السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 16 January 2026

மிஃராஜும் புனித இடங்களும்


 மிஃராஜும் புனித இடங்களும்

***********************************


புனித இடங்களை நாடி செல்லுதல், அங்கு தொழுதல், துஆ செய்வது, நபிமார்களின் நடைபாதைகளை அறிதல்  இதை மறுப்பவர்களுக்கு சிந்திக்க சில பதில்கள்.


மெளலவி எச் எம் யூசுப் முஸ்தபி ,காதிரி

Muhammed Yoosuf Musthafi 

@top fans 


இஸ்ரா (இரவு பயணம்) சம்பவத்தில் வந்துள்ள ஒரு முக்கியமான ஹதீஸ் இதற்கு தெளிவான ஆதாரமாக இருக்கிறது.


இந்த ஹதீஸை

பஸ்ஸார் தனது முஸ்னத் (ஹதீஸ் எண்: 3484) இலும்,

தபரானி தனது அல்-முஅ்ஜமுல் கபீர் (ஹதீஸ் எண்: 1742) இலும் அறிவித்துள்ளார்.


ஹாஃபிழ் இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்) பத்ஹுல் பாரி (7/198) இல் கூறுகிறார்கள்:


 “இதை இமாம் பய்ஹகி, தலாயிலுன் நுபுவ்வா*வில், ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பாக ஸஹீஹ் என உறுதி செய்துள்ளார்.”


அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அந்த ஹதீஸில் வருகிறது:


 “நாங்கள் (பயணத்தில்) பேரீச்சை மரங்கள் நிறைந்த ஒரு நிலத்தை அடைந்தோம்.

அப்போது (ஜிப்ரீல் அலையிஸ்ஸலாம்) என்னிடம்,

 ‘இறங்குங்கள்’ என்றார்.

 நான் இறங்கினேன்.

 பின்னர், ‘தொழுங்கள்’ என்றார்; நான் தொழுதேன்.

அதன் பிறகு நாங்கள் மீண்டும் பயணித்தோம்.


 அப்போது மலக்கு என்னிடம்,

 ‘நீங்கள் எங்கு தொழுதீர்கள் என்று தெரியுமா?’ என்று கேட்டார்.

 நான், ‘அல்லாஹ்வே மிக அறிந்தவன்’ என்று கூறினேன்.

 அவர் கூறினார்:

நீங்கள் யஸ்ரிப் (மதீனா) நகரில் தொழுதீர்கள்.


பின்னர், அந்த புராக் தனது கால் எட்டிய தூரமெல்லாம் தாண்டி பறப்பது போல எங்களை எடுத்துச் சென்றது.

 நாங்கள் ஒரு வெள்ளை நிற நிலத்தை அடைந்தோம்.

அவர் கூறினார்: ‘இறங்குங்கள்.’

நான் இறங்கினேன்.

‘தொழுங்கள்’ என்றார்; நான் தொழுதேன்.

 பின்னர் அவர் கேட்டார்:

 ‘நீங்கள் எங்கு தொழுதீர்கள் என்று தெரியுமா?’

 நான்: ‘அல்லாஹ்வே மிக அறிந்தவன்’ என்றேன்.

அவர் கூறினார்:

 ‘நீங்கள் மத்யன் பகுதியில் தொழுதீர்கள் அது மூஸா அலையிஹிஸ்ஸலாம் அவர்களின் மரத்தருகில்.’


பின்னர் மீண்டும் அந்த புராக் எங்களை எடுத்துச் சென்றது.

 அதன் பின் அவர் கூறினார்: ‘இறங்குங்கள்.’

நான் இறங்கினேன்.

 ‘தொழுங்களா என்றார்; நான் தொழுதேன்.


பின்னர் அவர் கூறினார்:

 ‘நீங்கள் எங்கு தொழுதீர்கள் என்று தெரியுமா?’

 நான்: ‘அல்லாஹ்வே மிக அறிந்தவன்’ என்றேன்.

அவர் கூறினார்:

 ‘நீங்கள் பைதுல் லஹம் (பெத்லகேம்) நகரில் தொழுதீர்கள் அங்கேதான் மர்யம் அவர்களின் மகன் ஈஸா அலையிஹிஸ்ஸலாம் பிறந்தார்கள்.’”


இந்த ஹதீஸ் மூலம் தெளிவாகப் புரிகிறது:


அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

  நபிமார்களுடன் தொடர்புடைய புனித இடங்களில் நிறுத்தப்பட்டு

  அங்கே தொழுமாறு கட்டளையிடப்பட்டார்கள்

இது


  👉 புனித இடங்களை அறிதல்,

  👉 அவற்றில் தொழுதல்,

  👉 நபிமார்களின் நினைவுகளை உயிர்ப்பித்தல்

  ஆகியவை ஷரீஅத்திற்கு முரணானவை அல்ல மாறாக நபிவழியில் உள்ளவை என்பதை காட்டுகிறது.


இன்ஷாஅல்லாஹ், இது இந்த விஷயத்தில் உள்ள குழப்பங்களுக்கு ஒரு தெளிவான பதிலாக அமையும்.


முழுமையாக வாசித்த உங்களுக்கு நன்றி

جزاك الله خيرا الجزاء

Thursday, 15 January 2026

பிலால் (ரழி) அவர்களின் அந்த உருக்கமான வரலாறு


 அண்ணல் நபி அவர்களின் பிரிவைத் தாங்க முடியாமல் மதீனாவை விட்டுச் சென்ற ஹழ்ரத் பிலால் (ரழி) அவர்களின் அந்த உருக்கமான வரலாற்றை இங்கே காண்போம். 


 மதீனாவை நனைத்த கண்ணீர்: பிலால் (ரழி) அவர்களின் பிரிவு பெருமானார் அவர்களின் மறைவுக்குப் பிறகு மதீனா நகரம் பிலால் (ரழி) அவர்களுக்குப் பாழடைந்ததாகத் தோன்றியது. எந்தத் திசையைப் பார்த்தாலும் நபியவர்களின் நினைவுகள் அவரை வாட்டின. குறிப்பாக, பாங்கு சொல்லும் போது "அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்" என்ற இடத்திற்கு வரும்போது, அவர் விம்மி விம்மி அழத் தொடங்கிவிடுவார். அவரால் பாங்கைத் தொடர முடியவில்லை.


"நபியவர்கள் இல்லாத மதீனாவில் என்னால் இருக்க முடியவில்லை" என்று கூறிவிட்டு, சிரியாவின் (ஷாம்) திசை நோக்கிப் பயணமானார். பல ஆண்டுகள் அங்கேயே தங்கிவிட்டார்.


அந்தத் தூக்கமும்... அந்தத் தூதுச் செய்தியும்

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இரவு, பிலால்(ரழி) அவர்களின் கனவில் ரசூலுல்லாஹ் அவர்கள் தோன்றினார்கள். மிகவும் கனிவான குரலில் கேட்டார்கள்: "பிலாலே! இது என்ன பிடிவாதம்? என்னைச் சந்திக்க உமக்கு ஆசை வரவில்லையா?" திடுக்கிட்டு விழித்த பிலால் (ரழி) அவர்களின் உடல் நடுங்கியது. கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. "யா ரசூலுல்லாஹ்! இதோ வந்துவிட்டேன்" என்று அலறியபடி, அந்த இரவிலேயே மதீனாவை நோக்கித் தனது ஒட்டகத்தைச் செலுத்தினார். மதீனாவின் தெருக்களில் ஒரு குரல் நீண்ட பயணத்திற்குப் பிறகு மதீனா வந்து சேர்ந்த பிலால் (ரழி) அவர்கள், நேராக நபியவர்களின் ரவ்ழா ப் (கல்லறை) அருகே சென்று தேம்பித் தேம்பி அழுதார்கள். அவரது அழுகுரல் மதீனாவின் அமைதியைக் கலைத்தது.


அப்போது நபியவர்களின் பேரப்பிள்ளைகளான ஹஸன் (ரழி) மற்றும் ஹுஸைன் (ரழி) அங்கு வந்தார்கள். அவர்களைக் கட்டிப்பிடித்து முத்தமிட்ட பிலால் (ரழி) அவர்களிடம், அவர்கள் ஒரு கோரிக்கையை வைத்தார்கள்: "பிலால் அவர்களே! உங்கள் குரலில் பாங்கு கேட்டுப் பல வருடங்களாகிவிட்டது. எங்களுக்காக ஒருமுறை பாங்கு சொல்லக் கூடாதா?" விண்ணை முட்டிய அந்தப் பாங்கு பேரப்பிள்ளைகளின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல், பிலால் (ரழி) அவர்கள் மஸ்ஜிதுந் நபவியின் மேடையில் ஏறினார்கள். "அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்..." -முதல் சத்தம் கேட்டதும் மதீனாவே அப்படியே ஸ்தம்பித்தது. "பிலால் வந்துவிட்டாரா?" என மக்கள் வீதிக்கு வந்தனர். "அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ்..." -மக்கள் கூட்டம் மஸ்ஜிதை நோக்கி ஓடி வந்தது. "அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்..." - இந்த வார்த்தையை பிலால் (ரழி) அவர்கள் சொல்லியபோது, மதீனாவின் வீடுகளில் இருந்த பெண்கள் கூட கதறி அழுதுகொண்டு வீதிக்கு வந்தனர்.


"நிச்சயமாக ரசூலுல்லாஹ் அவர்கள்

மீண்டும் உயிர் பெற்று வந்துவிட்டார்கள்" என்று மக்கள் எண்ணுமளவுக்கு அந்தப் பாங்கு அவர்களின் நினைவுகளை மீட்டெடுத்தது. மதீனா மாநகரம் அன்றைய தினம் அழுத அழுகையை வரலாறு அதற்கு முன் கண்டதில்லை.


இந்தச் சம்பவம், ஒரு நேசர் தனது தலைவன் மீது கொண்டிருந்த உண்மையான அன்பிற்குச் சான்றாகும்.


சஹாபாக்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைகிவசல்லம் அவர்கள் மீது கொண்ட நேசம் போன்று நாங்களும் நபி ஸல்லல்லாஹூ அலைகிவசல்லம் அவர்கள் மீது நேசம் கொள்வோம். ❤️❤️

Monday, 12 January 2026

இமாம் ஜஃபர் ஸாதிக் நாயகம்




 #இறைஞானத்தை போதித்த இறைஞானிகள்.


தொடர் 30


ரஜப் பிறை 15ம் நாள் நினைவுபடுத்தப்பட வேண்டிய இமாம் ஜஃபர் ஸாதிக் நாயகம்


இமாம் அவர்கள் ஹிஜ்ரீ 83ம் ஆண்டு ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 17 திங்கள் பின்னேரம் கோமான் நபீயின் குலவழி செழிக்க, கொடியாய் நின்ற சீலர் அஸ்ஸெய்யித் ஸைனுல் ஆப்தீன் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் வழிப்பேரர் ஆவார்கள். அதாவது அஸ்ஸெய்யித் முஹம்மத் பாகர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மகனாகப் பிறந்தார்கள் இமாம் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்..


பாட்டனார் அஸ்ஸெய்யித் ஸைனுல் ஆப்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே, தனது பேரனுக்கு 'ஜஃபர் ஸாதிக்' என்ற திருநாமத்தை சூட்டினார்கள். அது மாத்திரமன்றி, தனது பாட்டனாரிடமே அண்ணல் ஜஃபர் ஸாதிக் நாயகம் ஞானக்கலைகள் அனைத்தையும் கற்றார்கள்.


பாட்டனார் அஸ்ஸெய்யித் ஸைனுல் ஆப்தீன் நாயகம், இமாம் ஜஃபர் ஸாதிக் நாயகம் 12 வயதை அடைந்த போது வபாத்தானார்கள். பிறகு அண்ணல் ஜஃபர் ஸாதிக் நாயகம், தனது தந்தை இமாம் பாகர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமே, அவர்களின் வபாத் வரை கற்றார்கள். 30 வயதை தாண்டும் போது, தந்தை இமாம் பாகர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் வபாத்தானார்கள்.


அதன் பிறகு, புனித மதீனாவில் ஒரு கல்விக்கூடத்தை நிறுவினார்கள். அக் கல்விக் கூடத்தில் சேர்வதற்கு ஹிஜாஸ், இராக், குராஸான், சிரியா ஆகிய பல பகுதிகளிலிருந்தும், கிட்டத்தட்ட 4000 மாணவர்கள் வந்தார்கள் என ஒரு வரலாற்று குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒருமுறை இமாம் அவர்கள் பள்ளிக்கு சென்று தொழுது முடித்துவிட்டு, அவ்விடத்திலேயே வீற்றிருந்த போது, அங்கே தொழுது முடித்த அயலூர்வாசி ஒருவர் தனது பயணப் பொருட்களை தொலைத்து விட்டு, இமாம் அவர்களை பிடித்துக் கொண்டார். தன் பொருட்களை திருடி விட்டதாக இமாம் அவர்கள் மீது பழி சுமத்தினார். அவரின் அவல நிலையை கண்ட இமாம் அவர்கள், அவரை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று 2000 பொற்காசுகள் நிறைந்த ஒரு பையை அவர் கையில் கொடுத்து வழியனுப்பினார்கள்.


இழந்தது என்னவோ 1000 பொற்காசுகளே என்றிருக்க, 2000 பொற்காசுகள் கிடைத்திருப்பதை நினைத்து வியப்பும், திகைப்பும் மேலிட விரைந்து சென்றார். சற்று நேரத்தில் இமாம் அவர்களின் வீட்டின் கதவு தட்டப்பட்டது. கதவை திறந்த போது, அந்த நபர் கதறி அழுதவாறு கைகள் இரண்டிலும் இரு பைகளைப் பிடித்தவாறு இமாம் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு வேண்டி நின்றார். பள்ளியில் தான் இழந்த பை தனக்கு கிடைத்துவிட்டது என்றும், தங்களை வீணாக சந்தேகப்பட்டு விட்டேன் என்றும் கதறினார்.


இமாம் அவர்கள் தன் மீது வீண் பழி சுமத்தியதை பொருட்படுத்தவில்லை. அந்த மனிதர் இமாம் அவர்கள் கொடுத்த 2000 பொற்காசுகள் கொண்ட பையை கொடுத்த போது, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பேரர் புன்னகையுடன் கூறினார்கள் : "நாங்கள் கொடுத்த அன்பளிப்பை திரும்ப பெறுவதில்லை" என்று..


 இமாம் ஜஃபர் ஸாதிக் நாயகம் எக்கட்டத்திலும் ஆட்சியாளர்களின் தவறுக்கு தலை சாய்க்கவோ, அவைகளுக்கு ஒத்துப் போகவோ இல்லை..

அதனாலேயே பல இன்னல்களை சந்தித்தார்கள். அப்படியான பல சோதனைகளில், ஒன்றாக இமாம் அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்டது.. அதையும் இறைவிதியாய் ஏற்றுக்கொண்டு, தன் இன்னுயிரை நீத்தார்கள்..


 ஹிஜ்ரீ 83ம் ஆண்டு ரபீயுனில் அவ்வல் மாதம், பிறை 17, திங்கள் பின்னேரம் பிறந்த இமாம் அவர்கள், ஹிஜ்ரீ 148 ரஜப் பிறை 15ல் தங்களது 65வது வயதில் வபாத்தாகி ஜன்னத்துல் பகீயில் அவர்களின் தந்தை மற்றும் பாட்டனாருக்கு அருகாமையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.


தொகுப்பு : மௌலவீ AMM. அப்துல் மலிக் நஜாஹீ

விபச்சாரம் (ஷினா -زنا )

 


#விபச்சாரம் (ஷினா -زنا )


அல்லாஹ்வின் பெயரில் ஆரம்பிக்கிறேன்.

தயவு செய்து முழுமையாக வாசியுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.


தொகுப்பு மெளலவி யூசுப் முஸ்தபி,காதிரி 

Muhammed Yoosuf Musthafi 


இமாம் ஷம்ஸுத்தீன் அல்-தஹபி (ரஹ்மத்துல்லாஹ்) அவர்களின் அல்-கபாயிர் என்ற நூலில் வருவது:


திருமணமான பெண்ணுடன் விபச்சாரம் செய்த ஆணுக்கும், அந்தப் பெண்ணுக்கும்,

 கபரில் இந்த உம்மத்தின் பாதி தண்டனை ஏற்படும்.


 கியாமத் நாளில்:


அந்த பெண்ணின் கணவருக்குத் தெரியாமல் நடந்திருந்தால்,

அல்லாஹ் அவளது கணவரின் நற்செயல்களிலிருந்து தீர்ப்பு வழங்குவான்.


அந்த கணவருக்குத் தெரிந்தும், அவர் மௌனம் காத்திருந்தால்,

அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தை ஹராமாக்குவான்.


ஏனெனில், சொர்க்க வாசலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:


தயூத் (தன் குடும்பத்தில் அசிங்கத்தை அறிந்தும் பொறாமை இல்லாதவன்) மீது சொர்க்கம் ஹராம்.


தயூத் என்பவன் 

தன் குடும்பத்தில் நடக்கும் அசிங்கத்தை அறிந்தும்,பொறாமை கொள்ளாமல், தடுக்காமல் இருப்பவன்.மேலும் கூறப்பட்டுள்ளது:


தனக்கு ஹலால் அல்லாத பெண்ணை ஆசையுடன் தொடும் ஒருவன்

  கியாமத் நாளில் அவனது கை கழுத்தில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் வருவான்.


அவளை முத்தமிட்டால்

  அவனது உதடுகள் நரகத்தில் கத்தரிக்கப்படும்.


அவளுடன் விபச்சாரம் செய்தால்

  அவனது தொடைகள் பேசும்

  “நான் ஹராமுக்காக ஏறினேன்” என்று சாட்சி சொல்லும்.


அப்போது அல்லாஹ் அவனை கோபத்தின் பார்வையால் நோக்குவான்;

அவனது முகத்தின் மாமிசம் உதிரும்.


அவன் மறுப்பான்:

“நான் எதுவும் செய்யவில்லை!”


அப்போது:


அவனது நாவு ஹராம் பேசினேன்”

அவனது கைகள் “ஹராம் தொட்டேன்”

அவனது கண்கள்: “ஹராம் பார்த்தேன்”

அவனது கால்கள்: “ஹராம் நோக்கி நடந்தேன்”

அவனது மறைவிடம்“நான் செய்தேன்”

ஒரு மலக்“நான் கேட்டேன்”

மற்றொரு மலக்“நான் எழுதினேன்”


என்று கூறுவார்கள்.


அப்போது அல்லாஹ் தஆலா கூறுவான்:


“நான் பார்த்தேன்… ஆனாலும் மறைத்தேன்.”


பின்னர் அல்லாஹ் கூறுவான்:


“என் மலக்குகளே! அவனைப் பிடியுங்கள்;

 என் தண்டனையை அவனுக்கு சுவைக்கச் செய்யுங்கள்.

என் முன்னிலையில் வெட்கமில்லாதவனின் மீது

 என் கோபம் கடுமையாகியுள்ளது.”


இன்றைய நிலை:


ஆடை இல்லாமல் சூரியக் குளியல் செய்யும் பெண்

 நிர்வாண ஆணை கட்டிப்பிடிக்கும் பெண்

 பெண்ணை விரும்பும் பெண் (சிஹாக்)

ஆணை விரும்பும் ஆண் (லிவாத்)

திருமணமானவளுக்கு காதலன் – விபச்சாரம்

 அசிங்கப் படங்களைச் சேமித்து பகிர்பவன்

 அசிங்கப் படங்களுடன் சிகரெட், மது…


“சரி… நாங்கள் FREE!”

என்று சொல்கிறோம்.


ஆனால் மாறியது என்ன?


👉 நமது கொள்கைகள்

👉 நமது மார்க்கம்

👉 நமது இயல்பு (பித்ரா – இஸ்லாமிய இயல்பு)


நாம் அரிதாகவே குர்ஆன் வாசிக்கிறோம்.

அதில் சிலருக்கே சரியாக வாசிக்கத் தெரியும்.


இன்று சமூக வலைதளங்களில்:


* அரைநிர்வாணப் படங்கள்

* அணைப்பு, முத்தம்

* வெளிப்படை பாவங்கள்


 நான் பயப்படுவது இரண்டு விஷயங்கள் மட்டும்:


1. “அவர்கள் தீமையைச் செய்து கொண்டிருந்தும்,

   ஒருவருக்கொருவர் தடுத்துகொள்ளவில்லை”

   என்று என் பதிவில் எழுதப்படுவதை.


2. அல்லது “பாவங்களை வெளிப்படையாகச் செய்தவர்கள்”

   என்று உங்கள் பதிவில் எழுதப்படுவதை.


நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்** அவர்கள் கூறினார்கள்:


“என் உம்மத்தினர் அனைவரும் மன்னிக்கப்படுவார்கள்;

பாவங்களை வெளிப்படையாகச் செய்பவர்கள் தவிர.”


நம்மில் மிகவும் நெருக்கமானவர்கள் கூட

இந்தப் படங்களைப் பகிர்வதைப் பார்க்கிறோம்.


ஒரு விஷயம் நினையுங்கள்:

நாம் மரணித்த பிறகும்,

அவை பாவங்களாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்.


#ஒரு நினைவூட்டல்:


* ஒரு பெண் தோழியை தவறான வழிக்குத் தள்ளுகிறாள்

* ஒரு குழந்தை iPad கேட்டு அழுகிறது

* ஒரு பெண் அவமானப் படங்களைப் பதிவேற்றுகிறாள்

* பணம் இல்லாதவர்கள் தங்களை விற்பனை செய்கிறார்கள்

* ஒரு தாய் காதலனுக்காக மகளை கொல்கிறாள்

* திருமணத்தை மறுக்கும் பெண்

* ஆண்மை இழக்கும் ஆண்

* கிப்லா எங்கே என்று தெரியாமல், ஆயத்தும் ஹதீஸும் பகிர்வோர்


*புத்திசாலிகளுக்கான வார்த்தைகள் மட்டுமே.

நினைவில் கொள்ளுங்கள்:

*அல்லாஹ்வின் இரக்கத்திலிருந்து விரட்டப்படலாம்.


எச்சரிக்கை:


* கையில் உள்ள கடிகாரத்தை ஒருவர் கழற்றுவார்

* காரின் கதவை ஆம்புலன்ஸ் ஊழியர் திறப்பார்

* சட்டையின் பொத்தானை கப்ரு ஊழியர் திறப்பார்

* கண்களை மூடுவோம்…

  மீண்டும் திறப்பது வானங்களும் பூமியும் ஆட்சி செய்யும் அல்லாஹ்வின் முன் – கியாமத் நாளில்.**


👉 ஆகையால், உங்கள் செயல்களைச் சீராக்குங்கள்.

Sunday, 11 January 2026

பிலால் ரலி

 


உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள், யா ரசூலல்லாஹ்! பிலாலுடைய பாங்கு சரியில்லை என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். பிலால் "அஷ்ஹது" என்பதற்குப் பதிலாக, "அஸ்ஹது" என்று சொல்கிறார். பிலால் அவர்கள் அப்படித்தான் பாங்கு சொல்லுவார்கள் என்று நபியவர்களுக்கும் தெரியும். உமையா என்பவனிடம் பிலால் அவர்கள் அடிமையாக இருந்தபொழுது, அவர்களின் நாவில் நெருப்புக் கங்கை வைத்து வேதனை செய்தான் உமையா. அதிலே பாதிக்கப்பட்ட அவர்களின் நாவிலே "ஷீன்" வராது.

    உமரே! அதற்கு என்ன செய்யலாம்? என நபியவர்கள் கேட்டார்கள். யா ரசூலல்லாஹ்! வேறு முஅத்தினை மாற்றிவிடலாம் என்று துணிந்து சொல்லிவிட்டார்கள். இந்த வார்த்தையை வேறு யாரும் சொல்லியிருந்தால் நபியவர்கள் பெரிதாக எடுக்கமாட்டார்கள். உமர் அவர்கள் ஒரு ஆலோசனையை கொண்டுவந்தார்கள் என்றால், அதற்குப் பிறகு அல்லாஹ் அதையே சட்டமாக கொண்டுவந்துவிடுவான்.

    எனவே, ஒருவேளை இது அல்லாஹ்வின் கருத்தாக இருக்குமோ என நபியவர்கள் எண்ணினார்கள். சரி, கூப்பிடுங்கள் பிலாலை. பிலால் ரலியல்லாஹு அன்ஹு வந்தார்கள். இனி நீங்கள் பாங்கு சொல்லவேண்டாம் என்று சொன்னவுடன், சரி நாயகமே என்று பிலால் அவர்கள் போய்விட்டார்கள்.

    இரவு அனைவரும் தூங்குகிறார்கள். இரவு ...நீண்டுகொண்டே செல்கிறது. தஹஜ்ஜத் நேரம் கடந்து வெளிச்சம் வரவேண்டும். நபியவர்கள் வானத்தின் வெளிச்சத்தைப் பார்க்கிறார்கள். வானம் வெளிச்சம் தரவில்லை. மீண்டும் தஸ்பீஹ் செய்கிறார்கள். வெளிச்சம் வரவில்லை. இரவு நீண்டுகொண்டே செல்வதால் உமர் அவர்கள் பயந்தவர்களாக பள்ளியை நோக்கி ஓடிவருகிறார்கள். அல்லாஹ்வின் வஹீயை எதிர்பார்த்து நபியவர்கள் இரண்டு ரகஅத் தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்தபொழுது, வலது பக்கத்தில் வந்து உட்கார்ந்திருந்தது..."ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்."

     யா ரசூலல்லாஹ்! இரவு நீண்டுகொண்டே போகிறதே என்றா நினைக்கிறீகள். இல்லை நாயகமே, இரவை பிலாலுக்காக அல்லாஹ் நிறுத்திவைத்திருக்கிறான் நாயகமே! ஒவ்வொரு நேர பிலாலின் பாங்கிற்காக ஒவ்வொரு மலக்குமார்களும் ஏங்கிக் கிடப்போம் நாயகமே! இனி பிலால் பாங்கு மேடையில் ஏறினால் மட்டுமே பூமியில் பகல். இல்லையென்றால் பகல் இல்லை என்று அல்லாஹ் சொல்லிவிட்டான் நாயகமே! உங்கள் முடிவை மாற்றுங்கள் நாயகமே! சொல்லிவிட்டு ஒரு வார்த்தைச் சொன்னார்கள்,

    "யா ரசூலல்லாஹ்! அல்லாஹ் தன் சட்டத்தையே உடைக்கிறான். இனி பிலால் 'ஸீன்' என்று சொன்னாலே, அல்லாஹ்விடம் 'ஷீன்' நாயகமே.!"

    துடித்துப்போன ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், பிலால் எங்கே? எனத் தேடுகிறார்கள். பிலால் அவர்கள் வீட்டிற்கு கூடச் செல்லாமல், மஸ்ஜிதுன் நபவியிலே சுஜுதில் அழுதுகொண்டிருக்கிறார்கள், யா அல்லாஹ்! நான் என்ன பாவம் செய்தேன். இந்த உலகத்தில் பாக்கியங்கள் பறிக்கப்படுவதற்கு பாவங்கள் காரணமாக இருக்கும்...

    "நாம் விளங்கவேண்டிய விஷயம், மஸ்ஜிதோடு தொடர்பில் இருப்பவரோடு அல்லாஹ்வின் தொடர்பும் நெருக்கமாக இருக்கும்."

பிறருக்கும் பகிர்ந்து அதிக நன்மைகளை பெறலாம் 🌹🌹🌹🌹🌹🌹 மாஷாஅல்லாஹ்


நபித்தோழர் வரலாறு

பிலால் (ரலி)


பிலால் (ரலி) அவர்கள் அபிஷீனிய நாட்டைச் சார்ந்த நீக்ரோ அடிமையாவார். சில பேரித்தம் பழங்களுக்கு அடிமையாய் இருந்தவர். பிலால் (ரலி) யின் எஜமான் உமைய்யா பின் கலஃப் என்பவன். இவன் பனு ஜுமஹ் வம்சத்தை சார்ந்தவன்.


பிலால் (ரலி) அவர்களின் தந்தைப் பெயர் ரபாஹ். தாயாரின் பெயர் ஹமாமா இவரும் அடிமையாய் இருந்தார்கள். அடிமையாயிருந்த பிலால் (ரலி) ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்தார். அன்றைய அரபு உலகில் புரையோடிப் போயிருந்த பல தெய்வக் கொள்கையிலும், புரோகிதத்திலும், தனிமனித வழிபாட்டிலும் திளைத்திருந்த மக்களிடம் நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைத்த போது அதனை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்களில் பிலால் (ரலி) அவர்களும் ஒருவர். அபரிதமான இணைவைப்பாளர்களுக்கு இடையில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் இருந்த ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டோரின் நிலை பரிதாபகரமாக இருந்தது. இணைவைப்பாளர்களின் கொடுமைக்கும் சித்தரவதைக்கும் ஆளாயினர்.


ஏகத்துவக் கொள்கைளின் எதிரில் இணைவைப்பும், தனிமனித வழிபாட்டின் அனுஷ்டானங்களும் புரோகிதமும் தவிடு பொடியாவதைக் கண்டு வெகுண்ட மக்கத்து இணைவைப்பாளர்கள் ஏகத்துவத்தை ஏற்றுக் கொன்டோரைக் கொடுமைப் படுத்துவதில் சிறிதும் சளைக்கவில்லை. உமைய்யா பின் கலஃப் தன் அடிமையான பிலால்(ரலி) அவர்கள் மீது ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டதற்காக சினந்து தம்வம்சத்தாரின் துணையுடன் அவரை மிகவும் கொடுமைப் படுத்தினான். சுடும் பாலைவன மணலில் அவரை ஆடையின்றி கிடத்தி நெஞ்சில் பாறாங்கல்லை வைத்து பிலால் (ரலி) அவர்கள் சற்றும் அசைய முடியாதவாறு செய்து துன்புறுத்தினான். சித்தரவதையின் உச்சநிலையை உணர்ந்த போதும் பிலால் (ரலி) அவர்கள் தான் ஏற்றிருந்த ஏகத்துவ கொள்கையிலிருந்து எள் முனையும் மாறவில்லை அவர்களின் உடல் சித்தரவதையால் சின்னா பின்னப் படுத்தப்பட்டு கசையடி, அடி உதை என தண்டனைகள் அதிகரிக்கப்பட்டும் கூட “'அஹதுன் அஹதுன்" என்றே கூறினார்கள்.


இணைவைப்பாளர்களின் இத்தண்டனைகள் சித்தரவதைகள் யாவுமே பிலால் (ரலி) அவர்கள் கொண்டிருந்த ஏகத்துவக் கொள்கையை மேன்மேலும் உறுதிப் படுத்தவே உதவியது. அடிமையாய் இருந்து இவ்வாறு சித்தரவதைகளுக்கு ஆளாகிய பிலால் (ரலி) அவர்களை விடுதலை செய்ய எண்ணிய அபூபக்கர் (ரலி) அவர்கள் அவரின் எஜமானிடம் பிலால்(ரலி)அவர்களை விலைக்கு கேட்கிறார்கள். 10 தங்க காசுகளுக்கு பிலால் (ரலி) அவர்களை அபூபக்கர் (ரலி) அவர்களிடம் உமைய்யா விற்று விட்டு எக்காளத்தில் கூறுகிறான் இவரை நீர் ஒரு தங்கக் காசுக்கு கேட்டிருந்தாலும் நான் விற்றிருப்பேன் எனக் கூறுகிறான். பிலால் (ரலி) அவர்களுக்காக வேண்டி நீ 1000 தங்கக் காசுகள் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன் என அபூபக்கர்(ரலி) அவர்கள் அவனுக்கு பதில் அளித்தார்கள். பின்னர் பிலால்(ரலி) அவர்களை அபூபக்கர் (ரலி) அவர்கள் விடுதலை செய்தார்கள்.


மதினாவிற்கு இடம் பெயர்ந்தபின் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த பிலால்(ரலி)அவர்களின் நடைமுறைகள் நபிகளாரைக் கவர்ந்தன. மதீனா பள்ளியில் மக்களை தொழுகைக்கு அழைக்கும் பாங்கு கூறும் பணிக்கு நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரலி)யை நியமிக்கிறார்கள். அபிஷீனிய அடிமைக்கு இத்தனை பெரிய அந்தஸ்த்தா? என இணைவைப்பாளர்கள் எரிச்சலடைந்தனர். முதல் இமாம் நபி (ஸல்) முதல் முஅத்தீன் பிலால் (ரலி) என நாம் அறிகிறோம்.


பிலால் (ரலி) பத்ருப் போரில் பங்கெடுத்துக் கொண்ட சஹாபிகளில் ஒருவர். அப்போரில் இணைவைப்பாளனான உமைய்யாவை(முன்னாள் எஜமான்) பிலால் (ரலி) அவர்கள் கொன்றார்கள். மக்கா வெற்றி கொள்ளப் பட்டதும் அல்லாஹ்வின் ஆலயமாம் கஃபாவில் நபி(ஸல்) அவர்களுடன் நுழைந்த மூவரில் பிலால் (ரலி) அவர்களும் ஒருவர் அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கி அப்புறப் படுத்திய பின்னர் முதன் முதலில் பாங்கோசையை முழங்கியவரும் அவரே. நபிகளாரின் மரணத்திற்குப் பின் அண்ணல் நபிகளின் மீது கொண்ட அளவு கடந்த பற்றினால் பாங்கு சொல்லும் போது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் நினைவுக்கு வருவதை உணர்ந்த பிலால் (ரலி) பாங்கு கூற மறுக்கிறார்கள். தான் சிரியா சென்று ஜிஹாத் செய்யப்போவதாக அபூபக்கர் (ரலி) யிடம் சொல்கிறார்கள். அபூபக்கர் (ரலி) பிலால் (ரலி) அவர்களை பாங்கு கூறுமாறு உத்தரவிடுகிறார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள் நீர் எம்மை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தது அல்லாஹ்வின் அருளை நாடியா? அல்லது உம் கட்டளைக்கு கீழ்படிய வேண்டியா? என்று வினவினார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் பிலால் (ரலி) அவர்களுக்கு சிரியா செல்ல அனுமதி தந்தார்கள். சிரியா சென்றடைந்த பிலால் (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்கள் தன் ஆட்சி காலத்தில் அங்கு சென்று சந்தித்து பாங்கு கூறுமாறு கேட்டுக் கொண்டார்கள். பாங்கு கூறுகிறார்கள் பிலால் (ரலி) அவர்கள்.

பனுஜுஹ்ரா வம்சத்து பெண் ஒருவரையும் ஹிந்துல் கூலானிய்யா என்ற பெண்னையும் மணமுடித்திருந்த பிலால் (ரலி) அவர்களுக்கு குழந்தைகளேதுமில்லை. தம் 70 வது வயதில் சிரியாவின் தலை நகரான டமாஸ்கஸில் இயற்கை எய்தினார்கள். மிஃராஜ் சென்று திரும்பிய நபி(ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் சுவனத்தில் உமது காலடியோசையை நான் கேட்டேன். நீர் செய்யும் நல்லறம் எது? என நபிகளார் வினவியதற்கு நான் எப்பொழுது ஒலுச் செய்தாலும் உடனே 2 ரக்காஅத் தொழும் வழக்கமுடையவனாக இருக்கிறேன் என பதிலளித்தார்கள்.


படிப்பினை :


அல்லாஹ் அருள் மறையில் எங்கெல்லாம் ஈமான் கொள்வதைக் குறிப்பிடுகிறானோ அங்கெல்லாம் நல்லறங்கள் புரிவதையும் இணைத்தே கூறுகிறான்.


நான் எதை ஏவியுள்ளேனோ அதை இயன்றவரை செய்யுங்கள். நான் எதைத் தவிர்ந்து கொள்ளக் கூறினேனோ அதை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளுங்கள். எனும் நபி மொழிக் கேற்ப பிலால் (ரலி) அவர்களின் வாழ்வு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமைந்திருந்தது. அவர்களின் வழியில் நாமும் செயல்பட்டு மறுமையில் வெற்றியடைய அல்லாஹ் அருள் புரிவானாக

Starlink எதிர்கால வளர்ச்சி கேள்விக்குறியாக மாறி உள்ளது!

 


ஈரான் இணைய சேவை நிறுத்தம் துவங்கிய சில மணி நேரங்களில் Elon Musk தனது Starlink -யை ஈரான் மீது Activate செய்து விட்டதாக அறிவித்தார்.


இதற்கு முன்பு 2022 -ல் இதேபோல் ஈரான் 🇮🇷 உள்ளே நடந்த கலவரத்திற்கு ஆதரவாக Starlink -யை திறந்து விட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.


Starlink -இணையத்தை உலகில் யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பது தான் அதன் சிறப்பு!!


அதனால் தான் அதற்கு விலையும் அதிகம், பங்குச்சந்தை ஏற்றமும் அதிகம்!


இப்போது விசயத்துக்கு வருவோம்!


2022 ல் செய்தது போலவே நேற்று முன்தினமும்

Starlink -யை இலவசமாக திறந்து விட்டு கெத்து காட்ட துவங்கினார் Elon musk.


ஏற்கனவே 

அந்த பழைய அனுபவம் இருந்த காரணத்தால் இதனை முன்பே எதிர்பார்த்து காத்திருந்துள்ளது ஈரான் 🇮🇷 


Elon musk அறிவித்த சில மணி நேரங்களில் எல்லாம் ஒட்டுமொத்த Starlink - யை Jammer வைத்து தடுத்து விட்டது ஈரான் 🇮🇷.


தங்களின் 80% சேவை

 ஈரான் 🇮🇷 முழுவதும் தடைப்பட்டது என்று Starlink ஒப்புக் கொண்டு உள்ளது!


ஒரே நேரத்தில் 5,000 கி.மீ -க்கு‌ அளவுக்கு ஈரான் தனது 

Jammer -யை‌ பயன்படுத்தி உள்ளது!


இது ரஷ்யா 🇷🇺 ‌, சீனா 🇨🇳 உதவியுடன் நடந்ததாக மேற்குலக ஆட்கள் கூறினாலும்..,

இல்லை... இப்படி கூறுவது எங்களின் தொழில்நுட்ப வல்லுநர்கள் திறமையை இழிவு படுத்தும் செயல்.


இது எங்களின் உள்நாட்டு தயாரிப்பு என்கிறார்கள் ஈரான் உள்ளே இருப்பவர்கள்.


இதுவரை உலகில் எந்த அரசும் தடுக்கவில்லை என்று பெருமை பீற்றிய அமெரிக்க தயாரிப்பு இப்போது Starlink எதிர்கால வளர்ச்சி கேள்விக்குறியாக மாறி உள்ளது!