ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரனும் வசித்து வந்தான்.
வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன.
வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று அந்த விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதுமாக இருந்தன.
இதனால் வருத்தமுற்ற விவசாயி, தன் அண்டை வீட்டுக்காரனான வேட்டைக் காரனிடம், "உன் நாய்களை கொஞ்சம் கட்டிப்போட்டு வைத்துக்கொள்; அவை அடிக்கடி வந்து என் ஆடுகளை தாக்கி காயப்படுத்துகின்றன" என்றான்.
வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவே இல்லை. "செவிடன் காதில் ஊதிய சங்கு போல" அவை எந்த பயனும் தரவில்லை!
இந்நிலையில் மீண்டும் ஒரு முறை இதே போல நாய்கள் வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து ஆட்டுக்குட்டிகளைக் கடித்துக் குதறின.
இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று சற்று கோபத்தில் சென்று வேட்டைக்காரனிடம் புகார் செய்தான் விவசாயி.
வேட்டைக்காரனும் சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம்; அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது; உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.
இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக் கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு.
விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர்,
“என்னால் பஞ்சாயத்தைக் கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனைத் தண்டித்து, அபராதம் விதித்து அவனது நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும்.
ஆனால்
நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்க வேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்து வீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”
என்று கேட்டார்.
பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, "அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம்" என்றான்.
“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருக்கவும் வேட்டைக்காரனும் நண்பனாக இருக்கவும் நான் ஒரு யோசனை சொல்கிறேன், கேட்பாயா?” என்று கேட்டார்.
“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்” என்றான் விவசாயி.
இதையடுத்து, பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார்.
வீட்டுக்கு வந்த விவசாயி, பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்னவற்றை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.
தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளில் மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒன்றை விளையாட பரிசளித்தான்.
குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.
தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், அந்த நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் அந்த நாய்களை சங்கிலியால் கட்டிப்போட்டான்.
தனது மகன்களுக்கு ஆட்டுக்குட்டிகளை பரிசளித்ததால், பதிலுக்கு தானும் அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, காட்டிலிருந்து தான் கொண்டு வந்திருந்த சில அரிய பொருட்களை விவசாயிக்கு பரிசளித்தான் வேட்டைக்காரன்.
ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகி விட்டனர்.
நம்மிடம் நியாயம் இருக்கிறது என்றோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்றோ வீணாக எதிரிகளை சம்பாதித்துக் கொள்ளவே கூடாது!
படித்ததில் பிடித்தது!