங்களும் கூட ஆட்டம் கண்டன. இந்தப் போரில் பனூ பக்ர் மற்றும் பனூ கதீலைச் சேர்ந்த 12 ஆண்கள் கொல்லப்பட்டார்கள். இரண்டு முஸ்லிம்கள் தங்களது பாதையைத் தவற விட்டதன் காரணமாக வேறு இடங்களுக்குப் போய் விட்டார்கள். இந்த இருவர் தான் முஸ்லிம்களின் தரப்பில் உயிரிழந்தவர்கள். இது தவிர 10 ஆயிரம் படைவீரர்களைக் கொண்ட முஸ்லிம் படை மக்காவிற்குள் எந்த எதிர்ப்பும் இன்றி, இரத்தம் சிந்தாமல் உள்ளே வெற்றியுடன் நுழைந்தது. இந்த வெற்றி ஹிஜ்ரி 8 ல் ரமளான் மாதம் 12 ம் நாள் வெள்ளிக் கிழமை நிகழ்ந்தது.


மக்காவை வெற்றி கொண்டபின், முழு மக்காவையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பின்னர் கஃபாவிற்குள் நுழைந்தார்கள். கஃபாவிற்கு உள்ளும் புறமும் இருந்த இணைவைப்பின் அழுக்குகளை அகற்றினார்கள். அங்கிருந்த சிலைகளை அப்புறப்படுத்தினார்கள். அதன் பின் பொது மன்னிப்பை அறிவித்தார்கள்.


•⚫ யார் ஹரம் என்று சொல்லக் கூடிய கஃபா பகுதியில் நுழைந்தாரோ அவர் பாதுகாக்கப்பட்டவராவார்.


• ⚫யார் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து விடுகின்றாரோ, அவரும் பாதுகாப்புப் பெற்றவராவார்.


• ⚫தங்களது வீட்டுக் கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு, வீட்டுக்குள் இருப்பவரும் பாதுகாப்புப் பெற்றவராவார்.


• ⚫இன்னும் அபூசுஃப்யானின் வீட்டிற்குள் நுழைந்து கொண்டவர்களும் பாதுகாப்புப் பெற்றவர்களாவார்கள்.


இறைத்தூதர் (ஸல்) அவர்களது இந்த பரந்த மனம் படைத்த அறிவிப்பின் காரணமாக, அப்பாஸ் (ரழி) அவர்களின் உதவியுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கவனத்தைக் கவர்ந்த அபூசுஃப்யான் அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் திருக்கரங்களைப் பற்றிக் கொண்டு, முழு மனதுடன் இறைமார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்கள்.


முஸ்லிம்கள் புடை சூழ இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஸீ தவா என்ற பெருவெளியில் நின்று கொண்டிருந்த பொழுது, அவர்களது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் ஆறாய் ஓடியது. அப்பொழுது, இதே மக்காவில் தன்னை மிக அநியாயமாக ஊரை விட்டே விரட்டி விட்ட அந்த சோக நாட்களையும் நினைத்துப் பார்த்தார்கள். ஆனால் அதே நகரம் இன்றைக்கு தனது இறக்கையைத் தாழ விரித்துக் கொண்டு, தன்னை வரவேற்கத் திரண்டு நிற்பதை இட்டு, ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. இதே நகரத்தில் தானே லாத்தையும், உஸ்ஸா வையும் தங்களது இணைத் தெய்வங்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டும், இதனை ஏற்க மறுத்து ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கியதோடு, அதில் சிலரது இரத்தத்தையும் இந்தப் புனித பூமியில் ஓட்டிய இவர்கள் தான் இன்றைக்கு, தங்களுக்கு முஹம்மது அவர்கள் மன்னிப்பு வழங்க மாட்டாரா? என்று ஏங்கி நிற்கின்றார்கள். இப்பொழுது உயிர்ப் பிச்சை கேட்டு நிற்கின்றார்கள்.


இன்னும் ஷாப் அபீதாலிப் என்ற கணவாயில் வைத்து, பசிக் கொடுமையில் முஸ்லிம்களை வறுத்தெடுத்தவர்களும் இவர்கள் தானே. இன்றைக்கு அதே மக்கள் தங்கள் மீது கருணை காட்டும்படி வேண்டி நிற்கின்றார்கள்.


இந்த மாற்றத்தை ஏற்படுத்தித் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துமுகமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள், சிரம் பணிந்து வெற்றியை அளித்த இறைவனுக்கு நன்றி கூறினார்கள்.


இணைவைப்பின் கோட்டை தகர்க்கப்படல்


மக்காவிற்குப் பின் ஐந்து நாட்கள் கழித்து, காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையில் 30 முஸ்லிம் படைவீரர்களை நக்லா என்ற இடத்திற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இந்த இடத்தில் தான் மக்கத்துக் குறைஷிகளும், இணைவைப்பாளர்களும் அபயம் தேடி இருந்து கொண்டு, அங்கு உஸ்ஸா என்ற தெய்வத்திற்கு சிலை எடுத்து கோயில் ஒன்றையும் நிர்மாணித்து வைத்திருந்தனர். இணைவைப்பாளர்களின் இந்த கோயிலையும், அவர்கள் அபயம் புகுந்திருந்த அந்த கோட்டையையும் தகர்த்தெறியுமாறு காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் சென்ற படைக்கு உத்தரவு பிறக்கப்பட்டது. மேற்கண்ட இந்த நடவடிக்கை இறைநிராகரிப்பாளர்களுக்கு மத்தியில் கடுமையான எதிர்விளைவை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் போர்க்குணம் படைத்த, பயமறியாது போரிடக் கூடிய கன்னானா மற்றும் மஸார் குலத்தவர்களிடையே இந்த போர் நடவடிக்கை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த உஸ்ஸா தெய்வத்திற்காக கட்டப்பட்ட கோயில், பனூ ஹிஸாம் குலத்தின் துணைக் கோத்திரமான பனூ ஷைபான் குலத்தின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்தது. இந்தப் படையெடுப்பு ஒன்றும் மிகவும் எளிதானதொரு செயலல்ல. மாறாக அது இணைவைப்பின் கோட்டையாகத் திகழ்ந்து கொண்டிருந்ததால், இறைநிராகரிப்பாளர்கள் வெகு எளிதாக அதனைக் கைப்பற்ற முஸ்லிம்களை விட்டு விட மாட்டார்கள். ஆனால் காலித் பின் வலீத் (ரழி) அவர்களும், அவர்களது படையினரும் கொண்ட இறைநம்பிக்கையின் தாக்கத்தால், அந்தக் கடுமையான பணியை மிக இலகுவாக முடித்துக் காட்டினார்கள். உஸ்ஸா துண்டு துண்டாக நொருக்கித் தள்ளப்பட்டது.


ஓ உஸ்ஸாவே, நீ ஒரு பொய்க் கடவுள், உனக்கு எந்தப் புகழும் கிடையாது, எந்த இறைத்தன்மையும் கிடையாது. புகழுக்குரிய நாயனான அல்லாஹ் உனது தரத்தைத் தாழ்த்தி விட்டான், எனது கைகளினால் உன்னைச் சிறுமைப்படுத்தி விட்டான் என்று முழங்கிக் கொண்டே அதனைத் துண்டு துண்டாக ஆக்கிய காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், பின் அந்தத் துண்டுகளை ஒன்றிணைத்து தீ வைத்துக் கொளுத்தி விட்டார்.


மக்கா வெற்றிக்குப் பின், மக்காவைச் சுற்றிலும் உள்ள பகுதிகளுக்கு இஸ்லாத்தின் தூதைப் பற்றி எடுத்துச் சொல்வதற்காக பல்வேறு குழுக்கள் அனுப்பப்பட்டன. அப்படி அனுப்பப்பட்ட குழு ஒன்றுக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அவ்வாறு இவரின் தலைமையின் கீழ் அனுப்பப்பட்ட குழுவில், பைஅத்துர் ரிழ்வான் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தின் பொழுது கலந்து கொண்ட, மதிப்புமிக்க நபித்தோழர்களான அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி), அப்துல்லா பின் உமர் (ரழி) போன்றவர்கள் இருந்தார்கள்.


பனூ கஸீமா என்றொரு நகரம் மக்காவில் இருந்து ஒரு நாள் பயண தூரத்தில் இருந்தது. காலித் பின் வலீத் (ரழி) தலைமையில் ஒரு குழு அவர்களது நகரத்தை நெருங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த அந்த நகரத்து மக்கள், நகரை விட்டு வெளியே ஆயுதங்களுடன் வந்து நின்றனர். அவ்வாறு நின்ற அந்த மக்களைப் பார்த்து காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா? என்று கேடடார். அதற்கு அந்த மக்கள் நாங்கள் சாபியீன்கள் – அதாவது எந்த மதத்தையும் ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்கள் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட காலித் பின் வலீத் (ரழி) உடனே அந்த மக்கள் மீது போர் தொடுத்தார்கள். சிலர் கொல்லப்பட்டனர். பலர் பயந்து தங்கள் வீடுகளுக்குள் ஒளிந்து கொண்டார்கள். வெகு சீக்கிரமே அவர்களது இல்லங்களிலிருந்து வெளிக் கொணரப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இன்னும் மறுநாள் அவர்கள் கொலை செய்யப்பட இருக்கின்றார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த உத்தரவுக்கு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) மற்றும் அப்துல்லா பின் உமர் (ரழி) போன்ற நபித்தோழர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அவர்களைக் கொலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். இன்னும் அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம்களாகி விட்டவர்கள் என்று நாங்கள் கேள்விப்படுகின்றோம் என்றும் இருவரும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.


அவர்கள் முஸ்லிம்கள் என்று சொன்னால் ஏன் என்னிடம் சாபியீன்கள் என்று கூற வேண்டும். தயக்கமில்லாது நாங்கள் முஸ்லிம்கள் என்று அவர்கள் கூறியிருக்கலாமே என்று காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தனது தோழர்களிடம் கருத்துத் தெரிவித்தார்கள். அவர்கள் பயன்படுத்தி சாபியீன்கள் என்ற வார்த்தை மூலம் அவர்கள் இஸ்லாத்தை விரும்பவில்லை என்றல்லவா தெரிகின்றது என்றும் கேட்டார்கள். இன்னும் இதனால் இவர்கள் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்று காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தனது கருத்தைக் கூறினார்கள்.


இமாம் இப்னு தமீமா, அல்லாமா ஐனி மற்றும் ஹாபிஸ் இப்னு ஹஜர் போன்ற அறிஞர் பெருமக்கள் கூறுவதாவது, அந்த பனூ குஸமா கோத்திரத்து மக்கள், நாங்கள் முஸ்லிம்கள் தான் என்ற பதிலைத் தெளிவாகத் தெரிவித்திருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.


இது தான் ஒரு படைத்தளபதியின் அடிப்படைக் குணாதிசயங்களும், பண்புகளுமாகும், அவர்கள் தங்களது நேரங்கள் விரையமாகுவதை விரும்ப மாட்டார்கள். இக்கட்டான சூழ்நிலையில் மிக விரைந்து முடிவெடுத்து, பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வருவதையே விரும்புவார்கள். எனவே தான் அவர்கள் தங்களது உதடுகளில் சாபியீன்கள் என்ற வார்த்தையை மொழிந்ததுடன், இவர்கள் இஸ்லாத்தை விரும்பவில்லை என்பதை முடிவெடுத்து விட்டார், இன்னும் எந்த முஸ்லிமும் நான் இறைநம்பிக்கை கொண்டவனல்லன் என்ற பொருள் கொண்ட வார்த்தையை என்றைக்கும் மொழிய மாட்டான். எனவே தான் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், உடனே தனது நடவடிக்கையைத் தொடுத்து விட்டார்கள். பனூ குஸாமா குலத்தவர்களின் இந்த தவறான நடவடிக்கையின் காரணமாக அவர்கள் கடுமையான உயிர்ச் சேதங்களையும், பொருட் சேதங்களையும் அடைந்து விட்டார்கள்.


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்த போதிலும், காலித் பின் வலீத் (ரழி) அவர்களை எந்த விதத்திலும் குற்றப்படுத்திப் பார்க்கவில்லை. ஏனெனில் இது முற்றிலும் தவறான புரிந்துணர்வின் காரணமாக எழுந்த நடவடிக்கை தான் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புரிந்து கொண்டது தான் காரணமாகும். பனூ குஸாமா குலத்தவர்களுக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதங்களுக்கும், இன்னும் பொருட்சேதங்களையும் ஈடு செய்யும் பொருட்டு, பொருட்களையும், செல்வங்களையும் கொடுத்து அதற்கு ஈடுசெய்து விட்டு வருமாறு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அலி (ரழி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். இந்த சம்பவத்திற்குப் பின்பும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பல போர்களுக்கு தளபதியாக நியமித்து, காலித் பின் வலீத் (ரழி) அவர்களை அனுப்பி வைத்திருக்கின்றார்கள் என்பதன் மூலம், காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் சிறப்புக்களை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது


ஹுனைன் யுத்தம்


ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதாஸ் மலைக்கருகில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஹவாஸான் என்ற போர்க்குணம் படைத்த குலத்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்தப் பகுதியில் இவர்களின் கிளைக் குலத்தவர்கள் பரவி வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் மிகச் சிறந்த வில் வித்தையில் கெட்டிக்காரர்களும் கூட. இவர்கள் ஆரம்பம் முதலே, முஸ்லிம்களை நோக்கி எதிர்த் தாக்குதல் தொடுப்பதற்கு முயற்சி செய்து வந்தவர்கள். மக்கா வெற்றிக்குப் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இந்தக் குலத்தவர்களது நடவடிக்கைகளுக்குப் பதில் நடவடிக்கை எடுக்க விரும்பினார்கள்.


எனவே, இந்தக் குலத்தவர்களுக்கு எதிரான இந்தப் போரில் கலந்து கொள்வதற்காக பத்தாயிரம் பேர் கொண்ட படை ஒன்று மதீனாவில் இருந்து வந்திறங்கியது. இன்னும் மக்காவில் இருந்து இரண்டாயிரம் படைவீரர்கள் சேர்ந்து கொள்ள, ஆக மொத்தம் 12 ஆயிரம் படைவீரர்களுடன் ஹ{னைனை நோக்கி இஸ்லாமியப் படை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் நகர்ந்தது.


இந்தப் படையின் பல பிரிவுகளுக்கு பல தலைவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதில் முஹாஜிர்களுக்குத் தலைவராக உமர் (ரழி) அவர்களும், அவ்ஸ் குலத்தைச் சேர்ந்த அஸீத் பின் ஹீஸைர் (ரழி) அவர்கள் கொடியை ஏந்திக் கொள்பவராகவும், சஅத் பின் இபாதா (ரழி) அவர்கள் கஸ்ரஜ் குலத்தவர்களுக்கும், இன்னும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பனூ சலீம் குலத்தவர்களுக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமையில், ஹ{னைன் பெருவெளியை, ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 10 ஆம் நாள் அன்று அடைந்தார்கள்.


காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் அனுப்பப்பட்ட படை முன்னணிப் படையாக அனுப்பப்பட்டது. எதிரிகளின் படையோ வெறும் நான்காயிரம் மட்டுமே இருந்தது. இதனைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள், *நிச்சயம் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்ற உறுதியான நம்பிக்கைக்கு வந்து விட்டார்கள். ஆனால், இதற்கு முன் நடைபெற்ற பல போர்களில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும், இறைவனின் உதவியினால் தான் நாம் அந்த வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது என்ற நம்பிக்கைக்கு அவர்கள் வராமல்*, நாம் எண்ணிக்கையில் அதிமாக உள்ளதால் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீருவோம் என்ற தவறான முடிவுக்கு வந்ததன் காரணமாக, *இறைவன் அங்கு சோதனையை அவர்களுக்கு ஏற்படுத்தினான். எளிதாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய வெற்றியை மிகவும் கடினமாக மாற்றிக் காட்டினான்.* இதனைத் தான் இறைமறைக்குர்ஆன் இவ்வாறு விளக்குகின்றது.


*நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல போர்க்களங்களில் உதவி செய்திருக்கின்றான். (நினைவு கூறுங்கள்). ஆனால் ஹ{னைன் (போர் நடந்த) அன்று. உங்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை, (மிகவும்) பரந்த பூமி உங்களுக்கு (அப்போது) சுருக்கமாகி விட்டது. அன்றியும் நீங்கள் புறங்காட்டிப் பின்வாங்கலானீர்கள். பின்னர் அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன்னுடைய சாந்தியை இறக்கியருளினான். நீங்கள் பார்க்க முடியாப் படைகளையும் இறக்கி வைத்தான். (அதன் மூலம்) நிராகரிப்போரை வேதனைக்குள்ளாக்கினான் – இன்னும் இதுவே நிராகரிப்போரின் கூலியாகும். (9:25-26)*


பனூ தக்கீஃப் மற்றும் ஹவாஸான் ஆகிய குலத்தவர்கள் பதுங்கி இருந்து கொண்டு தாக்குதலுக்குத் தயாராக இருந்த அவர்கள், காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் வரும் படைவீரர்கள் இவர்களது எல்லைக்குள் நுழைந்ததும், அம்பு மழையைப் பொழிய ஆரம்பித்தார்கள். நாம் வேரறுக்கப்பட்டு விட்டோம் என்று எண்ணுமளவுக்கு இறைநிராகரிப்பாளர்களின் தாக்குதல்கள் இருந்தன, இன்னும், இந்தத் தாக்குதல்களைச் சமாளிக்க இயலாத முஸ்லிம்கள், எதிர்த்தாக்குதலைத் தொடுப்பதை விட்டு விட்டு விரண்டோட ஆரம்பித்தார்கள். குதிரைகளும், ஒட்டகங்களும் எந்தப் பக்கம் திரும்பினவோ, அந்தப் பக்கமாக கிடைத்த வழிகளை பயன்படுத்தி ஓட்டமெடுக்க ஆரம்பித்தன. எங்கும் மரணக் கூச்சல் ஆர்ப்பரித்தது. இன்னும் ஒரு சில முஸ்லிம் வீரர்கள் தான் தங்களது தலைமைக்குக் கட்டுப்பட்டு, நிலைகுலையாமல் தங்களுடைய தலைமைகளுடன் களத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஒட்டு மொத்த தளபதியாகச் சென்றிந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்பொழுது முஸ்லிம்களைப் பார்த்த அறைகூவல் விடுக்கலானார்கள் :


*நிச்சயமாக சந்தேகமின்றி, நான் இறைத்தூதராவேன். நான் அப்துல் முத்தலிப் அவர்களின் மகனுமாவேன்* என்று கூறி விட்டு,


*உங்களது கண்களால் என்னைப் பாருங்கள், உங்களுக்கு முன்பாக நான் நின்று கொண்டிருக்கின்றேன், இன்னும் உறுதியாகவும், நிலைகுலையாமலும், இன்னும் (எதிரிகளைக் கண்டு) பயந்து ஓடாமலும்..!*


அப்பாஸ் (ரழி) அவர்கள் பின்பு கூவி அழைக்கலானார்கள்..!


*இறைநம்பிக்கையாளர்களே! எங்கே ஓடுகின்றீர்கள்? உங்களது தூதரின் பக்கம் திரும்பி வாருங்கள். வல்லமை மிக்க அல்லாஹ்வின் தூதர் உங்களை அழைக்கின்றார்! திரும்பி வாருங்கள்..! இன்னும் உங்களது தூதர் (ஸல்) பக்கம் வாருங்கள்* என்று உரக்கக் கூவி அழைக்கலானார்கள்.


அப்பாஸ் (ரழி) அவர்களின் ஓங்கிய குரலோசையைச் செவிமடுத்த நபித்தோழர்கள் அனைவரும், ஆகா..! நாம் தவறு செய்து விட்டோமே..! என்று வருந்தியவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக மீண்டும் திரும்பி வந்தார்கள். இன்னும் அவர்கள் குரல் கொடுத்தவர்களாக..!


*ஓ! அல்லாஹ்வின் தூதரவர்களே! உங்களது அழைப்பைக் கேட்டு நாங்கள் திரும்பி வந்து விட்டோம்* என்று மறுமொழி கூறினார்கள்.


சிதறி ஓடிய நபித்தோழர்கள் இப்பொழுது, தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு, இழந்த சக்தியை மீண்டும் பெற்றவர்களாக எதிரிகளை நோக்கிப் பாய ஆரம்பித்தார்கள். இப்பொழுது எதிரிகள் நபித்தோழர்களின் தாக்குதல்களைச் சமாளிக்க இயலாமல், பின் வாங்கினார்கள். சிறிது நேரத்திற்குள்ளாக..! போர்க்களக் காட்சிகள் முற்றிலும் மாறி விட்டன.


காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் கூர்மையான வாள், எதிரிகளின் படைகளை குத்திக் கீறிக் கொண்டு சென்றதோடல்லாமல், எதிர் கொண்ட அத்தனை எதிரிகளையும் துவம்சம் செய்ய ஆரம்பித்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களது உரை மற்றும் இறைநம்பிக்கையின் மீது கொண்ட ஆவலில் பிறந்த உயிர்த் துடிப்பான சக்தியானது, இப்பொழுது இறைஉவப்புப் பெற்றுத் தரக் கூடிய, மரணத்தைச் சுவைத்துப் பார்ப்பதற்காக கொழுந்து விட்டெறிந்த ஆவலாக மாறியது, சிங்கத்தைப் போல எதிரிகளை எதிர்த்துப் போராடத் தூண்டியது. இந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன. இறுதியாக முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது. காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான காயங்கள், ரணத்தைத் தராமல் வெற்றியின் களிப்பை அனுபவித்துக் கொண்டிருந்தன. இன்னும், தனது அபிமானமிக்க படைத்தளபதி காயத்தால் துவண்டு கிடப்பதை காண விரைந்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்களது காயங்களைப் பார்க்க வந்ததும், அதுவே தனக்குக் கிடைத்த மிகப் பெரும் பாக்கியமாகக் கருதிய காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு, சந்தோஷம் கரையுடைத்துச் சென்றது. இன்னும் *இறைத்தூதர் (ஸல்) அவர்களது மலரிதழ்களிலிருந்து, எச்சிலை உமிழ்ந்து, காலித் பின் வலீத் (ரழி) அவர்களது காயங்களில் தடவி விட்டு, விரைந்து ஆறுவதற்கு பிரார்த்தித்தார்கள்.*


ஹுனைன் போரில் வெற்றி பெற்ற பின்பு, இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் சிறிது காலம் அங்கே தங்கியிருந்து, காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையையும், ஓய்வும் எடுத்துக் கொண்டார்கள். இன்னும் தோற்று ஓடிய சில எதிரிகள் தாயிஃப் நகரத்தில் திரண்டு கொண்டிருப்பதாகச் செய்தியைக் கேள்விப்பட்டார்கள். தாயிஃப் நகரம் இரண்டு மலைகளுக்கிடையில் அமைந்த, விவசாய வளமிக்க மற்றும் குளிர்ச்சியான நகரமும் கூட. இங்குள்ள தண்ணீர் ஊற்றுக்களும், கனிவர்க்கமும், காய்கறி வர்க்கமும் பிரசித்தி பெற்றவை.


இந்த நகரம் தான் முந்தைய மக்கா வாழ்க்கையில் ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் தூதை எடுத்து வைக்கச் சென்ற பொழுது, இஸ்லாத்தை இதமாக வரவேற்பதற்குப் பதிலாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கியதோடு, இரத்தம் சொட்டச் சொட்ட வெளியேற்றியது. இஸ்லாத்தைப் புறக்கணித்தது. படுகாயமடைந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்திற்குள் சென்று தஞ்சமடைந்தார்கள்.


இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு நேர்ந்த இந்தக் கொடுமைகளையும், இரத்தம் சொட்டச் சொட்ட மரநிழலில் அமர்ந்திருப்பதைக் கண்ட வானவர்கள், உங்களைத் துன்புறுத்திய இந்த மக்களை இந்த இரு மலைகளுக்கு இடையே வைத்து நாங்கள் நசுக்கி, அழித்து விடுகின்றோம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்ட பொழுது, அதற்கு அனுமதி மறுத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், நான் மக்களைத் துன்புறுத்துவதற்காகவோ அல்லது அழித்தொழிப்பதற்காகவோ அனுப்பப்பட்ட தூதனல்ல, இன்றில்லா விட்டாலும் நாளை இவர்களது சந்ததியினராவது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் கூடுமல்லவா? என்று விளக்கமளித்தார்கள். அன்றைக்கு இரத்தம் சொட்டச் சொட்ட வெளியேற்றப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இன்றைக்கு அதே நகரத்தில் ஒரு மிகப் பெரிய படையின் தலைமைத் தளபதியாக உள்ளே நுழைகின்றார்கள். நுழைந்ததோடு மட்டுமல்லாது அன்றைய மிகப் பெரிய குலங்களாக விளங்கிய பனூ கவஸான் மற்றும் அவர்களது நட்புக் குலங்களுக்கு எதிராகவே படை நடத்தி வந்திருந்தார்கள். பனூ கவஸான்கள் முஸ்லிம்களின் மிகப் பெரிய படையைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, பனூ தக்கீப் குலத்தவர்கள் தங்களது கோட்டைக்குள் சென்று ஒளிந்து கொண்டார்கள்.


கோட்டையை முற்றுகையிட்ட முஸ்லிம்கள், இப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் வழியாக.., எதிரிகளே…! எங்களை நேரில் வந்து சந்தியுங்கள்…!! என்று அறைகூவல் விட்டுக் கொண்டிருந்தார்கள். காலித் பின் வலீத் (ரழி) அவர்களோ சளைக்காது எதிரிகளை நோக்கி அறைகூவல் விட்டுக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களின் அறைகூவலை நேரில் வந்து சந்திக்கத் திராணியற்ற எதிரிகள் கோட்டைக்குள் பாதுகாப்பாக இருந்து கொண்டார்கள். இன்னும் கோட்டைக்குள் ஒரு வருடத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள், தண்ணீர் போன்றவற்றையும் அவர்கள் முன்பே சேகரித்தும் வைத்திருந்தார்கள். இதே நிலை தொடர்ந்து கொண்டிருந்த பொழுது, முற்றுகையைக் கைவிடுமாறு அபுபக்கர் (ரழி) அவர்கள் ஆலோசனை கூற, இறைத்தூதர் (ஸல்) அவர்களும் சம்மதித்த பின் முற்றுகையானது 18 நாட்களுக்குப் பின் கைவிடப்பட்டது. முற்றுகை கைவிடப்பட்ட சிறிது நாட்களுக்குள் பனூ கவாஸான் மற்றும் பனூ தக்கீப் குலத்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். முற்றுகையின் பொழுது, காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் காட்டிய வீரம், மற்றும் கொண்ட கொள்கையில் உறுதி, அற்பணிப்பு ஆகிய அனைத்தும் இணைந்து இஸ்லாத்தினை மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற அவரது உறுதியை வெளிப்படுத்திக் காட்டியது. சந்தேகமில்லாமல் ஒவ்வொரு தளபதிக்கும் இந்த பேரார்வம் இருக்க வேண்டியது அவசியமும், இன்னும் இது தான் தலைமைக்கே உரிய பண்புமாகும்.


பனூ கவஸா என்பது பனூ முஸ்தலக் என்ற குலத்தின் ஒரு கிளையினராவர். இந்தக் குலத்தவர்கள் ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு வாக்கில் இஸ்லாத்தினை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பி, அந்த மக்களிடம் ஜகாத் என்ற ஏழை வரியை வசூலித்து வரும்படி அனுப்பி வைத்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து பிரதிநிதிகளின் குழு ஒன்று வருவதை அறிந்து, அந்தக் குலத்தலைவர்கள் தங்களது இருப்பிடத்தை விட்டு வெளிக்கிளம்பி, புறநகர்ப் பகுதிக்கு வந்து வரக் கூடிய தலைவர்களை வரவேற்கக் காத்திருந்தார்கள். பிரதிநிதிகள் நகரை நெருங்க, அவர்களை எதிர்கொண்டழைப்பதற்க்காக தலைவர்கள் வருவதைத் தவறாகப் புரிந்து கொண்ட பிரதிநிதிகள், அவர்கள் தங்களைத் தாக்கத் தான் வருகின்றார்கள் என நினைத்து, பயந்தவர்களாக மதீனாவிற்கே மீண்டும் திரும்பி வந்து விடுகின்றார்கள். இன்னும் பனூ முஸ்தலக் குலத்தவர்கள் ஜகாத் தர மறுத்து விட்டார்கள் என்ற செய்தியை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரதிநிதிகள் கூறியவுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேரதிர்ச்சி அடைந்தார்கள். மேலும், இது விஷயமாக அவர்கள் மீது போர் தொடுப்பதற்கு முன்பு, காலித் பின் வலீத் (ரழி) தலைமையில் ஒரு குழுவை அனுப்பி உண்மை நிலவரத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரும்பியதோடல்லாமல், காலித் பில் வலீத் (ரழி) தலைமையில் ஒரு குழுவையும் அனுப்பி வைத்தார்கள். இக்குழுவுக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்களைத் தேர்ந்தெடுத்ததன் காரணமென்னவெனில், அவர்களின் தொலைநோக்குப் பார்வை, அறிவு மற்றும் நிரம்பிய பல தகுதிகள் தான் காரணமாகும் என்பதில் சந்தேகமில்லை.


இன்னும் அந்த மக்களைச் சந்திக்குமிடத்து எந்தவித உணர்ச்சிகளுக்கும் இடங்கொடாமல், நிலைமையை நன்கு அவதானித்து நடந்து கொள்ளும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்கள். இன்னும் பொறுமையும், சகிப்புத் தன்மையும் தான் இந்த நேரத்தில் அதிகம் தேவைப்படக் கூடிய நற்பண்புகளாகும் என்றும் அவர்கள் கூறினார்கள்.


காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பனூ முஸ்தலக் குலத்தவர்களின் இருப்பிடத்தை இரவின் நடுப்பகுதியில் அடைந்தார்கள். நகரின் நிலவரத்தை சரியாகக் கணிப்பிட வேண்டும் என்று நினைத்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், தனது தோழர் ஒருவரை மாறுவேடம் அணியச் செய்து நகருக்குள் அனுப்பி வைத்தார்கள். மாறுவேடம் அணிந்து நகருக்குள் சென்ற அந்த மனிதர் திரும்பி வந்து, நிச்சயமாக அந்த மக்கள் முஸ்லிம்கள் தான். அவர்கள் அதிகாலைத் தொழுகையை பள்ளிவாசலில் நிறைவேற்றுவதைக் கண்டேன், இன்னும் அவர்கள் குறைவான மக்கள் தொகையினராகத் தான் இருக்கின்றார்கள் என்றும் கூறினார். இதனைக் கேட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் சந்தோஷமடைந்தவர்களாக, அவர்களது நல வாழ்வுக்காகவும், மறுமைக்காகவும் பிரார்த்தித்தார்கள்.


அதிகாலை நேரம் சற்று வெளிச்சம் பரவியதும் தானே நகருக்குள் சென்று, நகரின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், ஜகாத் கொடுக்க மறுத்ததன் காரணத்தை அவர்களிடம் வினவினார்கள். அப்பொழுது, நடந்த உண்மை விபரத்தை அந்தத் தலைவர்கள் விளக்கினார்கள். தாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து வந்த பிரதிநிதிகளை எதிர்கொண்டு வரவழைக்க நகரின் வெளிப்பகுதிக்கு வந்ததாகவும், நாங்கள் வருவதைப் பார்த்த அவர்கள் தாக்குதல் நடத்தத் தான் வருகின்றோம் என்று தவறாகப் புரிந்து கொண்டு, திரும்பி வந்து விட்டதாகவும் விளக்கமளித்தார்கள்.


பனூ முஸ்தலக் தலைவர்கள் தந்த விளக்கத்தைக் கேட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இன்னும் அந்த மக்களின் மார்க்க அடிப்படை அறிவு மற்றும் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களைப் பேணுவதில் அவர்கள் காட்டிய ஆர்வம் ஆகிய அனைத்தைப் பற்றியும் அறிந்து கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், திருப்தியும், சந்தோஷமும் அடைந்தார்கள்.


மதீனா திரும்பியதும் நடந்த விபரங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கிய காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், அவர்கள் எந்த குற்றச்சாட்டுக்கும் உரித்தானவர்கள் அல்ல என்பதையும், ஜகாத் கொடுப்பதில் அவர்கள் ஆர்வமுள்ளவர்கள் தான் என்பதையும் விளக்கினார்கள். நாம் அனுப்பிய முந்தைய பிரதிநிதிகள் தான், நடந்த சம்பவங்களைப் பற்றி நமக்கு தெளிவான தகவல்களைத் தராமல் மாறுபட்ட தகவல்களைத் தந்திருக்கின்றார்கள் என்றும் கூறினார்கள். அப்பொழுது, இந்த நிகழ்ச்சியின் பொருட்டு அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தை இறக்கி அருளினான் :


முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:6)


இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பனூ முஸ்தலக் குலத்தவர்கள் ஜகாத் தர மறுக்கின்றார்கள் என்ற தவறான செய்தியைக் கேள்விப்பட்டு அவர்கள் மீது போர் முஸ்தீபுகள் செய்யப்பட்;டன, பின் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமையில் சென்ற படை இதற்கான சரியான தீர்வைக் கொண்டு வந்தது, பிரச்னையை மிகவும் இலகுவாகத் தீர்த்து விட்டும் வந்தது. இன்னும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை அனுப்பி வைக்கும் பொழுது, தனது தளபதிக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தனுப்பிய அறிவுரையும் கவனிக்கத்தக்கது. இந்த அறிவுரையானது காலித் பின் வலீத் (ரழி) அவர்களை பொறுமையாகவும், நிதானமாகவும் நடவடிக்கையை எடுக்கத் துணை புரிந்ததோடல்லாமல், அவரது தூர நோக்கு மற்றும் பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடிய பேராற்றல் ஆகியவற்றையும் வெளிப்படுத்திக் காட்டியது, இறைவனுக்கு மாறு செய்து விட்டார்களே என்று எண்ணி அவர்கள் மீது கடும் போரைத் திணக்காது நிலைமைச் சீர்தூக்கிப் பார்க்க வைத்தது. மிகப் பெரியதொரு போர் தவிர்க்கப்பட்டதோடல்லாமல

ரவ்ழாவில் திருடர்கள்

 


இஸ்லாமின் பாதுகாவலரான சுல்தான் நூர் அல்-தீன் ஸங்கி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சிரியாவில் இருந்தபோது, நபி முஹம்மது ﷺ அவர்களை கனவில் கண்டார். அந்தக் கனவில், நபி ﷺ இரண்டு ஆண்களை அவருக்குக் காட்டி, “இவர்கள் ஏற்படுத்த விரும்பும் தீங்கில் இருந்து என்னை பாதுகாப்பாயாக” என்று சுல்தானுக்கு உத்தரவிட்டார்.


அதே கனவை சுல்தான் நூர் அல்-தீன் தொடர்ந்து இரண்டாம் இரவும் மூன்றாம் இரவும் கண்டபோது, அவர் உடனடியாக மதீனாவிற்கு பயணம் செய்ய முடிவு செய்தார்.


மதீனாவின் மக்களை அவர் ஒன்று சேர்த்தபோது, இரண்டு ‘நல்லொழுக்கமுள்ள மனிதர்கள்’ காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பகலும் இரவும் இபாதத்திலும் தர்மத்திலும் ஈடுபட்டு வந்தவர்கள் என சொல்லப்பட்டது.


சுல்தான் அவர்களின் வீட்டிற்குள் நுழைந்தபோது, கனவில் கண்ட அதே இரண்டு மனிதர்களே அவர்கள் என்றும், நபி முஹம்மது ﷺ அவர்களின் புனித கப்ரு நோக்கி செல்லும் வகையில் ஒரு சுரங்கத்தை தோண்டியிருந்ததும் தெரிய வந்தது.


அவர்கள், நபி ﷺ அவர்களின் புனித உடலைத் திருட விரும்பிய உளவாளிகள் என்பதைக் கண்டு, அதை சுல்தான் நூர் அல்-தீன் முன் ஒப்புக்கொண்டார்கள். அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு, நபி ﷺ அவர்களின் புனித சமாதி இரும்புச் சுவர்களால் வலுப்படுத்தப்பட்டு, கியாமத் நாள் வரை பாதுகாக்கப்படும் வகையில் உறுதிப்படுத்தப்பட்டது.


சுல்தான் நூர் அல்-தீன் ஸங்கி அவர்கள், சிலுவைப் போராளர்களிடமிருந்து இஸ்லாமின் எல்லைகளை பாதுகாத்த மகத்தான தலைவருமாவார்.


ரஸூலுல்லாஹ் ﷺ அவர்கள் தமது புனித கப்ரில் உயிரோடு, تازா நிலையில் இருக்கின்றார்கள்; தமது உம்மத்தின் நிலைகளை அறிவார்; அவரை நம்பும் மக்களுக்காக மன்னிப்பைக் கோருகின்றார்கள்.

Friday, 23 January 2026

நீதிபதி' பதவி (Chief Justice) தேடி வருகிறது

 


இன்றைய காலத்தில் ஒரு கவுன்சிலர் பதவி கிடைப்பதாக இருந்தால்கூட, அதற்காக எதையும் செய்யத் துணியும் மனிதர்களைப் பார்க்கிறோம். ஆனால், உலகின் பாதியை ஆண்ட ஒரு சாம்ராஜ்யத்தின் 'தலைமை நீதிபதி' பதவி (Chief Justice) தேடி வருகிறது... அதை ஏற்க மறுத்து, செருப்பைக்கூட அணியாமல் ஓடிய ஒருவரைப் பற்றி இஸ்லாமிய வரலாறு பேசுகிறது என்றால் நம்ப முடிகிறதா?


அவர்தான் இமாம் சுஃப்யான் அஸ்-ஸவ்ரி.


ஹதீஸ் உலகில் இவருக்கு என்ன பட்டம் தெரியுமா? "அமீருல் முஃமினீன் ஃபில் ஹதீஸ்" (ஹதீஸ் துறையின் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர்). கலீஃபாக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 'அமீருல் முஃமினீன்' என்ற பட்டத்தை, ஹதீஸ் துறையில் இவருக்கு வழங்கினார்கள் அறிஞர்கள்.


பிறப்பு: ஹிஜ்ரி 97 (கூஃபா நகரில்).


இறப்பு: ஹிஜ்ரி 161 (பஸ்ராவில் தலைமறைவாக இருந்தபோது மரணம்).


கல்விப் பயணம்: சுமார் 600 ஷைக்களிடம் (ஆசிரியர்களிடம்) பாடம் பயின்றுள்ளார்.


அறிவித்த ஹதீஸ்கள்: சுமார் 30,000 ஹதீஸ்களை இவர் அறிவித்துள்ளார் என்று இமாம் தஹபி குறிப்பிடுகிறார்.


ஃபிக்ஹ் (சட்டத்துறை): இவருக்கு என்று தனியாக "ஸவ்ரி மத்ஹப்" இருந்தது. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் போன்றவர்கள் கூட ஆரம்பத்தில் இவரது ஃபிக்ஹ் சட்டங்களையே பின்பற்றினர். ஆனால், பிற்காலத்தில் இவரது மாணவர்கள் அதைத் தொகுக்கத் தவறியதால் அந்த மத்ஹப் வழக்கொழிந்து போனது.


நூல்கள்:

அல்-ஜாமிஉல் கபீர்

அல்-ஜாமிஉஸ் ஸகீர் 

கிதாமுல் ஃபராயில் (பாகப்பிரிவினை நூல்)


அப்பாஸிய கலீஃபா அபூ ஜஃபர் அல்-மன்சூர், இமாம் சுஃப்யானை அழைத்து, "நீங்கள் கூஃபா நகரின் நீதிபதியாகப் பொறுப்பேற்க வேண்டும்" என்று வற்புறுத்தினார். அதற்கு இமாம் சுஃப்யான் மறுத்தார். "என்னை விட்டுவிடுங்கள்" என்றார். ஆனால் கலீஃபா விடுவதாக இல்லை. "நீங்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும்" என்று கட்டளையிட்டார். அந்த இடத்திலிருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்த இமாம், இரோடு இரவாக ஊரை விட்டே ஓடினார். மக்காவிற்குச் சென்று புனித கஃபாவின் திரைச்சீலையைப் பிடித்துக்கொண்டு நின்றார்.


கலீஃபா மன்சூருக்குக் கோபம் வந்தது. இமாம் சுஃப்யானைக் கைது செய்து, தூக்கிலிடச் சொல்லி (சில அறிவிப்புகளில் சிலுவையில் அறைய) உத்தரவிட்டுவிட்டு, அவரே மக்காவை நோக்கிப் படையெடுத்து வந்தார். மக்காவாசிகள் நடுங்கினார்கள். ஆனால், இமாம் சுஃப்யான் அஸ்-ஸவ்ரி கஃபாவின் திரையைப் பிடித்தவாறு, "யா அல்லாஹ்! மன்சூர் இந்த மக்காவிற்குள் நுழையக்கூடாது" என்று பிரார்தித்தவாறு இருந்தார்.


என்ன ஆச்சரியம்! மக்காவின் எல்லைக்குள் கலீஃபா நுழைவதற்கு முன்பே, வழியிலேயே மன்சூர் மரணமடைந்தார். அல்லாஹ் தன் அடியாரைக் காப்பாற்றினான். அதிகாரம் மண்டியிட்டது; இறையச்சம் வென்றது! என்று எழுதுகிறார் இமாம் தஹபி. (நூல்: ஸியர் அஃலாமுன் நுபலா - இமாம் தஹபி)


எண்ணம் (நிய்யத்) எனும் போராட்டம் இமாம் சுஃப்யான் அஸ்-ஸவ்ரி அவர்கள் சொன்ன ஒரு பொன்மொழி, இன்று எழுத்தாளர்களுக்கு ஒரு சவுக்கடியாக உள்ளது.


"எனது நோக்கத்தை (நிய்யத்) சீர்படுத்துவதை விட, கடினமான ஒரு வேலையை நான் பார்த்ததே இல்லை. ஏனெனில், அது மாறிக்கொண்டே இருக்கிறது." (நூல்: ஜாமிஉல் உலூம் வல் ஹிகம்)


இவ்வளவு பெரிய இமாமுக்கே, தனது நோக்கம் இறைவனுக்காகத் தானா என்று சோதிப்பது இவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கிறது என்றால், நம் நிலையை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.


இன்று உலகில் ஷாஃபி, ஹனஃபி, மாலிகி, ஹம்பலி என நான்கு மத்ஹபுகள் இருப்பதை அறிவோம். ஆனால், ஒரு காலத்தில் 'ஸவ்ரி மத்ஹப்' என்றொரு மத்ஹப் இருந்தது தெரியுமா? இமாம் சுஃப்யானின் சட்டத் தீர்ப்புகள் அத்தனை பிரபலம். ஆனால், அவருடைய மாணவர்கள் அதைத் தொகுத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லாததால், அந்த மத்ஹப் காலப்போக்கில் மறைந்து போனது. ஆனால், அவர் தொகுத்த ஹதீஸ்களும், அவர் வாழ்ந்து காட்டிய அந்த எளிமையும் இன்றும் நம்மிடம் பேசிக்கொண்டுதான் இருக்கின்றன.


இமாம் சுஃப்யான் அஸ்-ஸவ்ரி மரணிக்கும் தருவாயில் இருந்தபோது மிகவும் அழுதுள்ளார். அவரை பார்த்து ஒருவர் கேட்டார், "பாவங்களை நினைத்து அழுகிறீர்களா?" என்று.


அதற்கு இமாம் ஒரு வைக்கோல் துரும்பை எடுத்து, "என் பாவங்களை நினைத்து நான் அழவில்லை. அவை இந்த வைக்கோலை விட அற்பமானவை (அல்லாஹ் மன்னித்துவிடுவான்). ஆனால், இஸ்லாத்தை விட்டு என் உயிர் பிரிந்துவிடுமோ என்ற பயத்தில்தான் அழுகிறேன்" என்றார்.


என்ன ஒரு இறையச்சம்!


- Abdullah Ibnu Naseer 


#History #SufyanAlThawri #AmirulMumineen #Hadith #IslamicHistory #FearOfAllah #Zuhd #BaytalHikmah

Friday, 16 January 2026

மிஃராஜ் புராக் ஸ்டேஷன்...

 


மிஃராஜ் புராக் ஸ்டேஷன்...!    🚉

******************************************


ஜெரூசலம்..


ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் பயணத்தில் மஸ்ஜிதுல் ஹாரமில் இருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு புராக் வாகனத்தில் வந்த போது இங்கு தான் இந்த வளையத்தில் தான் கட்டினார்கள்.


மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு வருகை தந்த அனைத்து நபிமார்களும் தங்களது வாகனங்களை இங்கு தான் கட்டியுள்ளார்கள்.


#miraj #Jerusalem #buraq

#hazrathmuhammedsal #masjidulaqsa









புகாரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் எப்படி மரணமடைந்தார்கள்?

 


#இமாம் புகாரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் எப்படி மரணமடைந்தார்கள்?


இமாம் புகாரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், தமது வாழ்க்கையின் இறுதிக் காலத்தில், கிழக்கு இஸ்லாமிய உலகின் பல நகரங்களின் ஆட்சியாளர்களால் கடுமையான துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்கள்.


குறிப்பாக நைசாபூர், புகாரா, சமர்கந்து ஆகிய நகரங்களில்.


இதற்குக் காரணங்கள் பல இருந்தன. அவற்றில் முக்கியமானவை:


ஆட்சியாளர்களின் பிள்ளைகளுக்கு அவர்களது அரண்மனைகளில் கற்பிக்க மறுத்தது.


  அதற்கு இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறிய பிரபலமான வார்த்தை: “அறிவைத் தேடி வரப்பட வேண்டும்; அதை கதவுகளுக்குக் கொண்டு செல்லக் கூடாது.”


அவர்களுடைய புகழையும், உயரிய பண்புகளையும் பார்த்து சிலர் பொறாமை கொண்டது.


இதர பல காரணங்களும் இருந்தன.


#இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு வயது 62 ஆக இருந்தபோது,

நைசாபூர் ஆளுநரிடமிருந்து


“நகரை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்; நீங்கள் இங்கு விரும்பப்படாதவர்” என்ற உத்தரவு வந்தது.


அதனால் அவர்கள் அந்த நகரை விட்டு வெளியேறி, தமது பிறந்த ஊரான புகாரா நோக்கி சென்றார்கள்.


#புகாரா நகரின் வாயிலில் மக்கள் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றனர்.

அந்த மக்கள் அவர்கள்மீது பணமும், சர்க்கரையும் தூவி மரியாதை செய்தனர்.

மாணவர்கள், ஹதீஸ் அறிஞர்கள், பொதுமக்கள் அனைவரும் அவர்களைச் சூழ்ந்தனர்.


இதனால் மற்ற ஹதீஸ் அறிஞர்களின் மத்ரஸாக்கள் வெறிச்சோடின.

இதுவே சிலரின் உள்ளங்களில் பொறாமையையும், கோபத்தையும் தூண்டியது.


இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் பெரும் புகழைக் கண்டு,

புகாரா ஆளுநரும் விரைவில் கோபமடைந்தார்.


மேலும், நைசாபூர் ஆளுநரிடமிருந்து

“இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் புகாராவிலிருந்தும் வெளியேற்ற வேண்டும்”என்ற கடிதங்களும் வந்தன.


ஒரு நாள், நகரின் ஆளுநரின் தூதர்,

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் வீட்டிற்கு வந்து,

“இப்போதே நகரை விட்டு வெளியேற வேண்டும்”என்று உத்தரவிட்டார்.


அந்த நேரத்தில், இமாம் அவர்களுக்கு தமது நூல்களைச் சேர்த்துக் கொள்ளவும், ஒழுங்குபடுத்தவும் கூட நேரம் வழங்கப்படவில்லை.


அவர்கள் நகரை விட்டு வெளியேறி,

நகரின் புறப்பகுதியில் ஒரு கூடாரத்தில் மூன்று நாட்கள் தங்கினார்கள்.

அந்த நாட்களில் தமது நூல்களை ஒழுங்குபடுத்தினார்கள்.


ஆனால், எங்கு செல்ல வேண்டும் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை.


பின்னர், அவர்கள் சமர்கந்து நோக்கிப் புறப்பட்டார்கள். ஆனால் நகருக்குள் நுழையாமல்,


அதற்கருகிலுள்ள “குர்தங்க் (خرتنك)” என்ற கிராமத்திற்குச் சென்றார்கள்.

அங்கு தமது உறவினர்களின் வீட்டில் விருந்தினராக தங்கினார்கள்.

அவருடன் இப்ராஹீம் பின் மஅ்கல் இருந்தார்.


அதிக நாட்கள் ஆகவில்லை.

சமர்கந்து ஆளுநரின் காவலர்கள் அந்த வீட்டின் வாசலுக்கு வந்தனர்.


அவர்களுடைய உத்தரவு:

“இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள், சமர்கந்தின் நகரத்திலோ, கிராமத்திலோ எங்கிலும் தங்கக் கூடாது. இப்போதே வெளியேற வேண்டும்.”


அந்த நாள் ஈதுல் பித்ர் பெருநாளுடைய இரவு 


ஈதுக்குப் பிறகு அல்ல. 


“இப்போதே” வெளியேற வேண்டும் என்ற கட்டளை.


தன்னை வரவேற்ற உறவினர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது என்பதற்காக,

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உடனே புறப்பட சம்மதித்தார்கள்.


இப்ராஹீம் பின் மஅ்கல்,

இமாமின் நூல்களை ஒரு விலங்கின் மேல் ஏற்றினார்.

மற்றொரு விலங்கைக் இமாம் அவர்களை ஏற்றுவதற்குத் தயார் செய்தார்.


பின்னர் வீட்டிற்குள் சென்று,

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களைத் தாங்கியபடி வெளியே அழைத்து வந்தார்.


சுமார் 20 அடிகள் நடந்தபின்,

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் மிகவும் சோர்வடைந்தார்கள்.


அவர்கள்,

“சில நிமிடங்கள் ஓய்வு எடுக்க அனுமதியுங்கள்.

என்று கேட்டார்கள்.


அவர் சாலையோரத்தில் அமர்ந்தார்கள்

பிறகு சிறிது நேரத்தில் தூங்கினார்கள்.


சில நிமிடங்கள் கழித்து,

இப்ராஹீம் பின் மஅ்கல் அவரை எழுப்ப முயன்றபோது,

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் பரிசுத்தமான உயிர் அல்லாஹ்விடம் சென்று விட்டதை கண்டார்.


انالله وانااليه راجعون 


இவ்வாறு,


👉 இமாம் புகாரி (ரஹிமஹுல்லாஹ்)

👉 ஈதுல் பித்ர் இரவு

👉 1 ஷவ்வால், ஹிஜ்ரி 256

👉 வீதியோரத்தில்

👉 ஒரு நகரத்திலிருந்து, மற்றொரு நகரம், மூன்றாவது நகரம் என விரட்டப்பட்ட நிலையில்

👉 62 வயதைத் தாண்டிய நிலையில்

இந்த உலகை விட்டு பிரிந்தார்கள்.


இன்று,

நைசாபூர், புகாரா, சமர்கந்து ஆகிய நகரங்களின் ஆட்சியாளர்களின் பெயர்களை மக்கள் அறியமாட்டார்கள்.


ஆனால்,

உலகமெங்கும் அனைவரும் அறிந்த பெயர் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் 


அல்லாஹ் அவர்கள்மீது கருணை பொழிவானாக.

அவரின் தரங்களை உயர்த்தி,

நபிமார்கள், ஷஹீத்கள், சாலிஹீன்களுடன் உயரிய இடங்களில் சேர்த்தருள்வானாக.


ஸியர் அஃலாமுன் நுபலா பாகம் 12, பக்கம் 468


இந்த பதிவை முழுமையாக வாசித்திருந்தால்,

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது ஸலவாத்து சொல்லுங்கள்.


என்காகவும் என்குடும்பத்திற்காகவும் துஆ செய்யுங்கள்

மிஃராஜும் புனித இடங்களும்


 மிஃராஜும் புனித இடங்களும்

***********************************


புனித இடங்களை நாடி செல்லுதல், அங்கு தொழுதல், துஆ செய்வது, நபிமார்களின் நடைபாதைகளை அறிதல்  இதை மறுப்பவர்களுக்கு சிந்திக்க சில பதில்கள்.


மெளலவி எச் எம் யூசுப் முஸ்தபி ,காதிரி

Muhammed Yoosuf Musthafi 

@top fans 


இஸ்ரா (இரவு பயணம்) சம்பவத்தில் வந்துள்ள ஒரு முக்கியமான ஹதீஸ் இதற்கு தெளிவான ஆதாரமாக இருக்கிறது.


இந்த ஹதீஸை

பஸ்ஸார் தனது முஸ்னத் (ஹதீஸ் எண்: 3484) இலும்,

தபரானி தனது அல்-முஅ்ஜமுல் கபீர் (ஹதீஸ் எண்: 1742) இலும் அறிவித்துள்ளார்.


ஹாஃபிழ் இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்) பத்ஹுல் பாரி (7/198) இல் கூறுகிறார்கள்:


 “இதை இமாம் பய்ஹகி, தலாயிலுன் நுபுவ்வா*வில், ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பாக ஸஹீஹ் என உறுதி செய்துள்ளார்.”


அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அந்த ஹதீஸில் வருகிறது:


 “நாங்கள் (பயணத்தில்) பேரீச்சை மரங்கள் நிறைந்த ஒரு நிலத்தை அடைந்தோம்.

அப்போது (ஜிப்ரீல் அலையிஸ்ஸலாம்) என்னிடம்,

 ‘இறங்குங்கள்’ என்றார்.

 நான் இறங்கினேன்.

 பின்னர், ‘தொழுங்கள்’ என்றார்; நான் தொழுதேன்.

அதன் பிறகு நாங்கள் மீண்டும் பயணித்தோம்.


 அப்போது மலக்கு என்னிடம்,

 ‘நீங்கள் எங்கு தொழுதீர்கள் என்று தெரியுமா?’ என்று கேட்டார்.

 நான், ‘அல்லாஹ்வே மிக அறிந்தவன்’ என்று கூறினேன்.

 அவர் கூறினார்:

நீங்கள் யஸ்ரிப் (மதீனா) நகரில் தொழுதீர்கள்.


பின்னர், அந்த புராக் தனது கால் எட்டிய தூரமெல்லாம் தாண்டி பறப்பது போல எங்களை எடுத்துச் சென்றது.

 நாங்கள் ஒரு வெள்ளை நிற நிலத்தை அடைந்தோம்.

அவர் கூறினார்: ‘இறங்குங்கள்.’

நான் இறங்கினேன்.

‘தொழுங்கள்’ என்றார்; நான் தொழுதேன்.

 பின்னர் அவர் கேட்டார்:

 ‘நீங்கள் எங்கு தொழுதீர்கள் என்று தெரியுமா?’

 நான்: ‘அல்லாஹ்வே மிக அறிந்தவன்’ என்றேன்.

அவர் கூறினார்:

 ‘நீங்கள் மத்யன் பகுதியில் தொழுதீர்கள் அது மூஸா அலையிஹிஸ்ஸலாம் அவர்களின் மரத்தருகில்.’


பின்னர் மீண்டும் அந்த புராக் எங்களை எடுத்துச் சென்றது.

 அதன் பின் அவர் கூறினார்: ‘இறங்குங்கள்.’

நான் இறங்கினேன்.

 ‘தொழுங்களா என்றார்; நான் தொழுதேன்.


பின்னர் அவர் கூறினார்:

 ‘நீங்கள் எங்கு தொழுதீர்கள் என்று தெரியுமா?’

 நான்: ‘அல்லாஹ்வே மிக அறிந்தவன்’ என்றேன்.

அவர் கூறினார்:

 ‘நீங்கள் பைதுல் லஹம் (பெத்லகேம்) நகரில் தொழுதீர்கள் அங்கேதான் மர்யம் அவர்களின் மகன் ஈஸா அலையிஹிஸ்ஸலாம் பிறந்தார்கள்.’”


இந்த ஹதீஸ் மூலம் தெளிவாகப் புரிகிறது:


அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

  நபிமார்களுடன் தொடர்புடைய புனித இடங்களில் நிறுத்தப்பட்டு

  அங்கே தொழுமாறு கட்டளையிடப்பட்டார்கள்

இது


  👉 புனித இடங்களை அறிதல்,

  👉 அவற்றில் தொழுதல்,

  👉 நபிமார்களின் நினைவுகளை உயிர்ப்பித்தல்

  ஆகியவை ஷரீஅத்திற்கு முரணானவை அல்ல மாறாக நபிவழியில் உள்ளவை என்பதை காட்டுகிறது.


இன்ஷாஅல்லாஹ், இது இந்த விஷயத்தில் உள்ள குழப்பங்களுக்கு ஒரு தெளிவான பதிலாக அமையும்.


முழுமையாக வாசித்த உங்களுக்கு நன்றி

جزاك الله خيرا الجزاء