இஸ்லாத்தில் பேய், பிசாசுகள் இருக்கின்றதா? தொடர்= 2
●•┄─━━━•▣▣•━━━─┄•●
கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.
●•┄─━━━•▣▣•━━━─┄•●
மனிதனில் ஜின், ஷைத்தான் ஊடுருவும் வழிகள்
-----------------
ஜின், ஷைத்தான்கள் மனித உடலில் ஊடுருவி பல்வேறு தாக்கங்களைச் செய்யும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. மனிதனின் உடல், உள சமநிலைத் தன்மையை சீர்குலைத்து நோயாளியாகவும் பைத்தியக்காரணாகவும், மன நோயாளியாகவும் மாற்றிவிடும் ஆற்றல் இவர்களுக்குண்டு. இப்படி ஷைத்தானால், ஜின்களால் பீடிக்கப்பட்டவர்களை அனுபவரீதியாக காண்கின்றோம். இவர்களுக்கு சித்தமிருப்பதில்லை. சிலவேளைகளில் சுய நினைப்பும் இருப்பதில்லை. இவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டால் தவிர, சுகம் கிடைப்பது அரிது. எனவே, ஜின், ஷைத்தான் எப்படியெல்லாம் மனிதனுள் ஊடுருவி மக்களுக்கு துன்பம் கொடுக்கும் துயரத்தை ஏற்படுத்தும் வழிகளை அறிந்திருத்தல் அவசியமாகும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஜின், ஷைத்தான் ஊடுருவும் வழிகளை தெளிவாக கூறியுள்ளார்கள். அவற்றிலிருந்து சிலவற்றை வாசகர்களாகிய உங்களுக்கு தருகின்றோம். அவை வருமாறு,
01. கெட்ட கனவு
கனவில் ஷைத்தான் ஊடுருவி கவலை, அச்சம், தொல்லை, மனக்குழப்பம் போன்றவைகளை ஏற்படுத்தும் இதனை பின்வரும் நபி மொழிகள் உறுதி செய்கின்றன.
கனவு மூன்று வகையில் அமையும். மகிழ்ச்சிகரமான அனைத்து கனவுகளும் அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வருவதாகும். அச்சம், கவலை போன்றவற்றை தோற்றுவிக்கும் அனைத்து கனவுகளும் ஷைத்தானின் தூண்டுதல்களாகும்.
அறிவிப்பவர் : அவ்ப் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : இப்னு மாஜா — 340-1 3154-3155
நீங்கள் காணும் (சந்தோஷமான) கனவுகள் அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வருவதாகும். அவ்வாறு நல்ல கனவுகள் கண்டால் அல்லாஹ்வைப் புகழுங்கள்! அக்கனவை அடுத்தவர்களுக்கும் அறிவியுங்கள். மாறாக கவலை தரும் கனவுகள் ஷைத்தான் தரப்பிலிருந்து வருவதாகும். அதன் தீங்குகள் வந்து சேராமல் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள். மற்றவர்களுக்கு அதனை கூற வேண்டாம்.
புகாரி ஷரீப் : 369-12 ஹதீது எண்-6985
02. மரணவேளையில் வழிகெடுத்தல்
உயிர் பிரியும் வேளையில் ஷைத்தான் ஊடுருவி பல்வேறு தொல்லைகள் கொடுக்கும் மன ஒர்மையை குலைத்து ஈமானை இழக்க முயற்சிக்கும். அதனால், மரணவேளையில் ஷைத்தானின் தீங்கு அணுகாமல் கார்மானம் தேடுமாறு ரஸூல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள். நபியவர்கள் இவ்வாறு அதிகமாக கார்மானம் தேடி பின்வருமாறு துஆ கேட்டுள்ளார்கள்.
யாஅல்லாஹ் ஒவ்வொரு பொருட்களின் அடியிலிருந்து வரும் தீங்குகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். இன்னும் இடிபாடுகள்! நீரில் மூழ்குதல்! எரியுண்டு போகுதல், மரண வேளைகளில் ஷைத்தான் மேலாதிக்கம் பெறுதல், இறைபாதையில் போரிட்டு பின்நோக்கிச் சொல்லும்போது மரணம் நிகழ்தல், விஷம் தீண்டி அதனால் மரணம் நிகழ்தல் போன்றவைகளை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
நூல் : நஸஈ 318-2 மிஷ்காத், ஹதீது எண் - 2473
03. வாந்திபேதி பெருந்தீட்டுக்களை உண்டாக்குதல்
வாந்திபேதி, உங்களின் விரோதியான ஜின்களின் அம்பின் சொட்டுக்களாகும். அது உங்களுக்கு (முஃமின்களுக்கு) ஷஹாதத் ஆகும்.
அறிவிப்பவர் : அபூபக்கர் மூஸல்அஷ்ஆரி ரழியல்லாஹு அன்ஹு
நூல் : தப்றானி, பத்ஹுல் பாரி — 182-10
ஹம்னா பின்த ஜஹ்ஸ் ரழியல்லாஹு அன்ஹா அவர்கட்கு வழக்கத்தை விட அதிக நாட்கள் மாதாந்திர உதிரப்போக்கு எற்பட்டது. அதுபற்றி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களிடத்தில் கேட்கப்பட்டது. அது ஷைத்தானின் சதிவேலையில் ஒரு சதியாகும் என்று பதில் கூறினார்கள்.
அபூதாவூத் - 56-1 , ஹதீது எண் - 267
நஸஈ : 40-1,ஹதீது எண் - 110 இமாம்
04. மனிதனில் முழு ஆதிக்கம் செலுத்துதல்
அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மகன் அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, தனது தந்தையிடம் ஜின், ஷைத்தான் உடலில் புகுந்து ஆதிக்கம் செலுத்தும் திராணி பெற்றுள்ளான் என்பதை பலர் மறுக்கின்றார்கள். உங்கள் கருத்து என்ன? என்று கேட்டதற்கு, இமாமவர்கள் பின்வருமாறு பதில் கூறினார்கள்.
மகனே! இவர்களின் வாதம் சுத்தப்பொய்! ஷைத்தான்தான் இவர்கள் நாவின் வழியாகப் பேசுகின்றான் என்பதுதான் உண்மை என்று இப்னுதைமிய்யா கூறுகின்றார்.
ஆதாரம் : மஜ்முஉல் பதாவா, பாகம் - 19, பக்கம் - 12
இப்னுதைமிய்யா மேலும் அதே நூல் பாகம் 24, பக்கம் 277ல் கூறுகின்றார்கள்.
வட்டி உண்பவர்கள் ஷைத்தான் பிடிப்பவன் போன்று மறுமையில் எழுப்பப்படுவான் குர்ஆன் 2:275 என்று அல்லாஹுத்தஆலா கூறியுள்ளான். இதனை அடிப்படையாக வைத்து ஜின், ஷைத்தான் மனிதனின் உடலில் ஊடுருவி முழு ஆதிக்கம் செலுத்தும் ஆற்றல் பெற்றுள்ளான் என்று அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் இமாம்கள் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளனர் என்று இப்னு தைமிய்யா இயம்புகின்றார்.
ஆதாரம் : மஜ்முஉல் பதாவா, 12-19
நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் குருதி ஓடும் இடங்களிலெல்லாம் ஓடுகின்றான் என்று ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள்.
புகாரி ஷரீப் : 159-13
முஸ்லிம் : ஹதீது எண் - 1712
மனித உடலில் ஜின், ஷைத்தான் உட்புகுந்து குடிவாழும் என்று இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தனது மகாலத்து அஹ்லுஸ்ஸுன்னா என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதாக இப்னு தைமிய்யா தனது மஜ்முஉல் பதாவா பாகம் - 19, பக்கம் 12இல் குறிப்பிடுகிறார். மேலும் இப்னுதைமிய்யா கூறுகிறார்
ஜின், ஷைத்தான் உடலில் உட்புகுந்து உடலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும் தொல்லைகள் கொடுப்பதும் ஷரீஅத் அனுமதித்த உண்மைகளாகும், ஷரீஅத்தில் பொய் புரட்டு செய்பவர்கள்தான் இந்த உண்மையை மறுப்பார்கள்.
சில அறிவிலிகளும், வழிகேடர்களுமே இதனை மறுக்கின்றனர். முஃதஸிலாக்களின் உட்பிரிவைச் சார்ந்த ஜுபாயி, அபூபக்கர் அல்றாஸி உள்ளிட்டோர் கடுமையாக சாடுகின்றனர்.
ஆதாரம் : மஜ்முஉல் பதாவா, பாகம் - 19, பக்கம் 12
இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமி, மக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பின்வருமாறு கூறுகின்றார்கள்.
ஷைத்தான் அவனது நம்பிக்கையை மனிதனின் உள்ளத்தில் போடுகின்றான். அவன் அல்லாஹ்வை திக்று செய்தால் பின்வாங்குகின்றான். அல்லாஹ்வை மறந்தால் உள்ளத்தில் ஊடுருவி சலனங்களை தோற்றுவிக்கின்றான். இவ்வாறு ஸஹீஹான ஹதீதுகளில் வந்துள்ளது. இதனை அல்கன்னாஸ் (என்ற ஷைத்தான்) உள்ளத்தில் சலனங்களை (சந்தேகங்களை) ஏற்படுத்துகின்றான் என்ற திருமறை வசனம் உறுதி செய்கின்றது.
ஜின் மனித உடலில் உட்புகுந்து பல்வேறு துன்பங்களை ஏற்படுத்தும் என்பது சுன்னத்துல் வல் ஜமாஅத்தின் கோட்பாடாகும் என்று அல்லாமா இப்னு ஹஜர் மக்கி ஹைதமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
ஆதாரம் : பதாவா ஹதீதிய்யா, பக்கம் 62
05. தீப்பிடித்தல்
ஷைத்தான் பல்வேறு உபாயங்களைப் பயன்படுத்தி எரிகாயங்களையும், எரித்தலையும் ஏற்படுத்துகின்றான் என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள்.
நீங்கள் தூங்க ஆரம்பித்தால் விளக்கை அணைத்து விடுங்கள். காரணம், ஷைத்தான் எலியை அனுப்பி விளக்கை வீழ்த்துவான், அது பிற பொருளில் பட்டு தீப்பிடித்து அங்கிகளையும் தாவிப்பிடித்து கரித்துவிடும்.
ஆதாரம் : அபூதாவூத் - 983-3, ஹதீது எண் - (4369)
இதனால்தான் தீப்பிடித்து எரிவதைக் கண்டால் அதான் (பாங்கு) கூறுவது சுன்னத்தாக்கப்பட்டிருக்கின்றது. அதான் ஒலியை ஷைத்தான் கேட்டால் காற்றுப் பறக்க விரண்டோடுகின்றான் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள்.
06. சிறு குழந்தைகளுக்கு தொல்லைகள் கொடுத்தல்
எந்தக் குழந்தையையும் ஷைத்தான் தொடாமல் பிறப்பதில்லை. அதனால்தான் அது உரத்து அழுகின்றது தவிர, மரியம் அவர்கள் மகன் ஈஸா (அலைஹிவஸல்லம்)
ஆதாரம் : புகாரீ ஷரீப் 469-6 ஹதீது எண் 3431
பிறக்கின்ற எல்லாப் பிள்ளைகளின் விலாவிலும் ஷைத்தான் விரலால் குத்துகின்றான். அதன் வலியால்தான் பிள்ளைகள் அழுகின்றன. தவிர ஈஸா அலைஹிவஸல்லம் அவர்களையும் விரலால் குத்த எத்தனித்தான். ஒரு திரை விழுந்து தடுத்து விட்டது.
புகாரீ: ஹதீது எண் 2376-3286
07. உணவு, குடிப்பு, உறக்கம் போன்றவைகளில் உறவு கொள்ளல்
மனிதனின் உணவிலும், குடிப்பிலும், உறக்கத்திலும் ஜின், ஷைத்தான் பங்காளியாகின்றன. அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் காட்டித்தந்த ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்காமல் விட்டால் இந்த நிலை ஏற்படும். இன்னும் அல்லாஹ்வின் நினைவுமாறி மதிமயக்கத்தில் கிடக்கும் போதும் இது நடக்கும்.
ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள், நாங்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் அவையிலிருக்கும்போதும் சரி, அல்லது சாப்பிட அழைக்கப்படும் போதும் சரி அண்ணலார் உணவுத் தட்டில் கையை வைக்கமுன் நாங்கள் உண்ண ஆரம்பிக்க மாட்டோம். ஒரு தினம், ஒரு பெண் யாரோ ஒருவர் பின்னால் விரட்டி வருவது போன்று பெருமானாரின் அவைக்கு வந்து நேராக உணவுத் தட்டில் கைபோட்டாள். உடனே அவள் கையை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பிடித்துக் கொண்டார்கள். அதன்பின் ஒரு கிராமவாசி அவ்வாறே வந்தார். வந்ததும் உணவில் கையைப் போட்டார். அவர் கையையும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் இறுக்கப் பிடித்துக் கொண்டார்கள். அதன்பின் விளக்கம் கூறினார்கள்.
ஷைத்தான் இந்த உணவை ஹலாலாக ஆக்கிக்கொள்ள முனைந்தான். எதில் அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதில் அவன் பங்கேற்கிறான்.
ஷைத்தான் இந்தப் பெண்னோடு வந்து இந்த உணவில் பங்கெடுக்க முனைந்தான். அவள் கையைப் பிடித்துக் கொண்டேன். பின், கிராமவாசி மூலம் முயன்றான். அப்போதும் அவன் கையைப் பிடித்துக் கொண்டேன். எவன் கையில் என் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அவன் (ஷைத்தானின்) கை அவள் கையுடன் என் கையில் சிக்கியிருக்கின்றது.
ஆதாரம் : முஸ்லிம் ஹதீது எண் 2017
ஒரு மனிதர் அல்லாஹ்வின் பெயர் கூறாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கடைசி கவளத்தை உண்ண முன் பிஸ்மில்லாஹி அவ்வலுஹு வஆகிறுஹு என்று கூறினார். இதைக் கண்ணுற்ற காருண்ய நபியவர்கள் விளக்கம் கூறினார்கள். ஷைத்தான் உனது உணவில் பங்காளியாக இருந்தான். நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியதும் அதுவரை உன்னோடு சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை வாந்தி எடுத்து விட்டான்.
நூல் : அபூதாவூத், இப்னு ஸனிய்யா — பக்கம் 218
அஹ்மத் முஸ்னத் : 336-4
ஒரு மனிதர் நின்றுகொண்டு நீர் அருந்துவதை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கண்டார்கள். உடன் வாந்தி எடுக்குமாறு அவரைப் பணித்தார்கள். அவர் காரணம் கேட்டார். ஒரு பூனை உன்னிடம் சேர்ந்து நீர் அருந்துவதை விரும்புவீரா? என்று அவரிடம் திருப்பிக் கேட்டார்கள். இல்லை என்றார், பூனையைவிட கெட்ட ஷைத்தான் உன்னிடம் சேர்ந்து உனது நீரைக் குடிக்கின்றான் என்று விளக்கம் கூறினார்கள் வேந்தர் நபியவர்கள்.
நூல் : அஹ்மத், முஸ்னத் 366-4, ஹாக்கீம் 108-109-4
மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் விளக்கை அணையுங்கள்! அதன்மீது அல்லாஹ்வின் திருநாமத்தை உச்சரியுங்கள்! உங்கள் பாத்திரத்தையும் மூடி விடுங்கள்! அப்பொழுதும் அதன்மீது அல்லாஹ்வின் திருநாமத்தை உச்சரியுங்கள். (மூடி இல்லாவிட்டால்) அதன் (பாத்திரத்தின்) மேல் குறுக்கே ஒரு குச்சியையாவது வையுங்கள்.
நூல் : புகாரி ஷரீப், 336-6
பாத்திரத்தை மூடி விடுங்கள். கஸ்தூரி குப்பியை மூடி வையுங்கள், கதவை மூடி விடுங்கள், விளக்கை அணைத்து விடுங்கள், மூடிய போத்தலை ஷைத்தான் திறக்க மாட்டான். மூடிய பாத்திரத்தை அவனால் திறக்க முடியாது.
முஸ்லிம் : ஹதீது எண் 2012
இவ்வாறான பொன்மொழிகள் பலநூறு உண்டு. எடுத்துக்காட்டாக சிலதை முன்வைத்துள்ளேன். புரியும் திறனுள்ளவர்களுக்கு இவை போதும்! புத்திகெட்ட மாந்தர்களுக்கு எதுவும் புரியாது. ஜின் ஷைத்தானின் தீங்கிலிருந்து ஷரீஅத் கூறும் வழியில் பாதுகாப்பைப் பெற்று நிம்மதியாக வாழ அல்லாஹ் தௌபீக் செய்வானாக!