#இறைஞானத்தை போதித்த இறைஞானிகள்.
தொடர் 30
ரஜப் பிறை 15ம் நாள் நினைவுபடுத்தப்பட வேண்டிய இமாம் ஜஃபர் ஸாதிக் நாயகம்
இமாம் அவர்கள் ஹிஜ்ரீ 83ம் ஆண்டு ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 17 திங்கள் பின்னேரம் கோமான் நபீயின் குலவழி செழிக்க, கொடியாய் நின்ற சீலர் அஸ்ஸெய்யித் ஸைனுல் ஆப்தீன் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் வழிப்பேரர் ஆவார்கள். அதாவது அஸ்ஸெய்யித் முஹம்மத் பாகர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மகனாகப் பிறந்தார்கள் இமாம் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்..
பாட்டனார் அஸ்ஸெய்யித் ஸைனுல் ஆப்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே, தனது பேரனுக்கு 'ஜஃபர் ஸாதிக்' என்ற திருநாமத்தை சூட்டினார்கள். அது மாத்திரமன்றி, தனது பாட்டனாரிடமே அண்ணல் ஜஃபர் ஸாதிக் நாயகம் ஞானக்கலைகள் அனைத்தையும் கற்றார்கள்.
பாட்டனார் அஸ்ஸெய்யித் ஸைனுல் ஆப்தீன் நாயகம், இமாம் ஜஃபர் ஸாதிக் நாயகம் 12 வயதை அடைந்த போது வபாத்தானார்கள். பிறகு அண்ணல் ஜஃபர் ஸாதிக் நாயகம், தனது தந்தை இமாம் பாகர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமே, அவர்களின் வபாத் வரை கற்றார்கள். 30 வயதை தாண்டும் போது, தந்தை இமாம் பாகர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் வபாத்தானார்கள்.
அதன் பிறகு, புனித மதீனாவில் ஒரு கல்விக்கூடத்தை நிறுவினார்கள். அக் கல்விக் கூடத்தில் சேர்வதற்கு ஹிஜாஸ், இராக், குராஸான், சிரியா ஆகிய பல பகுதிகளிலிருந்தும், கிட்டத்தட்ட 4000 மாணவர்கள் வந்தார்கள் என ஒரு வரலாற்று குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருமுறை இமாம் அவர்கள் பள்ளிக்கு சென்று தொழுது முடித்துவிட்டு, அவ்விடத்திலேயே வீற்றிருந்த போது, அங்கே தொழுது முடித்த அயலூர்வாசி ஒருவர் தனது பயணப் பொருட்களை தொலைத்து விட்டு, இமாம் அவர்களை பிடித்துக் கொண்டார். தன் பொருட்களை திருடி விட்டதாக இமாம் அவர்கள் மீது பழி சுமத்தினார். அவரின் அவல நிலையை கண்ட இமாம் அவர்கள், அவரை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று 2000 பொற்காசுகள் நிறைந்த ஒரு பையை அவர் கையில் கொடுத்து வழியனுப்பினார்கள்.
இழந்தது என்னவோ 1000 பொற்காசுகளே என்றிருக்க, 2000 பொற்காசுகள் கிடைத்திருப்பதை நினைத்து வியப்பும், திகைப்பும் மேலிட விரைந்து சென்றார். சற்று நேரத்தில் இமாம் அவர்களின் வீட்டின் கதவு தட்டப்பட்டது. கதவை திறந்த போது, அந்த நபர் கதறி அழுதவாறு கைகள் இரண்டிலும் இரு பைகளைப் பிடித்தவாறு இமாம் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு வேண்டி நின்றார். பள்ளியில் தான் இழந்த பை தனக்கு கிடைத்துவிட்டது என்றும், தங்களை வீணாக சந்தேகப்பட்டு விட்டேன் என்றும் கதறினார்.
இமாம் அவர்கள் தன் மீது வீண் பழி சுமத்தியதை பொருட்படுத்தவில்லை. அந்த மனிதர் இமாம் அவர்கள் கொடுத்த 2000 பொற்காசுகள் கொண்ட பையை கொடுத்த போது, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பேரர் புன்னகையுடன் கூறினார்கள் : "நாங்கள் கொடுத்த அன்பளிப்பை திரும்ப பெறுவதில்லை" என்று..
இமாம் ஜஃபர் ஸாதிக் நாயகம் எக்கட்டத்திலும் ஆட்சியாளர்களின் தவறுக்கு தலை சாய்க்கவோ, அவைகளுக்கு ஒத்துப் போகவோ இல்லை..
அதனாலேயே பல இன்னல்களை சந்தித்தார்கள். அப்படியான பல சோதனைகளில், ஒன்றாக இமாம் அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்டது.. அதையும் இறைவிதியாய் ஏற்றுக்கொண்டு, தன் இன்னுயிரை நீத்தார்கள்..
ஹிஜ்ரீ 83ம் ஆண்டு ரபீயுனில் அவ்வல் மாதம், பிறை 17, திங்கள் பின்னேரம் பிறந்த இமாம் அவர்கள், ஹிஜ்ரீ 148 ரஜப் பிறை 15ல் தங்களது 65வது வயதில் வபாத்தாகி ஜன்னத்துல் பகீயில் அவர்களின் தந்தை மற்றும் பாட்டனாருக்கு அருகாமையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
தொகுப்பு : மௌலவீ AMM. அப்துல் மலிக் நஜாஹீ







