السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 25 January 2026

ரவ்ழாவில் திருடர்கள்

 


இஸ்லாமின் பாதுகாவலரான சுல்தான் நூர் அல்-தீன் ஸங்கி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சிரியாவில் இருந்தபோது, நபி முஹம்மது ﷺ அவர்களை கனவில் கண்டார். அந்தக் கனவில், நபி ﷺ இரண்டு ஆண்களை அவருக்குக் காட்டி, “இவர்கள் ஏற்படுத்த விரும்பும் தீங்கில் இருந்து என்னை பாதுகாப்பாயாக” என்று சுல்தானுக்கு உத்தரவிட்டார்.


அதே கனவை சுல்தான் நூர் அல்-தீன் தொடர்ந்து இரண்டாம் இரவும் மூன்றாம் இரவும் கண்டபோது, அவர் உடனடியாக மதீனாவிற்கு பயணம் செய்ய முடிவு செய்தார்.


மதீனாவின் மக்களை அவர் ஒன்று சேர்த்தபோது, இரண்டு ‘நல்லொழுக்கமுள்ள மனிதர்கள்’ காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பகலும் இரவும் இபாதத்திலும் தர்மத்திலும் ஈடுபட்டு வந்தவர்கள் என சொல்லப்பட்டது.


சுல்தான் அவர்களின் வீட்டிற்குள் நுழைந்தபோது, கனவில் கண்ட அதே இரண்டு மனிதர்களே அவர்கள் என்றும், நபி முஹம்மது ﷺ அவர்களின் புனித கப்ரு நோக்கி செல்லும் வகையில் ஒரு சுரங்கத்தை தோண்டியிருந்ததும் தெரிய வந்தது.


அவர்கள், நபி ﷺ அவர்களின் புனித உடலைத் திருட விரும்பிய உளவாளிகள் என்பதைக் கண்டு, அதை சுல்தான் நூர் அல்-தீன் முன் ஒப்புக்கொண்டார்கள். அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு, நபி ﷺ அவர்களின் புனித சமாதி இரும்புச் சுவர்களால் வலுப்படுத்தப்பட்டு, கியாமத் நாள் வரை பாதுகாக்கப்படும் வகையில் உறுதிப்படுத்தப்பட்டது.


சுல்தான் நூர் அல்-தீன் ஸங்கி அவர்கள், சிலுவைப் போராளர்களிடமிருந்து இஸ்லாமின் எல்லைகளை பாதுகாத்த மகத்தான தலைவருமாவார்.


ரஸூலுல்லாஹ் ﷺ அவர்கள் தமது புனித கப்ரில் உயிரோடு, تازா நிலையில் இருக்கின்றார்கள்; தமது உம்மத்தின் நிலைகளை அறிவார்; அவரை நம்பும் மக்களுக்காக மன்னிப்பைக் கோருகின்றார்கள்.

Friday, 23 January 2026

நீதிபதி' பதவி (Chief Justice) தேடி வருகிறது

 


இன்றைய காலத்தில் ஒரு கவுன்சிலர் பதவி கிடைப்பதாக இருந்தால்கூட, அதற்காக எதையும் செய்யத் துணியும் மனிதர்களைப் பார்க்கிறோம். ஆனால், உலகின் பாதியை ஆண்ட ஒரு சாம்ராஜ்யத்தின் 'தலைமை நீதிபதி' பதவி (Chief Justice) தேடி வருகிறது... அதை ஏற்க மறுத்து, செருப்பைக்கூட அணியாமல் ஓடிய ஒருவரைப் பற்றி இஸ்லாமிய வரலாறு பேசுகிறது என்றால் நம்ப முடிகிறதா?


அவர்தான் இமாம் சுஃப்யான் அஸ்-ஸவ்ரி.


ஹதீஸ் உலகில் இவருக்கு என்ன பட்டம் தெரியுமா? "அமீருல் முஃமினீன் ஃபில் ஹதீஸ்" (ஹதீஸ் துறையின் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர்). கலீஃபாக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 'அமீருல் முஃமினீன்' என்ற பட்டத்தை, ஹதீஸ் துறையில் இவருக்கு வழங்கினார்கள் அறிஞர்கள்.


பிறப்பு: ஹிஜ்ரி 97 (கூஃபா நகரில்).


இறப்பு: ஹிஜ்ரி 161 (பஸ்ராவில் தலைமறைவாக இருந்தபோது மரணம்).


கல்விப் பயணம்: சுமார் 600 ஷைக்களிடம் (ஆசிரியர்களிடம்) பாடம் பயின்றுள்ளார்.


அறிவித்த ஹதீஸ்கள்: சுமார் 30,000 ஹதீஸ்களை இவர் அறிவித்துள்ளார் என்று இமாம் தஹபி குறிப்பிடுகிறார்.


ஃபிக்ஹ் (சட்டத்துறை): இவருக்கு என்று தனியாக "ஸவ்ரி மத்ஹப்" இருந்தது. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் போன்றவர்கள் கூட ஆரம்பத்தில் இவரது ஃபிக்ஹ் சட்டங்களையே பின்பற்றினர். ஆனால், பிற்காலத்தில் இவரது மாணவர்கள் அதைத் தொகுக்கத் தவறியதால் அந்த மத்ஹப் வழக்கொழிந்து போனது.


நூல்கள்:

அல்-ஜாமிஉல் கபீர்

அல்-ஜாமிஉஸ் ஸகீர் 

கிதாமுல் ஃபராயில் (பாகப்பிரிவினை நூல்)


அப்பாஸிய கலீஃபா அபூ ஜஃபர் அல்-மன்சூர், இமாம் சுஃப்யானை அழைத்து, "நீங்கள் கூஃபா நகரின் நீதிபதியாகப் பொறுப்பேற்க வேண்டும்" என்று வற்புறுத்தினார். அதற்கு இமாம் சுஃப்யான் மறுத்தார். "என்னை விட்டுவிடுங்கள்" என்றார். ஆனால் கலீஃபா விடுவதாக இல்லை. "நீங்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும்" என்று கட்டளையிட்டார். அந்த இடத்திலிருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்த இமாம், இரோடு இரவாக ஊரை விட்டே ஓடினார். மக்காவிற்குச் சென்று புனித கஃபாவின் திரைச்சீலையைப் பிடித்துக்கொண்டு நின்றார்.


கலீஃபா மன்சூருக்குக் கோபம் வந்தது. இமாம் சுஃப்யானைக் கைது செய்து, தூக்கிலிடச் சொல்லி (சில அறிவிப்புகளில் சிலுவையில் அறைய) உத்தரவிட்டுவிட்டு, அவரே மக்காவை நோக்கிப் படையெடுத்து வந்தார். மக்காவாசிகள் நடுங்கினார்கள். ஆனால், இமாம் சுஃப்யான் அஸ்-ஸவ்ரி கஃபாவின் திரையைப் பிடித்தவாறு, "யா அல்லாஹ்! மன்சூர் இந்த மக்காவிற்குள் நுழையக்கூடாது" என்று பிரார்தித்தவாறு இருந்தார்.


என்ன ஆச்சரியம்! மக்காவின் எல்லைக்குள் கலீஃபா நுழைவதற்கு முன்பே, வழியிலேயே மன்சூர் மரணமடைந்தார். அல்லாஹ் தன் அடியாரைக் காப்பாற்றினான். அதிகாரம் மண்டியிட்டது; இறையச்சம் வென்றது! என்று எழுதுகிறார் இமாம் தஹபி. (நூல்: ஸியர் அஃலாமுன் நுபலா - இமாம் தஹபி)


எண்ணம் (நிய்யத்) எனும் போராட்டம் இமாம் சுஃப்யான் அஸ்-ஸவ்ரி அவர்கள் சொன்ன ஒரு பொன்மொழி, இன்று எழுத்தாளர்களுக்கு ஒரு சவுக்கடியாக உள்ளது.


"எனது நோக்கத்தை (நிய்யத்) சீர்படுத்துவதை விட, கடினமான ஒரு வேலையை நான் பார்த்ததே இல்லை. ஏனெனில், அது மாறிக்கொண்டே இருக்கிறது." (நூல்: ஜாமிஉல் உலூம் வல் ஹிகம்)


இவ்வளவு பெரிய இமாமுக்கே, தனது நோக்கம் இறைவனுக்காகத் தானா என்று சோதிப்பது இவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கிறது என்றால், நம் நிலையை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.


இன்று உலகில் ஷாஃபி, ஹனஃபி, மாலிகி, ஹம்பலி என நான்கு மத்ஹபுகள் இருப்பதை அறிவோம். ஆனால், ஒரு காலத்தில் 'ஸவ்ரி மத்ஹப்' என்றொரு மத்ஹப் இருந்தது தெரியுமா? இமாம் சுஃப்யானின் சட்டத் தீர்ப்புகள் அத்தனை பிரபலம். ஆனால், அவருடைய மாணவர்கள் அதைத் தொகுத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லாததால், அந்த மத்ஹப் காலப்போக்கில் மறைந்து போனது. ஆனால், அவர் தொகுத்த ஹதீஸ்களும், அவர் வாழ்ந்து காட்டிய அந்த எளிமையும் இன்றும் நம்மிடம் பேசிக்கொண்டுதான் இருக்கின்றன.


இமாம் சுஃப்யான் அஸ்-ஸவ்ரி மரணிக்கும் தருவாயில் இருந்தபோது மிகவும் அழுதுள்ளார். அவரை பார்த்து ஒருவர் கேட்டார், "பாவங்களை நினைத்து அழுகிறீர்களா?" என்று.


அதற்கு இமாம் ஒரு வைக்கோல் துரும்பை எடுத்து, "என் பாவங்களை நினைத்து நான் அழவில்லை. அவை இந்த வைக்கோலை விட அற்பமானவை (அல்லாஹ் மன்னித்துவிடுவான்). ஆனால், இஸ்லாத்தை விட்டு என் உயிர் பிரிந்துவிடுமோ என்ற பயத்தில்தான் அழுகிறேன்" என்றார்.


என்ன ஒரு இறையச்சம்!


- Abdullah Ibnu Naseer 


#History #SufyanAlThawri #AmirulMumineen #Hadith #IslamicHistory #FearOfAllah #Zuhd #BaytalHikmah

Friday, 16 January 2026

மிஃராஜ் புராக் ஸ்டேஷன்...

 


மிஃராஜ் புராக் ஸ்டேஷன்...!    🚉

******************************************


ஜெரூசலம்..


ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் பயணத்தில் மஸ்ஜிதுல் ஹாரமில் இருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு புராக் வாகனத்தில் வந்த போது இங்கு தான் இந்த வளையத்தில் தான் கட்டினார்கள்.


மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு வருகை தந்த அனைத்து நபிமார்களும் தங்களது வாகனங்களை இங்கு தான் கட்டியுள்ளார்கள்.


#miraj #Jerusalem #buraq

#hazrathmuhammedsal #masjidulaqsa









புகாரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் எப்படி மரணமடைந்தார்கள்?

 


#இமாம் புகாரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் எப்படி மரணமடைந்தார்கள்?


இமாம் புகாரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், தமது வாழ்க்கையின் இறுதிக் காலத்தில், கிழக்கு இஸ்லாமிய உலகின் பல நகரங்களின் ஆட்சியாளர்களால் கடுமையான துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்கள்.


குறிப்பாக நைசாபூர், புகாரா, சமர்கந்து ஆகிய நகரங்களில்.


இதற்குக் காரணங்கள் பல இருந்தன. அவற்றில் முக்கியமானவை:


ஆட்சியாளர்களின் பிள்ளைகளுக்கு அவர்களது அரண்மனைகளில் கற்பிக்க மறுத்தது.


  அதற்கு இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறிய பிரபலமான வார்த்தை: “அறிவைத் தேடி வரப்பட வேண்டும்; அதை கதவுகளுக்குக் கொண்டு செல்லக் கூடாது.”


அவர்களுடைய புகழையும், உயரிய பண்புகளையும் பார்த்து சிலர் பொறாமை கொண்டது.


இதர பல காரணங்களும் இருந்தன.


#இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு வயது 62 ஆக இருந்தபோது,

நைசாபூர் ஆளுநரிடமிருந்து


“நகரை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்; நீங்கள் இங்கு விரும்பப்படாதவர்” என்ற உத்தரவு வந்தது.


அதனால் அவர்கள் அந்த நகரை விட்டு வெளியேறி, தமது பிறந்த ஊரான புகாரா நோக்கி சென்றார்கள்.


#புகாரா நகரின் வாயிலில் மக்கள் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றனர்.

அந்த மக்கள் அவர்கள்மீது பணமும், சர்க்கரையும் தூவி மரியாதை செய்தனர்.

மாணவர்கள், ஹதீஸ் அறிஞர்கள், பொதுமக்கள் அனைவரும் அவர்களைச் சூழ்ந்தனர்.


இதனால் மற்ற ஹதீஸ் அறிஞர்களின் மத்ரஸாக்கள் வெறிச்சோடின.

இதுவே சிலரின் உள்ளங்களில் பொறாமையையும், கோபத்தையும் தூண்டியது.


இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் பெரும் புகழைக் கண்டு,

புகாரா ஆளுநரும் விரைவில் கோபமடைந்தார்.


மேலும், நைசாபூர் ஆளுநரிடமிருந்து

“இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் புகாராவிலிருந்தும் வெளியேற்ற வேண்டும்”என்ற கடிதங்களும் வந்தன.


ஒரு நாள், நகரின் ஆளுநரின் தூதர்,

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் வீட்டிற்கு வந்து,

“இப்போதே நகரை விட்டு வெளியேற வேண்டும்”என்று உத்தரவிட்டார்.


அந்த நேரத்தில், இமாம் அவர்களுக்கு தமது நூல்களைச் சேர்த்துக் கொள்ளவும், ஒழுங்குபடுத்தவும் கூட நேரம் வழங்கப்படவில்லை.


அவர்கள் நகரை விட்டு வெளியேறி,

நகரின் புறப்பகுதியில் ஒரு கூடாரத்தில் மூன்று நாட்கள் தங்கினார்கள்.

அந்த நாட்களில் தமது நூல்களை ஒழுங்குபடுத்தினார்கள்.


ஆனால், எங்கு செல்ல வேண்டும் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை.


பின்னர், அவர்கள் சமர்கந்து நோக்கிப் புறப்பட்டார்கள். ஆனால் நகருக்குள் நுழையாமல்,


அதற்கருகிலுள்ள “குர்தங்க் (خرتنك)” என்ற கிராமத்திற்குச் சென்றார்கள்.

அங்கு தமது உறவினர்களின் வீட்டில் விருந்தினராக தங்கினார்கள்.

அவருடன் இப்ராஹீம் பின் மஅ்கல் இருந்தார்.


அதிக நாட்கள் ஆகவில்லை.

சமர்கந்து ஆளுநரின் காவலர்கள் அந்த வீட்டின் வாசலுக்கு வந்தனர்.


அவர்களுடைய உத்தரவு:

“இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள், சமர்கந்தின் நகரத்திலோ, கிராமத்திலோ எங்கிலும் தங்கக் கூடாது. இப்போதே வெளியேற வேண்டும்.”


அந்த நாள் ஈதுல் பித்ர் பெருநாளுடைய இரவு 


ஈதுக்குப் பிறகு அல்ல. 


“இப்போதே” வெளியேற வேண்டும் என்ற கட்டளை.


தன்னை வரவேற்ற உறவினர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது என்பதற்காக,

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உடனே புறப்பட சம்மதித்தார்கள்.


இப்ராஹீம் பின் மஅ்கல்,

இமாமின் நூல்களை ஒரு விலங்கின் மேல் ஏற்றினார்.

மற்றொரு விலங்கைக் இமாம் அவர்களை ஏற்றுவதற்குத் தயார் செய்தார்.


பின்னர் வீட்டிற்குள் சென்று,

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களைத் தாங்கியபடி வெளியே அழைத்து வந்தார்.


சுமார் 20 அடிகள் நடந்தபின்,

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் மிகவும் சோர்வடைந்தார்கள்.


அவர்கள்,

“சில நிமிடங்கள் ஓய்வு எடுக்க அனுமதியுங்கள்.

என்று கேட்டார்கள்.


அவர் சாலையோரத்தில் அமர்ந்தார்கள்

பிறகு சிறிது நேரத்தில் தூங்கினார்கள்.


சில நிமிடங்கள் கழித்து,

இப்ராஹீம் பின் மஅ்கல் அவரை எழுப்ப முயன்றபோது,

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் பரிசுத்தமான உயிர் அல்லாஹ்விடம் சென்று விட்டதை கண்டார்.


انالله وانااليه راجعون 


இவ்வாறு,


👉 இமாம் புகாரி (ரஹிமஹுல்லாஹ்)

👉 ஈதுல் பித்ர் இரவு

👉 1 ஷவ்வால், ஹிஜ்ரி 256

👉 வீதியோரத்தில்

👉 ஒரு நகரத்திலிருந்து, மற்றொரு நகரம், மூன்றாவது நகரம் என விரட்டப்பட்ட நிலையில்

👉 62 வயதைத் தாண்டிய நிலையில்

இந்த உலகை விட்டு பிரிந்தார்கள்.


இன்று,

நைசாபூர், புகாரா, சமர்கந்து ஆகிய நகரங்களின் ஆட்சியாளர்களின் பெயர்களை மக்கள் அறியமாட்டார்கள்.


ஆனால்,

உலகமெங்கும் அனைவரும் அறிந்த பெயர் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் 


அல்லாஹ் அவர்கள்மீது கருணை பொழிவானாக.

அவரின் தரங்களை உயர்த்தி,

நபிமார்கள், ஷஹீத்கள், சாலிஹீன்களுடன் உயரிய இடங்களில் சேர்த்தருள்வானாக.


ஸியர் அஃலாமுன் நுபலா பாகம் 12, பக்கம் 468


இந்த பதிவை முழுமையாக வாசித்திருந்தால்,

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது ஸலவாத்து சொல்லுங்கள்.


என்காகவும் என்குடும்பத்திற்காகவும் துஆ செய்யுங்கள்

மிஃராஜும் புனித இடங்களும்


 மிஃராஜும் புனித இடங்களும்

***********************************


புனித இடங்களை நாடி செல்லுதல், அங்கு தொழுதல், துஆ செய்வது, நபிமார்களின் நடைபாதைகளை அறிதல்  இதை மறுப்பவர்களுக்கு சிந்திக்க சில பதில்கள்.


மெளலவி எச் எம் யூசுப் முஸ்தபி ,காதிரி

Muhammed Yoosuf Musthafi 

@top fans 


இஸ்ரா (இரவு பயணம்) சம்பவத்தில் வந்துள்ள ஒரு முக்கியமான ஹதீஸ் இதற்கு தெளிவான ஆதாரமாக இருக்கிறது.


இந்த ஹதீஸை

பஸ்ஸார் தனது முஸ்னத் (ஹதீஸ் எண்: 3484) இலும்,

தபரானி தனது அல்-முஅ்ஜமுல் கபீர் (ஹதீஸ் எண்: 1742) இலும் அறிவித்துள்ளார்.


ஹாஃபிழ் இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்) பத்ஹுல் பாரி (7/198) இல் கூறுகிறார்கள்:


 “இதை இமாம் பய்ஹகி, தலாயிலுன் நுபுவ்வா*வில், ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பாக ஸஹீஹ் என உறுதி செய்துள்ளார்.”


அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அந்த ஹதீஸில் வருகிறது:


 “நாங்கள் (பயணத்தில்) பேரீச்சை மரங்கள் நிறைந்த ஒரு நிலத்தை அடைந்தோம்.

அப்போது (ஜிப்ரீல் அலையிஸ்ஸலாம்) என்னிடம்,

 ‘இறங்குங்கள்’ என்றார்.

 நான் இறங்கினேன்.

 பின்னர், ‘தொழுங்கள்’ என்றார்; நான் தொழுதேன்.

அதன் பிறகு நாங்கள் மீண்டும் பயணித்தோம்.


 அப்போது மலக்கு என்னிடம்,

 ‘நீங்கள் எங்கு தொழுதீர்கள் என்று தெரியுமா?’ என்று கேட்டார்.

 நான், ‘அல்லாஹ்வே மிக அறிந்தவன்’ என்று கூறினேன்.

 அவர் கூறினார்:

நீங்கள் யஸ்ரிப் (மதீனா) நகரில் தொழுதீர்கள்.


பின்னர், அந்த புராக் தனது கால் எட்டிய தூரமெல்லாம் தாண்டி பறப்பது போல எங்களை எடுத்துச் சென்றது.

 நாங்கள் ஒரு வெள்ளை நிற நிலத்தை அடைந்தோம்.

அவர் கூறினார்: ‘இறங்குங்கள்.’

நான் இறங்கினேன்.

‘தொழுங்கள்’ என்றார்; நான் தொழுதேன்.

 பின்னர் அவர் கேட்டார்:

 ‘நீங்கள் எங்கு தொழுதீர்கள் என்று தெரியுமா?’

 நான்: ‘அல்லாஹ்வே மிக அறிந்தவன்’ என்றேன்.

அவர் கூறினார்:

 ‘நீங்கள் மத்யன் பகுதியில் தொழுதீர்கள் அது மூஸா அலையிஹிஸ்ஸலாம் அவர்களின் மரத்தருகில்.’


பின்னர் மீண்டும் அந்த புராக் எங்களை எடுத்துச் சென்றது.

 அதன் பின் அவர் கூறினார்: ‘இறங்குங்கள்.’

நான் இறங்கினேன்.

 ‘தொழுங்களா என்றார்; நான் தொழுதேன்.


பின்னர் அவர் கூறினார்:

 ‘நீங்கள் எங்கு தொழுதீர்கள் என்று தெரியுமா?’

 நான்: ‘அல்லாஹ்வே மிக அறிந்தவன்’ என்றேன்.

அவர் கூறினார்:

 ‘நீங்கள் பைதுல் லஹம் (பெத்லகேம்) நகரில் தொழுதீர்கள் அங்கேதான் மர்யம் அவர்களின் மகன் ஈஸா அலையிஹிஸ்ஸலாம் பிறந்தார்கள்.’”


இந்த ஹதீஸ் மூலம் தெளிவாகப் புரிகிறது:


அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

  நபிமார்களுடன் தொடர்புடைய புனித இடங்களில் நிறுத்தப்பட்டு

  அங்கே தொழுமாறு கட்டளையிடப்பட்டார்கள்

இது


  👉 புனித இடங்களை அறிதல்,

  👉 அவற்றில் தொழுதல்,

  👉 நபிமார்களின் நினைவுகளை உயிர்ப்பித்தல்

  ஆகியவை ஷரீஅத்திற்கு முரணானவை அல்ல மாறாக நபிவழியில் உள்ளவை என்பதை காட்டுகிறது.


இன்ஷாஅல்லாஹ், இது இந்த விஷயத்தில் உள்ள குழப்பங்களுக்கு ஒரு தெளிவான பதிலாக அமையும்.


முழுமையாக வாசித்த உங்களுக்கு நன்றி

جزاك الله خيرا الجزاء

Thursday, 15 January 2026

பிலால் (ரழி) அவர்களின் அந்த உருக்கமான வரலாறு


 அண்ணல் நபி அவர்களின் பிரிவைத் தாங்க முடியாமல் மதீனாவை விட்டுச் சென்ற ஹழ்ரத் பிலால் (ரழி) அவர்களின் அந்த உருக்கமான வரலாற்றை இங்கே காண்போம். 


 மதீனாவை நனைத்த கண்ணீர்: பிலால் (ரழி) அவர்களின் பிரிவு பெருமானார் அவர்களின் மறைவுக்குப் பிறகு மதீனா நகரம் பிலால் (ரழி) அவர்களுக்குப் பாழடைந்ததாகத் தோன்றியது. எந்தத் திசையைப் பார்த்தாலும் நபியவர்களின் நினைவுகள் அவரை வாட்டின. குறிப்பாக, பாங்கு சொல்லும் போது "அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்" என்ற இடத்திற்கு வரும்போது, அவர் விம்மி விம்மி அழத் தொடங்கிவிடுவார். அவரால் பாங்கைத் தொடர முடியவில்லை.


"நபியவர்கள் இல்லாத மதீனாவில் என்னால் இருக்க முடியவில்லை" என்று கூறிவிட்டு, சிரியாவின் (ஷாம்) திசை நோக்கிப் பயணமானார். பல ஆண்டுகள் அங்கேயே தங்கிவிட்டார்.


அந்தத் தூக்கமும்... அந்தத் தூதுச் செய்தியும்

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இரவு, பிலால்(ரழி) அவர்களின் கனவில் ரசூலுல்லாஹ் அவர்கள் தோன்றினார்கள். மிகவும் கனிவான குரலில் கேட்டார்கள்: "பிலாலே! இது என்ன பிடிவாதம்? என்னைச் சந்திக்க உமக்கு ஆசை வரவில்லையா?" திடுக்கிட்டு விழித்த பிலால் (ரழி) அவர்களின் உடல் நடுங்கியது. கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. "யா ரசூலுல்லாஹ்! இதோ வந்துவிட்டேன்" என்று அலறியபடி, அந்த இரவிலேயே மதீனாவை நோக்கித் தனது ஒட்டகத்தைச் செலுத்தினார். மதீனாவின் தெருக்களில் ஒரு குரல் நீண்ட பயணத்திற்குப் பிறகு மதீனா வந்து சேர்ந்த பிலால் (ரழி) அவர்கள், நேராக நபியவர்களின் ரவ்ழா ப் (கல்லறை) அருகே சென்று தேம்பித் தேம்பி அழுதார்கள். அவரது அழுகுரல் மதீனாவின் அமைதியைக் கலைத்தது.


அப்போது நபியவர்களின் பேரப்பிள்ளைகளான ஹஸன் (ரழி) மற்றும் ஹுஸைன் (ரழி) அங்கு வந்தார்கள். அவர்களைக் கட்டிப்பிடித்து முத்தமிட்ட பிலால் (ரழி) அவர்களிடம், அவர்கள் ஒரு கோரிக்கையை வைத்தார்கள்: "பிலால் அவர்களே! உங்கள் குரலில் பாங்கு கேட்டுப் பல வருடங்களாகிவிட்டது. எங்களுக்காக ஒருமுறை பாங்கு சொல்லக் கூடாதா?" விண்ணை முட்டிய அந்தப் பாங்கு பேரப்பிள்ளைகளின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல், பிலால் (ரழி) அவர்கள் மஸ்ஜிதுந் நபவியின் மேடையில் ஏறினார்கள். "அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்..." -முதல் சத்தம் கேட்டதும் மதீனாவே அப்படியே ஸ்தம்பித்தது. "பிலால் வந்துவிட்டாரா?" என மக்கள் வீதிக்கு வந்தனர். "அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ்..." -மக்கள் கூட்டம் மஸ்ஜிதை நோக்கி ஓடி வந்தது. "அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்..." - இந்த வார்த்தையை பிலால் (ரழி) அவர்கள் சொல்லியபோது, மதீனாவின் வீடுகளில் இருந்த பெண்கள் கூட கதறி அழுதுகொண்டு வீதிக்கு வந்தனர்.


"நிச்சயமாக ரசூலுல்லாஹ் அவர்கள்

மீண்டும் உயிர் பெற்று வந்துவிட்டார்கள்" என்று மக்கள் எண்ணுமளவுக்கு அந்தப் பாங்கு அவர்களின் நினைவுகளை மீட்டெடுத்தது. மதீனா மாநகரம் அன்றைய தினம் அழுத அழுகையை வரலாறு அதற்கு முன் கண்டதில்லை.


இந்தச் சம்பவம், ஒரு நேசர் தனது தலைவன் மீது கொண்டிருந்த உண்மையான அன்பிற்குச் சான்றாகும்.


சஹாபாக்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைகிவசல்லம் அவர்கள் மீது கொண்ட நேசம் போன்று நாங்களும் நபி ஸல்லல்லாஹூ அலைகிவசல்லம் அவர்கள் மீது நேசம் கொள்வோம். ❤️❤️