இன்று உலகில் பல்வேறு சமுதாய மக்களிடையே தேசிய, இன, மத, மொழி, கலை, கலாசார பண்பாடு பற்றிய பல நிகழ்வுகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் நடைபெறுவதை நாம் காண்கின்றோம்.
இவற்றுள் சுதந்திர தினம், புதுவருடம், இலக்கியப் பண்பாட்டு விழா, பிறந்ததின விழா போன்றவைகள் நடைமுறையிலிருக்கும் முக்கிய விழாக்களாகும்.
மேற்கண்ட விழாக்களை, கொண்டாட்டங்களை சமய, மொழி வேறுபாடின்றி அனைவரும் விருப்புடன் செய்து வருகின்றனர். இவற்றில் எவரும் சமய சாயம் பூசி தீர்ப்புக் கூறுவது கிடையாது ஆனால்,
உலகின் உத்தமர், வையகக் காரணி, அகிலத்தின் அருட்பிளம்பு, நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்கள் பிறந்த தினவிழாவை—மீலாதைக் கொண்டாடும்போது மட்டும் சிலர் வெகுண்டெழுந்து ஷிர்க், ஹறாம், பித்அத் என்றெல்லாம் தீர்ப்புக் கூற முற்படுகின்றனர். செய்யக்கூடாத பெரும்பாவத்தைச் செய்வது போன்று தடுக்க பெரு முயற்சியெடுக்கின்றனர்.
நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களின் சிறப்பை, மேன்மையை கவிதையாக, உரைநடையாக பாடுவதில், வாசிப்பதில் என்ன குறை வந்துள்ளது?
ஓர் அறிவாளி, அரசியல் தலைவர், சமூகத்தின் முக்கிய சேவைச்செம்மல், இலக்கிய வாதிகள் உள்ளிட்டோரை வாழும்போதும், மறைந்த பின்பும் மதித்து, பாராட்டுவிழா நடத்தப்படுவதை யாரும் தடுக்கின்றார்களா?
அப்படியாயின், நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களின் குணநலன்களை, அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களை கவிதையாகப் பாடும்போது மாத்திரம் தடுக்க முற்படுவது ஏன்?
வேந்தர் நபியவர்கள் பிறக்க முன்பும், பிறந்த போதும், நபியாக அனுப்பப்படுமுன்பும், பின்பும் வாழும்போதும், மறைந்த பின்பும் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒருவராகவே விளங்கினார்கள்.
பாராட்டுக்குரியவர், பாராட்டுக்குத் தகுதியானவர் என்ற காரணத்தினால்தான் முஹம்மது, அஹ்மது, முஸ்தபா என்ற திருநாமங்கள் அன்னாருக்குச் சூட்டப்பட்டன. பாராட்டுக்குரியவர் என்ற திருநாமம் கொண்டவர், பாராட்டுக்குத் தகுதியற்றவரானது எப்படி?
பாராட்டும், புகழும் ஒரு மனிதனிடம் காணப்படும் நற்குணங்களை, சேவைகளை, அறிவாற்றல், சிறப்புத் தன்மைகள், நற்பண்புகள் போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு வருபவை.
புகழின் அளவும் எல்லையும் மனிதனுக்கு மனிதன் வேறுபடுவது அவரிடம் காணப்படும் சிறப்பியல்புகளின் அளவைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். வீண்விரயம் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடுவதுபோல் புகழும் ஆளுக்குஆள் வேறுபடும். ஒருவரிடம் இல்லாததை இருப்பதாகக் கூறுவது கூடாது. அதுபோல் நல்லெண்ணம் இல்லாமல் ஒருவரைப் பாராட்டுவதும் தடுக்கப்பட்டிருக்கின்றது. இவற்றை “முகஸ்துதி” என்று கூறுகின்றோம். அது கொடிய குற்றம்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்கள் அகிலத்தின் அருட்பிளம்பு, வையகக் காரணி, குணத்தின் குன்று உயிரிலும் மேலாக நேசிக்கப்படவேண்டிய ஒருவரைப் புகழக்கூடாது என்பதில் இருக்கும் நியாயம் என்ன?
“நிச்சயமாக நீங்கள் மகத்தான நற்குணத்திலிருக்கின்றீர்கள்” என்று திருக்குர்ஆன் தெட்டத்தெளிவாகக் கூறுகின்றது. திருக்குர்ஆன் திருத்தமாகச் சொல்லுகின்ற அன்னாரது மகத்தான எல்லையற்ற பண்பை, நற்குணத்தை பிறருக்கு எடுத்துக் கூறவதில் என்ன தடை இருக்கின்றது?
நூறு ஆண்டுகளின் பின் உயிர்பெற்றெழுந்து உலகில் வாழ்ந்ததைப் பார்த்து வியந்த யூதர்கள் நபி உஸைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்வின் மகன் என்றார்கள்.
அதுபோல் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் தந்தையின்றிப் பிறந்தார்கள், மரணித்தவர்களை உயிர்பெறச் செய்தார்கள். வெண்குஷ்டம், கருங்குஷ்டம் போன்ற கொடிய வியாதிகளைச் சுகப்படுத்தினார்கள். பிறவிக்குருடனை தடவி பார்வை கொடுத்தார்கள். வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் மறைவானவற்றை தெரியப்படுத்தினார்கள். இப்படியான அற்புதங்களைப் பார்த்த “நஸாராக்கள்” நபி ஈஸா அலைஹிஸ்ஸலாமவர்களை அல்லாஹ்வின் குமாரர் என்றார்கள்.
யூதர்களும், நஸாராக்களும் தங்கள் நபிமார்கள் மீது இல்லாத தெய்வீகத் தன்மையை இருப்பதாகக் கூறியது பொய்யான வாதமாகும். பொய் நிராகரிக்கப்பட வேண்டியது. பொய்யில் புகழ் வரமுடியாது.
அதனால் இவர்களின் வாதம் மறுக்கப்பட்டது. இவர்களின் புகழ் எல்லை தாண்டியது என்று சுட்டிக் காட்டப்பட்டது, அதனால் தடுக்கப்பட்டது.
ஆனால், வேந்தர் நபியவர்கள் விடயத்தில் எல்லை தாண்டிய எந்தப் புகழும் சேர்க்கப்படவில்லை. அவர்களிடம் காணப்பட்ட குணங்களைக் கூறி புகழ் பாடப்படுகின்றது. தெய்வீகத் தன்மை தவிர்ந்த அல்லாஹ்வின் அடியார் என்ற எல்லைக்குள் எந்த ஒரு புகழும் அது எவ்வளவு உயர்ந்தாலும் அது அன்னாருக்குப் பொருத்தமாகவே கருதப்படுகின்றது.
இமாம் பூஸரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தங்களது இறவாப் புகழ்பெற்ற புர்தா ஷரீபில் பின்வருமாறு பண்ணிசைக்கின்றார்கள்.
- Eravur meelad 2014
- Eravur Meeladunnabi (S.A.W) 2014 Part-01
- Eravur Meeladunnabi (S.A.W) 2014 Part-02
- Eravur Meeladunnabi (S.A.W) 2014 Part-03
- Eravur Meerakerny Meeladhun Nabi (S.A.W) 2014 Part-01
- Eravur Meerakerny Meeladhun Nabi (S.A.W) 2014 Part-02