யூசுஃப் நபி, மூஸா நபி ஆகியோரின் வரலாறுகளை ஒப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரை ஒன்றை வாசித்தேன். அற்புதமாக இருந்தது.
1. யூசுஃப் நபியின் சரிதையில் அவரது தாயார் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. மூஸா நபியின் சரிதையில் அவரது தந்தை குறித்து எந்தக் குறிப்பும் இல்லை.
2. யூசுஃப் நபியின் சரிதை தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உரையாடலுடன் தொடங்குகிறது. மூஸா நபியின் சரிதை தாய்க்கும் மகனுக்கும் இடையிலான பிணைப்புடன் தொடங்குகிறது.
3. யூசுஃப் நபியை சொந்த சகோதரர்கள் குடும்பத்தை விட்டு பிரித்தனர். மூஸா நபியை சொந்த சகோதரி குடும்பத்துடன் சேர்த்து வைக்கிறார்.
4. யூசுஃப் நபியின் சரிதையில் அவரது தந்தை நபியாக இருந்த பின்பும் அவர் தன் மகனுடன் மீண்டும் இணைவாரா என்று கூறப்படவில்லை. மூஸா நபியின் சரிதையில் அவரது தாயார் நபியாக இல்லாத போதும் அவர் தன் மகனுடன் இணைவார் என்று கூறப்படுகிறது.
5. யூசுஃப் நபியின் சரிதையில் தந்தை துக்கக் கண்ணீர் வடிக்கிறார். மூஸா நபியின் சரிதையில் தாயார் மகிழ்ச்சிக் கண்ணீர் வடிக்கிறார்.
6. யூசுஃப் நபி தேங்கி நிற்கும் தண்ணீரில் (கிணறு) வீசப்படுகிறார். மூஸா நபி ஓடும் தண்ணீரில் (ஆறு) வீசப்படுகிறார்.
7. யூசுஃப் நபி ஓர் ஆண் மூலம் (எகிப்து அமைச்சர்) அரண்மனைக்கு அழைத்து வரப்படுகிறார். மூஸா நபி ஒரு பெண் மூலம் (அன்னை ஆசியா) அரண்மனைக்கு அழைத்து வரப்படுகிறார்.
8. யூசுஃப் நபியை மகனாக ஏற்றுக்கொள்ளும்படி ஓர் ஆண் (அமைச்சர்) தமது மனைவியிடம் கூறுகின்றார். மூஸா நபியை மகனாக ஏற்றுக்கொள்ளும்படி ஒரு பெண் (அன்னை ஆசியா) தன் கணவரிடம் கூறுகின்றார்.
9. யூசுஃப் நபியின் வாழ்வு அடிமையாகத் தொடங்கி அதிகாரத்தில் முடிகிறது. மூஸா நபியின் வாழ்வு அரண்மனையில் தொடங்கி அழைப்பாளராக முடிகிறது.
10. யூசுஃப் நபிக்கு ஒரு சிறப்புப் பண்பு (தோற்றம்) வழங்கப்பட்டது. மூஸா நபிக்கும் ஒரு சிறப்புப் பண்பு (வலிமை) வழங்கப்பட்டது.
11. அந்த சிறப்புப் பண்பின் காரணத்தால் அமைச்சர் மனைவியுடன் யூசுஃப் நபி சிக்கலில் மாட்டிக்கொண்டார். அந்த சிறப்புப் பண்பின் காரணத்தால் அதிகாரிகளிடம் மூஸா நபி சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
12. குற்றம் நடப்பதற்கு முன்பே யூசுஃப் நபி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார். குற்றம் நடந்த பின்னரே மூஸா நபி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்.
13. நிரபராதியான யூசுஃப் நபி சட்டத்தால் கைது செய்யப்படுகிறார். குற்றம் செய்த மூஸா நபி சட்டத்திலிருந்து தப்பி ஓடினார்.
14. சிறையில் இருந்த யூசுஃப் நபிக்கு 2 ஆண்கள் உதவினர். தப்பியோடிய முஸா நபிக்கு 2 பெண்கள் உதவினர்.
15. ஓர் ஆணும் பெண்ணும் எப்படி ஒன்று சேரக்கூடாது என்பதை யூசுஃப் நபியின் வரலாற்றில் கூறும் அல்லாஹ், ஓர் ஆணும் பெண்ணும் எப்படி ஒன்று சேரவேண்டும் என்பதை மூஸா நபியின் வரலாற்றில் கூறுகிறான்.
16. யூசுஃப் நபி சிறைக் கைதிகளுக்கு அழைப்புப் பணி செய்து உதவி பெறுகிறார். (வார்த்தையின் வலிமை). மூஸா நபி இரு பெண்களுக்கு உதவி செய்து உதவி பெறுகிறார். (செயலின் வலிமை)
17. யூசுப் நபி அரசவைக்குத் திரும்பி அரசனை எதிர்கொள்கிறார். மூஸா நபியும் அரசவைக்குத் திரும்பி அரசனை எதிர்கொள்கிறார்.
18. யூசுஃப் நபி அரசனால் கண்ணியம் பெறுகிறார். மூஸா நபியோ அரசனால் அவமானம் அடைகிறார்.
19. யூசுஃப் நபி சகோதரர் பின்யாமீனுடன் மீண்டும் இணைகிறார். மூஸா நபி சகோதரர் ஹாரூனுடன் மீண்டும் இணைகிறார்.
20. ஒரு ஸஜ்தாவின் மூலம் யூசுஃப் நபியின் குடும்பத்தார் மீண்டும் இணைகிறார்கள். ஒரு ஸஜ்தாவின் மூலம் (சூனியக்காரர்கள்) மூஸா நபி வெற்றிபெறுகிறார்.
21. யூசுஃப் நபியின் சரிதையில் சட்டை முக்கிய இடம் பெறுகிறது. மூஸா நபியின் சரிதையில் கைத்தடி முக்கிய இடம் பெறுகிறது.
22. இஸ்ரவேலர்கள் (யூதர்கள்) எகிப்துக்கு எப்படி வந்தார்கள் என்பதை யூசுஃப் நபியின் வரலாறு விளக்குகிறது. இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு எவ்வாறு வெளியேறினார்கள் என்பதை மூஸா நபியின் வரலாறு விளக்குகிறது.
அல்லாஹு அக்பர்! அல்குர்ஆன் கூறும் அழகிய சரிதைகள் எத்தனை எத்தனை வாழ்க்கைப் பாடங்களைத்தான் கற்றுத் தருகிறது! அத்தனையும் அற்புதம்!
✍️ நூஹ் மஹ்ழரி








