மனிதனின் தவறும் இறைவனின் மன்னிப்பும்
ஒரு மனிதன் தவறு செய்வது இழிவானது அல்ல; ஆனால் அந்தத் தவறிலேயே திளைத்திருப்பதும், பாவங்களைச் செய்வதற்குத் துணிவதும் தான் இழிவானதாகும்.
ஒருவன் தனது குறையை உணர்ந்து, அதற்காக அல்லாஹ்விடம் தவ்பா (பாவமன்னிப்பு) தேடினால், அவனது தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அவனது பாவத்தை அழித்துவிடுகிறான்.
இதனைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
"நிச்சயமாக நான், எவர் (பாவத்திலிருந்து) மீண்டு, ஈமான் கொண்டு, நற்செயல்கள் புரிந்து, பின்னர் நேர்வழியில் நிலைத்திருக்கிறாரோ அவருக்கு மிக மன்னிப்பவன்." (அல்குர்ஆன் 20:82)
பாவமன்னிப்பின் இத்தகைய முக்கியத்துவத்தினால், தவ்பா செய்பவர்களை ஏற்றுக்கொள்வதில் இறைவனின் பரந்த அருளை உறுதிப்படுத்தும் வகையில், நபிகளார் ﷺ அவர்களின் சுன்னாவில் சில கதைகள் இடம்பெற்றுள்ளன.
அதில் ஒன்றுதான் 'அல்கிஃப்ல்' என்பவரின் வரலாறு
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறக் கேட்டேன்:
"பனூ இஸ்ரவேலர்களில் 'அல்கிஃப்ல்' என்பவர் எத்தகைய பாவத்தையும் செய்யத் தயங்கமாட்டார். அவரிடம் ஒரு பெண் வந்தபோது, அவளுடன் தவறாக நடப்பதற்காக அறுபது தீனார்களை அவளுக்கு வழங்கினார். ஒரு கணவன் தன் மனைவியிடம் அமருவது போல அவர் அந்தப் பெண்ணிடம் அமர்ந்தபோது, அவள் நடுங்கி அழுதாள். அவர் அவளிடம்: 'ஏன் அழுகிறாய்? உன்னை நான் வற்புறுத்தினேனா?' என்று கேட்டார். அதற்கு அவள்: 'இல்லை, ஆனால் இது நான் இதுவரை செய்திராத செயல். வறுமை மட்டுமே என்னை இதற்குத் தூண்டியது' என்றாள்.
அதற்கு அவர்: 'நீயே இதைக் கண்டு அஞ்சும்போது, நான் அஞ்சமாட்டேனா? நீ போகலாம், அந்தப் பணம் உனக்கே சேரட்டும்' என்று கூறிவிட்டு, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இதற்குப் பிறகு நான் ஒருபோதும் அல்லாஹ்வுக்கு மாறு செய்யமாட்டேன்' என்றார்.
அன்றிரவே அவர் மரணமடைந்தார்.
காலையில் அவரது வீட்டு வாசலில்: 'நிச்சயமாக அல்லாஹ் அல்கிஃப்லை மன்னித்துவிட்டான்' என்று எழுதப்பட்டிருந்தது." (ஆதாரம்: திர்மிதி, ஹாகிம்).
அவர் தன் மீது அநீதி இழைத்துக்கொண்டு பாவங்களில் மூழ்கியிருந்தவர். ஆனால் விபச்சாரம் போன்ற ஒரு பெரும் பாவத்தைச் செய்ய முனைந்தபோது, அல்லாஹ்வின் கருணை அவரைத் தடுத்தது. அவர் திருந்தியபோது, அல்லாஹ் அவரை மன்னித்து அவருக்குப் பெரும் கண்ணியத்தை வழங்கினான்.
இக்கதையிலிருந்து நாம் கற்கும் பாடங்கள்:
ஒரு முஸ்லிம் ஏதேனும் பாவத்தில் விழுந்துவிட்டால், உடனே தவ்பா செய்து வருந்த வேண்டும். செய்த பாவத்திற்குப் பகரமாக அதற்கு நேர்மாறான நன்மைகளில் ஈடுபட வேண்டும்.
தவ்பா என்பது: செய்த தவறுக்காக வருந்துவது, மீண்டும் அதைச் செய்யமாட்டேன் என்று உறுதி கொள்வது மற்றும் இறைவனின் கருணையை எதிர்பார்ப்பது ஆகும்.
உண்மையான வருத்தத்தின் அடையாளம்: இதயம் மென்மையாதல், படைப்பினங்கள் மீது இரக்கம் காட்டுதல் மற்றும் மக்களின் (குறிப்பாக ஏழைகள் மற்றும் தேவையுடையோரின்) குறைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்.
உயிரோட்டமான வருத்தம் இருக்கும்போது, பாவத்தை விடும் உறுதி பிறக்கும். ஒருவேளை இச்சையின் காரணமாக ஒருவனால் பாவத்தை விட முடியாவிட்டால், அவன் செய்ய வேண்டிய இரண்டாவது கடமை: தீமையைத் துடைத்தெறியும் நன்மைகளைச் செய்வது. அத்தகைய நன்மைகள் மூன்று வகைப்படும்:
1- உள்ளத்தால் செய்யும் நன்மை: மன்னிப்பு வழங்கும்படி அல்லாஹ்விடம் உருக்கமாக வேண்டுவது.
2- நாவால் செய்யும் நன்மை: நாவினால் பாவத்தை ஒப்புக்கொண்டு, "யா அல்லாஹ்! நான் எனக்கு அநீதி இழைத்துக்கொண்டேன், தீமை செய்துவிட்டேன், என் பாவங்களை மன்னிப்பாயாக" போன்ற பிரார்த்தனைகளை (இஸ்திஃபார்) அதிகம் ஓதுவது.
3- உறுப்புகளால் செய்யும் நன்மை: ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்வது மற்றும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது."
-கலாநிதி அலி ஜும்ஆ-







