السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 23 January 2026

நீதிபதி' பதவி (Chief Justice) தேடி வருகிறது

 


இன்றைய காலத்தில் ஒரு கவுன்சிலர் பதவி கிடைப்பதாக இருந்தால்கூட, அதற்காக எதையும் செய்யத் துணியும் மனிதர்களைப் பார்க்கிறோம். ஆனால், உலகின் பாதியை ஆண்ட ஒரு சாம்ராஜ்யத்தின் 'தலைமை நீதிபதி' பதவி (Chief Justice) தேடி வருகிறது... அதை ஏற்க மறுத்து, செருப்பைக்கூட அணியாமல் ஓடிய ஒருவரைப் பற்றி இஸ்லாமிய வரலாறு பேசுகிறது என்றால் நம்ப முடிகிறதா?


அவர்தான் இமாம் சுஃப்யான் அஸ்-ஸவ்ரி.


ஹதீஸ் உலகில் இவருக்கு என்ன பட்டம் தெரியுமா? "அமீருல் முஃமினீன் ஃபில் ஹதீஸ்" (ஹதீஸ் துறையின் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர்). கலீஃபாக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 'அமீருல் முஃமினீன்' என்ற பட்டத்தை, ஹதீஸ் துறையில் இவருக்கு வழங்கினார்கள் அறிஞர்கள்.


பிறப்பு: ஹிஜ்ரி 97 (கூஃபா நகரில்).


இறப்பு: ஹிஜ்ரி 161 (பஸ்ராவில் தலைமறைவாக இருந்தபோது மரணம்).


கல்விப் பயணம்: சுமார் 600 ஷைக்களிடம் (ஆசிரியர்களிடம்) பாடம் பயின்றுள்ளார்.


அறிவித்த ஹதீஸ்கள்: சுமார் 30,000 ஹதீஸ்களை இவர் அறிவித்துள்ளார் என்று இமாம் தஹபி குறிப்பிடுகிறார்.


ஃபிக்ஹ் (சட்டத்துறை): இவருக்கு என்று தனியாக "ஸவ்ரி மத்ஹப்" இருந்தது. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் போன்றவர்கள் கூட ஆரம்பத்தில் இவரது ஃபிக்ஹ் சட்டங்களையே பின்பற்றினர். ஆனால், பிற்காலத்தில் இவரது மாணவர்கள் அதைத் தொகுக்கத் தவறியதால் அந்த மத்ஹப் வழக்கொழிந்து போனது.


நூல்கள்:

அல்-ஜாமிஉல் கபீர்

அல்-ஜாமிஉஸ் ஸகீர் 

கிதாமுல் ஃபராயில் (பாகப்பிரிவினை நூல்)


அப்பாஸிய கலீஃபா அபூ ஜஃபர் அல்-மன்சூர், இமாம் சுஃப்யானை அழைத்து, "நீங்கள் கூஃபா நகரின் நீதிபதியாகப் பொறுப்பேற்க வேண்டும்" என்று வற்புறுத்தினார். அதற்கு இமாம் சுஃப்யான் மறுத்தார். "என்னை விட்டுவிடுங்கள்" என்றார். ஆனால் கலீஃபா விடுவதாக இல்லை. "நீங்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும்" என்று கட்டளையிட்டார். அந்த இடத்திலிருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்த இமாம், இரோடு இரவாக ஊரை விட்டே ஓடினார். மக்காவிற்குச் சென்று புனித கஃபாவின் திரைச்சீலையைப் பிடித்துக்கொண்டு நின்றார்.


கலீஃபா மன்சூருக்குக் கோபம் வந்தது. இமாம் சுஃப்யானைக் கைது செய்து, தூக்கிலிடச் சொல்லி (சில அறிவிப்புகளில் சிலுவையில் அறைய) உத்தரவிட்டுவிட்டு, அவரே மக்காவை நோக்கிப் படையெடுத்து வந்தார். மக்காவாசிகள் நடுங்கினார்கள். ஆனால், இமாம் சுஃப்யான் அஸ்-ஸவ்ரி கஃபாவின் திரையைப் பிடித்தவாறு, "யா அல்லாஹ்! மன்சூர் இந்த மக்காவிற்குள் நுழையக்கூடாது" என்று பிரார்தித்தவாறு இருந்தார்.


என்ன ஆச்சரியம்! மக்காவின் எல்லைக்குள் கலீஃபா நுழைவதற்கு முன்பே, வழியிலேயே மன்சூர் மரணமடைந்தார். அல்லாஹ் தன் அடியாரைக் காப்பாற்றினான். அதிகாரம் மண்டியிட்டது; இறையச்சம் வென்றது! என்று எழுதுகிறார் இமாம் தஹபி. (நூல்: ஸியர் அஃலாமுன் நுபலா - இமாம் தஹபி)


எண்ணம் (நிய்யத்) எனும் போராட்டம் இமாம் சுஃப்யான் அஸ்-ஸவ்ரி அவர்கள் சொன்ன ஒரு பொன்மொழி, இன்று எழுத்தாளர்களுக்கு ஒரு சவுக்கடியாக உள்ளது.


"எனது நோக்கத்தை (நிய்யத்) சீர்படுத்துவதை விட, கடினமான ஒரு வேலையை நான் பார்த்ததே இல்லை. ஏனெனில், அது மாறிக்கொண்டே இருக்கிறது." (நூல்: ஜாமிஉல் உலூம் வல் ஹிகம்)


இவ்வளவு பெரிய இமாமுக்கே, தனது நோக்கம் இறைவனுக்காகத் தானா என்று சோதிப்பது இவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கிறது என்றால், நம் நிலையை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.


இன்று உலகில் ஷாஃபி, ஹனஃபி, மாலிகி, ஹம்பலி என நான்கு மத்ஹபுகள் இருப்பதை அறிவோம். ஆனால், ஒரு காலத்தில் 'ஸவ்ரி மத்ஹப்' என்றொரு மத்ஹப் இருந்தது தெரியுமா? இமாம் சுஃப்யானின் சட்டத் தீர்ப்புகள் அத்தனை பிரபலம். ஆனால், அவருடைய மாணவர்கள் அதைத் தொகுத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லாததால், அந்த மத்ஹப் காலப்போக்கில் மறைந்து போனது. ஆனால், அவர் தொகுத்த ஹதீஸ்களும், அவர் வாழ்ந்து காட்டிய அந்த எளிமையும் இன்றும் நம்மிடம் பேசிக்கொண்டுதான் இருக்கின்றன.


இமாம் சுஃப்யான் அஸ்-ஸவ்ரி மரணிக்கும் தருவாயில் இருந்தபோது மிகவும் அழுதுள்ளார். அவரை பார்த்து ஒருவர் கேட்டார், "பாவங்களை நினைத்து அழுகிறீர்களா?" என்று.


அதற்கு இமாம் ஒரு வைக்கோல் துரும்பை எடுத்து, "என் பாவங்களை நினைத்து நான் அழவில்லை. அவை இந்த வைக்கோலை விட அற்பமானவை (அல்லாஹ் மன்னித்துவிடுவான்). ஆனால், இஸ்லாத்தை விட்டு என் உயிர் பிரிந்துவிடுமோ என்ற பயத்தில்தான் அழுகிறேன்" என்றார்.


என்ன ஒரு இறையச்சம்!


- Abdullah Ibnu Naseer 


#History #SufyanAlThawri #AmirulMumineen #Hadith #IslamicHistory #FearOfAllah #Zuhd #BaytalHikmah