السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 11 November 2018

மீலாதுன் நபி (ﷺ)சிறப்புப்பார்வை 210

மீலாதுன் நபி (ﷺ)சிறப்புப்பார்வை 210

மீலாதுன் நபி (ﷺ)சிறப்புப்பார்வை

வாழ்க்கையாக இருக்கட்டும், வாழ்ந்து மறைந்த பின் விட்டுச் செல்கிற வரலாறாக இருக்கட்டும் புகழுக்குரியதாய் அமைந்திருக்க வேண்டும் என்கிற புதியதோர் இலக்கணத்தை இப்பூவுலகிற்கு தந்தவர்கள் பெருமானார் {ﷺ} அவர்கள்.
வரலாற்றிலும் கூட புகழோடு தோன்றுகிற பெரும் பேறு பெற்றவர்கள் நமது உயிரினில் கலந்த உத்தம நபி {ﷺ} அவர்கள்

நபி (ﷺ) அவர்கள் மேற்கொண்ட ஒரு பிரயாணத்தின் போது ஒரு கிராமத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி (ﷺ) அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.

நபி (ﷺ) அவர்களை மிகவும் கண்ணியப்படுத்தினார்.  இச்செயலை கண்டு அக மகிழ்ந்து போன நபி {ஸல்} அவர்கள் மதீனா வந்தால் அவசியம் தங்களைச் சந்திக்க வருமாறு அழைப்பு கொடுத்து விட்டு விடை பெற்றார்கள்.

சிறிது காலம் கழித்து அக்கிராம வாசி மதீனா வந்தார்.  நபி (ﷺ) அவர்களை மஸ்ஜிதுந் நபவீயில் வந்து சந்தித்தார். அவரை நபி (ﷺ) அவர்கள் அன்புடன் உபசரித்தார்கள்.

அவர் விடைபெற்றுச் சென்ற போது “என்னிடம் ஏதாவது கேளுங்கள்!”  என்று நபி (ﷺ) அவர்கள் அக்கிராம வாசியிடம் கேட்டார்கள்.

”அவர் எனக்கு ஓர் ஒட்டகம் தேவை அதை நான் வாகனமாக பயன் படுத்திக் கொள்வேன்” என்றார். மீண்டும் நபிகளார் வேறு ஏதாவது கேளுங்கள்! என்றார்கள்.

அதற்கவர், அதை பாதுகாக்க ஒரு நாய் வேண்டும் என்றார். மீண்டும் நபிகளார் வேறு ஏதாவது கேளுங்கள்! என்றார்கள், அதற்கவர் அவ்விரண்டையும் கவனித்துக் கொள்ள ஒரு பணிப்பெண்ணைத்தாருங்கள் என்று கேட்டார்.

இதுதான் உங்கள் தேவையா? என மாநபி (ﷺ) கேட்ட போது,  ஆமாம் அல்லாஹ்வின் தூதரே! இதுவே எனக்குப் போதும் என்றார் அவர்.

அல்லாமா தப்ரானீ (ரஹ்) அவர்கள் பதிவு செய்திருக்கும் ரிவயாத்

அக்கிராமவாசி ஓர் ஒட்டகம் தேவை,  தாங்கள் அதை வழங்கினால் வாகனமாக பயன்படுத்திக் கொள்வேன், இன்னும் சில ஆடுகளைத் தந்தால் அதன் பாலைக் கறந்து என் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வேன் என்றார். இதுதான் உங்களின் தேவையா? என்று வினவியபோது ஆமாம் இறைத்தூதரே!  இதுவே எனக்குப் போதும் என்றார்.

இதைக்கேட்டதும் அண்ணல் நபி (ﷺ) அவர்கள்:  “அல்லாஹ்வின் தூதராகிய நான் உமது தேவை குறித்து கேட்டபோது இவ்வளவு மலிவான பொருளை கேட்டு விட்டீரே! மூஸா (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மூதாட்டி மூஸா (அலை) அவர்களிடம் கேட்டது போல நீங்களும் கேட்க தவறி விட்டீரே! உம்மை விட அம்மூதாட்டி சிறந்தவள் என்றார்கள்.

உடனே சுற்றியிருந்த தோழர்கள் யார் அந்த மூதாட்டி?அப்படி என்ன தான் கேட்டார்?ஆர்வமாய் அண்ண்லாரிடம் கேட்டார்கள்.

மூஸா நபியவர்கள் பனூ இஸ்ரவேலவர்களை எகிப்திலிருந்து பைத்துல் முகத்தஸ்ஸிற்கு அழைத்துச் செல்ல முயன்ற போது பாதை தெரியாமல் பயணம் தடைபட்டது.

அது குறித்து ஆலோசித்த போது அங்கிருந்த மூத்த வயதுடையவர்கள் “இஸ்ரவேலவர்கள் பைத்துல் முகத்தஸ்ஸிற்கு பயண மேற்கொள்வதாக இருந்தால் தமது ஜனாஸாவையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என நபி யூஸுப் (அலை) அவர்கள் வஸிய்யத் செய்ததாகவும் அதனால் தான் பயணம் தடை படுவதாகவும்” சொன்னார்கள்.

 சக நபி யூசுப் (அலை) அவர்களின் அடக்கத்தலம் குறித்து விசாரித்த போது இது குறித்த தகவல் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டிற்கு தெரியும் என தெரிந்து கொண்டார்கள்.

இறுதியில், அம் மூதாட்டியை சந்தித்த மூஸா (அலை) அடக்கத்தலம்குறித்து விசாரித்தார்கள்.

நான் அறிவித்து தந்தால் எனக்கு என்ன சன்மானம் தருவீர்கள்? என அம்மூதாட்டி கேட்டார்.என்ன வேண்டும்? எது கேட்டாலும் தருகிறேன் என்று மூஸா (அலை) அவர்கள் பதில் கூறினார்கள்.

அப்படியானால், மறுமையில் சுவனத்தில் உங்களுடன் நான் இருக்க வேண்டும் என தமது கோரிக்கையை முன் வைத்தார்கள்.

அம்மூதாட்டியின் ஆர்வத்தையும், ஆவலையும் கண்டு வியந்த நபி மூஸா (அலை) அவர்கள் ஒப்புக்கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள்.

பின்பு அம்மூதாட்டி காண்பித்த நீரோடை அருகேயிருந்து யூஸுப் (அலை) அவர்களின் புனித உடல் கண்டெடுக்கப்பட்டு, பைத்துல் முகத்தஸை நோக்கி கொண்டு செல்லப்பட்டு அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

     ( நூல்: அல் முஸ்தத்ரக் அல் ஹாகிம் )

தொடரும்.......



மீலாதுன் நபி (ﷺ)சிறப்புப்பார்வை 210