♥️♥️♥️💫💫💫✍️✍️✍️
பெண்மையைப் போற்றுவதே உண்மையான வீரம்
வரலாறு என்பது வெறும் போர் வெற்றிகளால் ஆனது மட்டுமல்ல; அது மனிதப் பண்புகளின் உன்னதமான தருணங்களால் செதுக்கப்பட்டது.
இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில், மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த வீரமிக்கப் பெண்மணி உம்மு ஸலமா (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஓர் நிகழ்வு, இன்றும் மனிதகுலத்திற்குப் பெரும் பாடமாகத் திகழ்கிறது.
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
"நான் எனது குழந்தையைச் சுமந்தவளாக, எவ்விதத் துணையுமின்றி மக்காவிலிருந்து மதீனாவை நோக்கிப் பாலைவனத்தில் தனியாகப் பயணம் செய்தேன். கடும் வெயிலும் நீண்ட தூரமும் எனக்குப் பெரும் சவாலாக இருந்தபோது, வழியில் ஒருவரைச் சந்தித்தேன். அவர்தான் உஸ்மான் பின் தல்ஹா."
அப்போது அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை; சொல்லப்போனால் இஸ்லாத்தின் தீவிர எதிரிகளில் ஒருவராகவே கருதப்பட்டார். ஆனால், அவரிடமிருந்த 'பண்பாடு' மற்றும் 'கண்ணியம்', ஒரு பெண்ணைத் துணையின்றிப் பாலைவனத்தில் விடுவதற்கு இடம் கொடுக்கவில்லை.
மக்காவிலிருந்து மதீனா வரையிலான சுமார் 450 கிலோமீட்டர் தூரம் அவர் எனக்கு உதவியாக நடந்து வந்தார்.
இந்தப் பயணத்தில் அவர் காட்டிய ஒழுக்கம் வியப்பிற்குரியது:
ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்து அவர் முன்னே நடக்க, நான் அதன் மேல் அமர்ந்து வந்தேன்.
பயணத்தின் ஒரு தருணத்தில் கூட அவர் என்னைத் திரும்பிப் பார்க்கவுமில்லை என்னுடன் பேசவுமில்லை.
ஓய்வெடுக்கும் இடங்களில், நான் ஒட்டகத்தை விட்டு இறங்கும் வரை தள்ளி நின்று, நான் பாதுகாப்பாக அமர்ந்த பின்பு தூரமான வேறொரு மரத்தடியில் ஒதுங்கிக் கொள்வார்.
புகழ்பெற்ற அரபுக் கவிஞர் அன்தரா கூறிய, "என் அண்டை வீட்டுப் பெண் மறையும் வரை என் பார்வையைத் தாழ்த்திக் கொள்கிறேன்" என்ற வரிகளுக்கு இலக்கணமாக உஸ்மான் பின் தல்ஹா திகழ்ந்தார்.
இன்றைய காலத்தில் ஒரு சிறிய நற்செயலைச் செய்தாலும் அதனை உலகறியச் செய்யத் துடிக்கும் மனநிலை பெருகியுள்ளது. ஆனால், உஸ்மான் பின் தல்ஹா அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக மதீனாவின் எல்லை வரை கொண்டு சேர்த்தார். "இதோ உன் கணவர் இந்த ஊரில் இருக்கிறார், நீ பாதுகாப்பாகச் செல்" என்று கூறிவிட்டு, ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காமல் மீண்டும் மக்காவை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
தான் செய்த இந்த மாபெரும் உதவியைப் பற்றி அவர் யாரிடமும் தம்பட்டம் அடிக்கவில்லை; எந்தப் புகழையும் நன்றியையும் எதிர்பார்க்கவில்லை. ஒரு சிறந்த வீரராகவும் வணிகராகவும் இருந்தும், தனது நேரத்தையும் உழைப்பையும் ஒரு பெண்ணின் பாதுகாப்பிற்காகச் செலவிட்ட அந்த மனிதநேயம் மகத்தானது.
உஸ்மான் பின் தல்ஹாவின் இந்தக் கண்ணியமான செயலை அல்லாஹ் வீணாக்கவில்லை. மக்கா வெற்றியின் போது அவர் இஸ்லாத்தை ஏற்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவின் சாவியை மீண்டும் உஸ்மான் பின் தல்ஹாவிடமே ஒப்படைத்தார்கள். இன்றும் கஃபாவின் சாவியைப் பாதுகாக்கும் பொறுப்பு அவரது வம்சத்தினர் (பனூ ஷைபா) வசமே இருப்பது, அன்று அவர் காட்டிய அந்தத் தூய பண்பிற்கு கிடைத்த அழியாத அங்கீகாரமாகும்.
முடிவுரை:
மனிதாபிமானமும் பெண்மையை போற்றுவதும் மதங்களைக் கடந்தது; அது ஓர் ஆணின் கண்ணியத்தால் ஆனது. பெண்களைப் பாதுகாப்பதும் கண்ணியப்படுத்துவதுமே உண்மையான வீரம்!
📚 البداية والنهاية
📚زاد المعاد في هدي خير العباد..
🖊️தமிழாக்கம் : இம்ரான் ( நூரி)
LIKE & SHARE


































