அபூஹுரைரா (رضي الله عنه ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் { ﷺ} அவர்கள் மிஃராஜ் – விண்ணுலகப்பயணம் சென்று வந்த செய்தியை, அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை எங்களிடையே அறிவித்தார்கள்.
இதை அறிந்த குறைஷிகள் அல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்களிடம் வந்து “உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர்.
அல்லாஹ் நபி {ﷺ} அவர்களின் கண்முன்னே பைத்துல் முகத்தஸை காண்பித்தான். அப்போது நபி {ﷺ} அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை.
பின்னர், எங்களை நோக்கி, நான் விண்ணுலகம் சென்றிருந்த போது நபிமார்களின் ஒரு கூட்டத்தினர் எனக்கு காண்பிக்கப் பட்டனர். அங்கே நபி மூஸா (அலை) எனக்கு காட்டப்பட்டார்கள். அவர்களை தொழும் நிலையிலே நான் கண்டேன். அவரை நான் ஷனூஆவின் பகுதி மனிதரின் சாயலில் இருக்க கண்டேன்.
அது போன்று நபி ஈஸா {அலை} அவர்களையும் தொழும் நிலையிலேயே கண்டேன். ஈஸா {அலை} அவர்கள் உர்வா இப்னு மஸ்வூத் அஸ் ஸகஃபீ (رضي الله عنه ) அவர்களில் சாயலில் ஒத்திருக்கக் கண்டேன்.
அது போன்றே நபி இப்ராஹீம் {அலை} அவர்களையும் தொழும் நிலையிலேயே கண்டேன். இப்ராஹீம் {அலை} அவர்கள் என் சாயலிலே இருக்கக் கண்டேன்.
அதன் பின்னர் அனைத்து நபிமார்களும் தொழுகைக்காக ஒன்று சேர்க்கப் பட்டனர். அவர்களுக்கு நான் இமாமாக நின்று தொழவைத்தேன்.
தொழுது முடித்த போது, முஹம்மதே! என்று என்னை அழைக்கும் ஓர் அழைப்பை நான் செவியுற்று திரும்பிப்பார்த்த போது, இவர்தான் நரகத்தின் பாதுகாவலர், இவருக்கு ஸலாம் சொல்லுங்கள்! என்று சொல்லப்பட்டது.
நான் ஸலாம் சொல்வதற்காக திரும்பிய போது, மாலிக் {அலை} அவர்கள் என்னை நோக்கி ஸலாம் கூறி முந்திக்கொண்டார்கள்.” ( நூல்: முஸ்லிம் )