மதீனாவின் ஒரு நாள் காலைப் பொழுது.. ஒரு கிராமவாசி பதற்றத்துடனும், பரபரப்போடும் அண்ணலாரை நோக்கி வந்தார். அப்போது அண்ணலாரும், அலீ (ரலி) அவர்களும் மதீனாவின் வீதியில் நின்று கொண்டிருந்தார்கள்.
மாநபி {ﷺ} அவர்களின் அருகே வந்த அந்த கிராமவாசி ”அல்லாஹ்வின் தூதரே! நான் இன்ன கிராமத்தில் இருந்து வருகின்றேன். இப்போது எங்களின் கிராமத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு மக்களெல்லாம் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கின்றனர்.
நான் அவர்களிடையே இஸ்லாத்தை அறிமுகம் செய்த போது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டீர்களென்றால் உங்கள் உணவுகள் விசாலமடையும் என்று கூறினேன்.
இப்போது, இந்தப் பஞ்சமும் வறட்சியும் அவர்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விடுமோ என்று நான் அஞ்சுகின்றேன். தாங்கள் ஏதாவது உதவி புரிந்து அம்மக்களை வறட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
அது அவர்களின் வாழ்க்கையில் பேருதவியாக அமையும்” என்று கூறி உதவி வேண்டி நின்றார்.
அப்போது, பெருமானார் {ﷺ} அவர்கள் உடனடியாக அவருக்கு உதவிட வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், அப்போது நபிகளாரிடம் ஒன்றும் இல்லை.
சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள். அந்தப் பார்வையில் தெரிந்தவர்கள் எவராவது வந்தால் அவரிடம் இருந்து ஏதாவது கடனாகப் பெற்று உதவிடலாம் என்ற உயர்ந்த நோக்கு தெறித்தது.
அண்ணலாருக்கு சற்றுத் தொலைவில் நின்று கொண்டு, இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஸைத் இப்னு ஸஅனா என்கிற யூத பாதிரி ஒருவர் நபி {ﷺ} அவர்களின் அருகே வந்தார்.
வந்தவர் நபி {ﷺ} அவர்களை நோக்கி “முஹம்மதே! {ﷺ} நான் உதவி செய்கிறேன், ஆனால், அதற்குப் பகரமாக பேரீத்தம்பழ அறுவடை நேரத்தில் இன்னவரின் தோட்டத்தில் விளைகிற பேரீத்தம் பழத்தில் நான் கொடுக்கும் பணத்திற்குச் சமமாக பேரீத்தம் பழங்களை தரவேண்டும்” என்று கூறினார்.
அதற்கு நபி {ﷺ} அவர்கள் “யூத சகோதரா! குறிப்பிட்ட அந்த அறுவடை நேரத்தில், குறிப்பிட்ட இன்னாருடைய தோட்டத்தில் விளைகிற பேரீத்தம் பழங்களை நீர் கொடுக்கும் பணத்திற்கு சமமாக வழங்க நான் சம்மதிக்கிறேன், மேலும், நீர் இன்ன நாளில் (ஒரு நாளைக் குறிப்பிட்டு) வந்து எம்மிடம் அதைப் பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறினார்கள்.
அப்போது, ஸைத் இப்னு ஸஅனா அண்ணலாரிடம் 80 தீனார்களை கடனாகக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட நபி {ﷺ} அவர்கள் அந்த கிராமவாசியிடம் கொடுத்து, உமது ஊரில் உள்ள எல்லோருக்கும் இதை பிரித்துக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், தோழர்கள் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி – அன்ஹும்) அவர்களும், இன்னும் சில நபித்தோழர்களும் அன்ஸாரித் தோழர் ஒருவரின் ஜனாஸாத் தொழுகைக்காக மஸ்ஜிதுன் நபவீயின் வெளிப்பகுதியிலே வீற்றிருந்தார்கள்.
ஜனாஸா கொண்டு வரப்படுகிறது. தூரத்திலே ஸைத் இப்னு ஸஅனாவும் வந்து கொண்டிருக்கிறார்.
நபிகளார் சொன்ன காலக்கெடுவுக்கு இன்னமும், இரண்டு அல்லது மூன்று தினங்கள் பாக்கி இருக்கிறது.
ஜனாஸா தொழுது முடித்து நின்று கொண்டிருந்த அண்ணலாரை நோக்கி பாய்ந்து வந்த ஸைத் இப்னு ஸஅனா கடுகடுத்த முகத்தோடு, அண்ணலாரின் கழுத்தில் போட்டிருந்த துண்டைப் பிடித்து இழுத்தவாறு “முஹம்மதே! {ﷺ} ஏன் இன்னும் எனது கடனைத் திருப்பித் தரவில்லை? அப்துல் முத்தலிபின் மக்கள் கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள், வாக்கு கொடுத்தால் நிறைவேற்ற மாட்டார்கள் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும்!” என்று உரக்க கத்தினார்.
அண்ணலாரிடம் மரியாதைக் குறைவாகவும், தரம் தாழ்ந்தும் நடந்து கொண்ட அந்த யூதரின் செயல் கண்டு கொதித்தெழுந்த உமர் (ரலி) அவர்கள் முகம் சிவந்தவர்களாக “அல்லாஹ்வின் விரோதியே! அல்லாஹ்வின் தூதரிடமா நீ இவ்வாறு பேசுகிறாய்? அல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்கள் மாத்திரம் இப்போது இங்கே இல்லை என்று சொன்னால் உனது தலையை நான் கொய்திருப்பேன்” என்று ஆவேசமாகப் பேசினார்கள்.
அதனைக் கேட்ட மாநபி {ﷺ} அவர்கள் புன்முருவல் பூத்த முகத்தோடு உமர் (ரலி) அவர்களை நோக்கி “உமரே! நீங்கள் இவ்வாறு பேசியிருக்கக் கூடாது! கடனைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று என்னிடம் தான் தாங்கள் கூறியிருக்க வேண்டும்.
மேலும், பணத்தைத் திருப்பிக் கேட்கும் போது கொஞ்சம் மரியாதையுடன் கேளுங்கள் என்று அவரிடம் தாங்கள் கூறியிருக்க வேண்டும்.
ஆனால், உங்கள் பேச்சால் இவரை நீங்கள் பயமுறுத்தி விட்டீர்கள். இவரை அழைத்துச் சென்று நான் வாங்கிய கடனுக்குப் பகரமாக நான் சம்மதித்தது போன்று இன்ன தோடத்து பேரீத்தம் பழங்களை கொடுங்கள்.
மேலும், அவரை பயமூட்டும் வகையில் பேசியதற்கு பரிகாரமாக 20 மரக்கால்கள் பேரீத்தம் பழங்களை அதிகமாகக் கொடுங்கள்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
அப்போது, உமர் (ரலி) அவர்கள் அவரை அழைத்துக் கொண்டு போய் நபி {ﷺ} அவர்கள் சொன்னது போன்றே அவரது கடனையும் திருப்பிச் செலுத்தி, இன்னும் அதிகமாக 20 மரக்கால்கள் பேரீத்தம் பழங்களையும் கொடுத்தார்கள்.
அதனைப் பெற்றுக் கொண்ட ஸைத் இப்னு ஸஅனா ஏன் எனக்கு அதிகமாகத் தருகின்றீர்கள்? என்று உமர் (ரலி) அவர்களிடம் கேட்டார்.
உம்மை அச்சமூட்டும் வகையில் அமைந்து விட்ட என் பேச்சுக்குப் பரிகாரமாக உமக்கு வழங்குமாறு அல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று உமர் (ரலி) அவர்கள் காரணம் கூறினார்கள்.
அது கேட்ட ஸைத் இப்னு ஸஅனா ஆச்சர்யம் மேலிட உமரை நோக்கி “உமரே! என்னை அடையாளம் தெரிகிறதா? நான் தான் யூதப் பண்டிதர் ஸைத் இப்னு ஸஅனா” என்று அறிமுகம் செய்து கொண்டார்.
அவரை ஏற்கனவே அறிந்திருந்த உமர் (ரலி) அவர்கள் ஓ பண்டிதரே! எல்லாம் தெரிந்த நீர் ஏன் அல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டீர்? என வினவினார்கள்.
قال زيد بن سعنة ما من علامات النبوة شيء إلا وقد عرفته في وجه محمد حين نظرت إليه إلا خصلتين لم أخبرهما منه يسبق حلمه جهله ولا يزيده شدة الجهل عليه إلا حلما
அதற்கு, ஸைத் இப்னு ஸஅனா “இறுதித் தூதர் வருகை மற்றும் அவரின் அடையாளங்கள் குறித்து தவ்ராத் வேதத்திலே சொல்லப்பட்டுள்ள அனைத்தையும் நான் முஹம்மதிடம் {ﷺ} பார்த்து விட்டேன்.
ஆனால், இரண்டு அடையாளங்களை மட்டும் இது வரை நான் பார்த்ததில்லை. அதை உறுதிபடுத்தத்தான் நான் இவ்வாறு நடந்து கொண்டேன். இப்போது அதையும் நான் பார்த்து விட்டேன். இப்போது நான் தெளிவாகி விட்டேன்” என்று கூறினார்.
அப்போது, உமர் (ரலி) அவர்கள் “அந்த இரண்டு குணாதிசயங்கள் என்ன?” என்று கேட்டார்கள்.
அதற்கு ஸைத் இப்னு ஸஅனா “இறைத்தூதர் பொறுமையின் சிகரமாக விளங்குவார், தன்னோடு உறவாடுபவர்கள் எவ்வளவு முட்டாள்தனமாக நடந்து கொண்டாலும் அவர்களிடம் புத்திசாலித்தனத்தோடு இறைத்தூதர் நடந்து கொள்வார்” எனவே, இப்போது எனக்கு தெளிவாகி விட்டது.
உமரே! இதோ நான் இஸ்லாத்தை மனதார ஏற்றுக்கொள்கிறேன். அல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்களிடம் என்னை அழைத்துச் செல்லும்” என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்களின் கரம் பிடித்து இஸ்லாத்தைத் தழுவினார்கள் ஸைத் இப்னு ஸஅனா (ரலி) அவர்கள்.
( நூல்: உஸ்துல் காபா, அல் இஸாபா ஃபீ தம்யீஜிஸ் ஸஹாபா )
வார்த்தையில் கண்ணியம்.. வாழ்க்கையின் கண்ணியம்..