السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 13 March 2026

பெண்மையைப் போற்றுவதே உண்மையான வீரம்

 


♥️♥️♥️💫💫💫✍️✍️✍️

பெண்மையைப் போற்றுவதே உண்மையான வீரம்


வரலாறு என்பது வெறும் போர் வெற்றிகளால் ஆனது மட்டுமல்ல; அது மனிதப் பண்புகளின் உன்னதமான தருணங்களால் செதுக்கப்பட்டது.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில், மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த வீரமிக்கப் பெண்மணி உம்மு ஸலமா (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஓர் நிகழ்வு, இன்றும் மனிதகுலத்திற்குப் பெரும் பாடமாகத் திகழ்கிறது.


உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

"நான் எனது குழந்தையைச் சுமந்தவளாக, எவ்விதத் துணையுமின்றி மக்காவிலிருந்து மதீனாவை நோக்கிப் பாலைவனத்தில் தனியாகப் பயணம் செய்தேன். கடும் வெயிலும் நீண்ட தூரமும் எனக்குப் பெரும் சவாலாக இருந்தபோது, வழியில் ஒருவரைச் சந்தித்தேன். அவர்தான் உஸ்மான் பின் தல்ஹா."

அப்போது அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை; சொல்லப்போனால் இஸ்லாத்தின் தீவிர எதிரிகளில் ஒருவராகவே கருதப்பட்டார். ஆனால், அவரிடமிருந்த 'பண்பாடு' மற்றும் 'கண்ணியம்', ஒரு பெண்ணைத் துணையின்றிப் பாலைவனத்தில் விடுவதற்கு இடம் கொடுக்கவில்லை.


மக்காவிலிருந்து மதீனா வரையிலான சுமார் 450 கிலோமீட்டர் தூரம் அவர் எனக்கு உதவியாக நடந்து வந்தார். 


இந்தப் பயணத்தில் அவர் காட்டிய ஒழுக்கம் வியப்பிற்குரியது:

ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்து அவர் முன்னே நடக்க, நான் அதன் மேல் அமர்ந்து வந்தேன்.

பயணத்தின் ஒரு தருணத்தில் கூட அவர் என்னைத் திரும்பிப் பார்க்கவுமில்லை என்னுடன் பேசவுமில்லை.

ஓய்வெடுக்கும் இடங்களில், நான் ஒட்டகத்தை விட்டு இறங்கும் வரை தள்ளி நின்று, நான் பாதுகாப்பாக அமர்ந்த பின்பு தூரமான வேறொரு மரத்தடியில் ஒதுங்கிக் கொள்வார்.

புகழ்பெற்ற அரபுக் கவிஞர் அன்தரா கூறிய, "என் அண்டை வீட்டுப் பெண் மறையும் வரை என் பார்வையைத் தாழ்த்திக் கொள்கிறேன்" என்ற வரிகளுக்கு இலக்கணமாக உஸ்மான் பின் தல்ஹா திகழ்ந்தார்.


இன்றைய காலத்தில் ஒரு சிறிய நற்செயலைச் செய்தாலும் அதனை உலகறியச் செய்யத் துடிக்கும் மனநிலை பெருகியுள்ளது. ஆனால், உஸ்மான் பின் தல்ஹா அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக மதீனாவின் எல்லை வரை கொண்டு சேர்த்தார். "இதோ உன் கணவர் இந்த ஊரில் இருக்கிறார், நீ பாதுகாப்பாகச் செல்" என்று கூறிவிட்டு, ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காமல் மீண்டும் மக்காவை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.


தான் செய்த இந்த மாபெரும் உதவியைப் பற்றி அவர் யாரிடமும் தம்பட்டம் அடிக்கவில்லை; எந்தப் புகழையும் நன்றியையும் எதிர்பார்க்கவில்லை. ஒரு சிறந்த வீரராகவும் வணிகராகவும் இருந்தும், தனது நேரத்தையும் உழைப்பையும் ஒரு பெண்ணின் பாதுகாப்பிற்காகச் செலவிட்ட அந்த மனிதநேயம் மகத்தானது.


உஸ்மான் பின் தல்ஹாவின் இந்தக் கண்ணியமான செயலை அல்லாஹ் வீணாக்கவில்லை. மக்கா வெற்றியின் போது அவர் இஸ்லாத்தை ஏற்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவின் சாவியை மீண்டும் உஸ்மான் பின் தல்ஹாவிடமே ஒப்படைத்தார்கள். இன்றும் கஃபாவின் சாவியைப் பாதுகாக்கும் பொறுப்பு அவரது வம்சத்தினர் (பனூ ஷைபா) வசமே இருப்பது, அன்று அவர் காட்டிய அந்தத் தூய பண்பிற்கு கிடைத்த அழியாத அங்கீகாரமாகும்.


முடிவுரை:

மனிதாபிமானமும் பெண்மையை போற்றுவதும் மதங்களைக் கடந்தது; அது ஓர் ஆணின் கண்ணியத்தால் ஆனது. பெண்களைப் பாதுகாப்பதும் கண்ணியப்படுத்துவதுமே உண்மையான வீரம்!

📚 البداية والنهاية

📚زاد المعاد في هدي خير العباد..


🖊️தமிழாக்கம் : இம்ரான் ( நூரி)

     LIKE & SHARE

Sunday, 8 March 2026

பத்ரு போர்க்களத்தில் ஷஹீதானவர்களின் பெயர்கள்.



 இந்த போர்டில் காணப்படுவது

பத்ரு போர்க்களத்தில் ஷஹீதானவர்களின் பெயர்கள்.  


போர் நடந்த களத்தில் ஷஹீதானவர்கள் 13 ஸஹாபிகள். 


14 பேர் என்பதற்கு  ஒரு காரணம் உண்டு.


உபைதா இப்னுல் ஹாரிஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்

போரில் படுகாயமடைந்து, போர் முடிந்து திரும்பும் வழியில் 'சஃப்ரா' எனும் இடத்தில் ஷஹீதானார்கள்.


*உபைதிப்னு ஹாரிஸ்* (ரழியல்லாஹு அன்ஹு)*


பத்ருப் போரின் ஆரம்பத்தில் எதிரணியில் உத்பா, ஷைபா, வலீத் ஆகிய மூவரும் தன்னோடு மோதுவதற்காக இஸ்லாமிய படை வீரர்களில் மூவரை சவால் விட்டு அழைத்தனர். 


அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹம்ஸா(ரழியல்லாஹு அன்ஹு), அலீ(ரழியல்லாஹு அன்ஹு), உபைதிப்னு ஹாரிஸ்(ரழியல்லாஹு அன்ஹு) ஆகிய மூவரையும் எதிரிகளோடு மோதுவதற்கு அனுப்பிவைத்தார்கள். 


இம்மூவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சகோதரர்கள். 


 இந்த இரு அணியினரின் மோதலைக் குறித்துதான் இறைவன் தன் திருமறையில்


هُذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ


"இந்த இரு தரப்பினரும் தங்கள் இறைவன் பாதையில் மோதிக்கொண்டவர்களாகும்" என்று கூறுகிறான்.


அலீ(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் வலீதையும்,


 ஹம்ஸா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஷைபாவையும்,


 உபைதிப்னு ஹாரிஸ்(ரழியல்லாஹு அன்ஹு) உத்பாவையும் எதிர்கொண்டனர்.


 அலி(ரழியல்லாஹு அன்ஹு), ஹம்ஸா(ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோர் தன்னோடு மோதிய எதிரிகளை வெட்டி வீழ்த்தினர். 


உபைதிப்னு ஹாரிஸ்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தன்னோடு மோதிய ஷைபாவினால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார்கள். 


போர் முடிந்து திரும்பியபோது 'ஸஃப்ரா' என்ற இடத்தில் உபைதிப்னு ஹாரிஸ்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மரணித்தார்கள்.


 ஒருமுறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன்னுடைய தோழர்களுடன் 'நாஜியீன்' என்ற இடத்தில் தங்கியிருந்தபோது ஸஹாபாக்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்  "அல்லாஹ்வின் 

தாதரே! நாங்கள் கஸ்தூரி வாடையை சுவாசிக்கிறோம். இது எங்கிருந்து வருகிறது? என்று வினவினர்கள்.


 அதற்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "இந்த இடத்தில் உபைதிப்னு ஹாரீஸ்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்ரு இருக்கும்போது எப்படி உங்களுக்கு அந்த நறுமணம் வராமல் இருக்கும்" என்று பதில் கூறினார்கள்.


நூல்: வஃபாவுல் வஃபா, 1025/3


பத்ரு ஸஹாபிகளின் திருநாமங்களை ஓதி வசீலாவாக முன்வைத்து துஆ செய்வோம். அல்லாஹ் நம் அனைவரின் நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி வைப்பானாக ஆமீன்.