
இஸ்லாத்தின் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும். இஸ்லாத்திற்குரிய ஒழுக்க, ஆன்மீகத் தனித்தன்மைகளை கொண்டதாக இது விளங்குகின்றது. வைகறை வரும் முன் ஆரம்பித்து, சூரியன் அடையும் வரை உணவு, பானம், உடல் உறவு இன்னும் இவை போன்றவற்றிலிருந்து விலகியிருத்தலே நோன்பாகும். இது றமழான் முழுவதும் நோற்பது கடமையாகும்.
நோன்பின் மூலம் ஓர் ஒப்பற்ற வாழ்வுத்திட்டத்தை இஸ்லாம் அமைத்துள்ளது. நோன்பின் ஆன்மீகப் பொருளை பின்வருமாறு விளக்க முடியும்.
01. நோன்பு 'அன்பு' என்ற ஒரு அற்புதத் தத்துவத்தை கற்றுத் தருகின்றது. இறைவன் மீது கொண்ட அன்பினாலேதான் மனிதன் நோன்பு நோற்கின்றான். உண்மையான அன்பு என்னவென்பதை நன்குனர்ந்தவனே இறைவனை உண்மையாக நேசிப்பான்.
02. நோன்பு மனிதனிடத்தில் தன்னம்பிக்கையை வளர்க்கின்றது. நோன்பு நோற்பவன் வாழ்வை நம்;பிக்கையுடன் நடத்துகின்றான். நோன்பு மனிதனுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்துகின்றது. ஏனெனில், மனிதன் இறைவனின் திருப்தியைப் பெறுவதற்காகவே நோன்பினை நோற்கின்றான். அதன் மூலம் இறைவன் அவனுக்கு கருணையை நாடுகின்றான். இறைவனின் அருள் கிடைக்கும் என்ற காரணத்தால் மனிதன் தன்னிம்பிக்கையுடையவனாக வாழ்வான்.
03. ஆழ்ந்த பக்தி என்ற உண்மையான நற்பண்பையும் நோன்பு ஏற்படுத்துகின்றது. அது நேர்மையான தியாகம், இறை நெருக்கம் என்ற உன்னத நிலைகளை ஏற்படுத்தித் தருகின்றது. ஏனெனில், ஒருவன் நோன்பிருக்கின்றான் என்றால், அவன் இறைவனுக்காகவே உலகப் பொருட்களை அந்தந்தக் குறிப்பிட்ட நேரத்தில் துறந்திருக்கின்றான். அவன் இறைவனுக்காவே அவ்வாறு செய்கின்றான்.
04. மனிதனிடத்தில் பண்பட்ட தொரு மனச்சாட்சியை நோன்பு உருவாக்கின்றது. நோன்பை நோற்பவர் தன்னை யாரும் கண்கானித்து விடாத போதும், நோன்பைக் கண்ணெனக்காத்து வருவதன் நோக்கம் இறைவனின் திருப் பொருத்தம் தனக்கு கிடைப்பதென்பதாகும். இதன் மூலம் தனது மனச்சாட்சியைத் திருப்திப் படுத்துகின்றார்.
05. நோன்பு மனிதனுக்கு பொருமையைக் கற்றுத்தருகின்றது. சுய நலமற்ற வாழ்வு மனிதனிடத்தில் ஏற்பட நோன்பு வகை செய்கின்றது. நோன்பாளி வறியவர்களின் வாட்டத்தை, பஞ்சமுள்ளவர்களின் பசியினை நன்குனர்கின்றவன். இத்தகைய அனுபவத்தைப் பெறுகின்றவர் சுய நலமற்ற வகையில் வறியவர்களுக்கு வாரி வழங்குவதையே வழக்கமாகக் கொள்கிறான்.
06. நோன்பு மனக்கட்டுப்பாடு எனும் நற்பண்பை கற்றுத் தருகின்றது. தனது மன ஆசைகளையும், உடல் தாபங்களையும் அடக்கிக் கொள்ளும் பக்குவம் பெற்றவர்களே நோன்பு நோற்கின்றர்கள். நிச்சயமாக இவர்கள் நற்குணம், நன்னடத்தை, மனக்கட்டுப்பாடு உளத்தின்மை போன்றவற்றைப் பெறுபவர்கள் பெற்றிருப்பார்கள்.
07. மனிதன் சிந்திப்பதற்கான மனத் தெளிவை ஏற்படுத்துகின்றது நோன்பு. உள்ளச்சத்தோடும் சுறு சுறுப்போடும் இயங்கும் வகையில் நோன்பு உடலை மாற்றுகின்றது.
08. நோன்பு ஒரு சிறந்த வரவு, செலவுத் திட்டத்தை அமைப்பதற்கும், சீரிய சேமிப்பிற்கும் வழி காட்டுகின்றது.
09. வருவாயில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப மனிதன் வாழ்ந்திடத் தேவையான பயிற்சியாக நோன்பு அமைகின்றது. அது போலவே மனிதன் சூழ் நிலைவகளுக்கு ஏற்ப தனது உணவுப் பழக்கங்களை வளர்த்துக் கொள்ள நோன்பு உதவுகின்றது.
10. நோன்பு மனிதனுக்கு ஒழுங்கு, கட்டுப்பாடு ஆரோக்கியமான வாழ்வு முறை ஆகியவற்றை அளிக்கின்றது. தொடர்ந்து நோன்பு நோற்பவர், தன்னை உயர்ந்த கட்டுப்பாட்டு முறைக்குட்படுத்துவதுடன் தனது ஜீரன உறுப்புக்களுக்கும் ஓய்வு கொடுப்பதன் மூலம் வயிற்றுக் கோளாறுகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கின்றான். இதனால் உடல் ஆரோக்கியமடைகிறது. உள்ளத்திற்கும் ஆரோக்கியத்தை அளிக்கின்றது. அவருடைய ஆன்மா தூய்மையுடனும், அமைதியுடனும் இயங்குகின்றது.
11. நோன்பு மனிதனுக்கு சகோதர உணர்வையும், ஒற்றுமை உணர்வையும், சகோதரத்துவ உணர்வையும் ஊட்டுகின்றது. இறைவனின் முன்பும், இறைவன் வகுத்துத் தந்துள்ள சட்டத்தின் முன்பும் அனைவரும் சமமானவர்கள். என்ற உணர்வை அளிக்கின்றது.
12. தன்னம்பிக்கை, மனிதனின் இலட்சிய வெற்றிக்கு உயிர் போன்றது. இந்தத் தன்னம்பிக்கையை மனிதனிடம் வளர்ப்பது நோன்பாகும். மனிதனுக்கு சுதந்திரம், கண்ணியம், அமைதி இவற்றோடு வெற்றியையும் பெற்றுத் தருகின்றது. பாவங்களிலிருந்து மனிதனை விடுவிக்கின்றது.
முறையாக நோன்பு நோற்பவர் நோன்பின் பலன்களை அனுபவத்தால் அறிகின்றார். இந்த நன்மைகளை அடையும் ஒருவர் உள்ளத்தில் அமைதி பெறுகின்றார். தான் வாழும் வட்டத்தில் அமைதியாக வாழ்கின்றார்.
ஆத்மீகப் பார்வையில் நோன்பு
'நோன்பு எனக்குரியது அதற்கான கூலியை நானே கொடுப்பேன். அல்லது நானே அதற்குக் கூலியாவேன்' என்று அல்லாஹூத் தஆலா கூறியதாக ஜிப்ரீல் என்னிடம் கூறினார். என்று கோமான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள்.
நோன்பு ஓர் அகவியல் வணக்கமாகும். புற நிலைத் தொடர்புகள் எதுவும் இதில் கிடையாது. ஒரு நோன்பாளியின் வெளி நிலையை வைத்து ஒரு போதும் தீர்மானிக்க முடியாது. அதனால் இதற்கு கணக்கில்லாத கூலியுண்டு.
சொர்க்கம் செல்வது அல்லாஹ்வின் அருளினால் மட்டுமே சாத்தியமாகும். சொர்க்கத்தின் படி நிலைகளை அவர்களது வணக்கங்களே தீர்மானிக்கும். ஆனால், நோன்பாளிக்கு அல்லாஹ் மட்டுமே கூலி கொடுப்பதனால் நோன்பாளி சொர்க்கத்தில் நித்தியமாக வாழும் பாக்கியத்தைப் பெறுகின்றார்.
ஞானிகள் நாயகம் ஹஸரத் ஜூனைத்துல் பகுதாதி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகையில், 'நோன்பு தரிக்கத்தின் பாதி' என்றார்கள். அதிகமான ஷைகு மார்கள் வாழ்நாள் பூராகவும் நோன்பு நோற்பவர்களாகவே இருந்தார்கள். சிலர் றமழானில் மட்டும் நோற்பார்கள். முகஸ்துதியை பயந்து ஏனைய காலங்களில் நோன்பு நோற்பதைத் தவிர்ந்திருந்தார்கள்.
நோன்பின் குறைந்த நிலை பசியோடு இருப்பதாகும். பசியோடு இருப்பது புவியில் அல்லாஹ்வின் ஆகாரமாகும். பசியோடிருப்பதை ஷரீஅத்தும், அறிவும் வரவேற்கின்றன. நோன்பு நோற்கும் போது கண், காது, மூக்கு, நாக்கு, மற்றும் ஸ்பரிசம் உள்ளிட்ட உறுப்புக்கள் யாவும் நோன்பு நோற்க வேண்டும் என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். இந்த ஒழுங்கைப் பேணாமல் நோன்பு நோற்போர் பசியையும், தாகத்தையும் தவிர்த்து வேறு எதனையும் பெறுவதில்லை என்று நபியவர்கள் நவின்றுள்ளார்கள்.
பொறிகளைக் கட்டுப்படுத்துவது நோன்பின் முக்கிய குறிக்கோளாகும். நோன்பின் பூரணத்துவம் இதில்தான் தங்கியுள்ளது. மனிதனின் புறப் பொறிகளான கேட்டல், பார்த்தல், நுகர்தல், சுவைத்தல், தொடுதல் மூலமாக அறிவினைப் பெறுகின்றான். பகுத்தறிவு ஆறாம் புலன் மூலமாகப் பெறப்படுகின்றது.
முதல் நான்கு பொறிகளும் குறிப்பிட்ட ஒரு இடத்தையும், ஐந்தாம் பொறி உடல் முழுவதையும் கொண்டிருக்கின்றது. பொறிகள் ஒவ்வொன்றும் அதன் பரப்புக்கள், அது விரும்புவதையும், வெறுப்பதையும் அறிகின்றன.
கண்:-அழகிய பூக்களையும், பூஞ்சோலைகளையும், அழகிய மனிதர்களையும், அருவருப்பான பயங்கர தோற்றங்களையும் பார்க்கின்றது.
காது:- இனிமையான ஓசையையும், வெறுப்பான கர்ண கடுர சப்தத்தையும் கேட்கின்றது.
நாக்கு:- சுவையானதையும், கசப்பானதையும், சுவைக்கின்றது.
மூக்கு:- மணமானதையும், துர்நாற்றத்தையும் நுகர்கின்றது,
தொடுகை:- குறிப்பிட்ட உறுப்புக்களை அல்லாது உடல் முழுவதும் வியாபித்து உணர்கின்றது.
அதனால் உடல் முழுவதும் சூடு, குளிர், மென்மை, கடினம், சொற சொறப்பு உள்ளிட்டவைகளை உணர்கின்றது.
ஆனால் மேற்கண்ட பொறிகள் எவற்றினாலும், மனிதனை அறிய முடியாது. அல்லாஹ்வின் உதிப்பின் மூலமான 'இல்ஹாம்;' என்ற உள்ளுனர்வு அறிவால்தான் மனிதனை அறிய முடியும். இந்த விதமான அறிவினால் எந்த வித ஆபத்தும் கிடையாது. இந்த அறிவை அடைவதற்கு ஐம்பொறிகளின் அவசியமில்லை.
றூஹின் கட்டுப்பாட்டில்தான் அறிவும், ஞானமும் உள்ளன. அதுபோல் பேராசை, (ஹவா) நப்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளது. பாவம், புண்ணியம், சீதேவி, மூதேவித் தனங்கள் இவற்றிற்கு மத்தியில் காரணகர்த்தாவாக சிக்குண்டுள்ளன.
கேள்வி, பார்வை என்ற பொறிகளின் மூலம் இறைவனின் விருப்பமும், அவன் உதவி அதிகாரம் நல்லதைப் பார்ப்பதிலும், சத்தியத்தைக் கேட்பதிலும் தங்கியுள்ளது. நப்ஸின் விருப்பமும், அதிகாரமும் பொய்யைக் கேட்பதிலும், இச்சையைத் தூண்டுவதைப் பார்ப்பதிலும் தங்கியுள்ளது. இவ்வாறு சுவைத்தல், நுகர்தல் ஆகிய பொறிகளில் இறைவனின் விருப்பமும், அதிகாரமும் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு நேர்ப்பட்டிருப்பதிலும், றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் சுன்னத்தை பேணி நடப்பதிலும் தங்கியுள்ளது. இவ்வாறு,
நப்ஸ் அல்லாஹ்வுக்கு மாற்றமாக நடப்பதிலும் ஷரீஅத்தின் வரம்புகளை மீறுவதிலும் அதன் விதிகளை வெறுப்பதிலும் தங்கியுள்ளது. அதனால் நோன்பாளி தனது பொறிகளை தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். நப்ஸின் விருப்பத்திற்கு எதிரானவைகளுடன் உடன்பாடாகவும், றூஹின் விருப்பத்திற்கு உடன்பட்டும் நடக்க வேண்டுமாயின் பொறிகளின் கட்டுப்பாடு அவசியமாகும். அப்படியானால்தான் நோன்பாளி தனது நோன்பை முழுமையாகப் பேணியவராகக் காணப்படுவார். தவறின் பசியும், தாகமும் தவிர்த்து அவருக்கு எதுவும் எஞ்சியிராது.
சிறு குழந்தையும், குடு குடுத்த கிழவியும், நோயாளியும் பசியோடும், தாகத்தோடும் இருக்கின்றனர். பசியோடு இருப்பது மட்டும் நோன்பின் நோக்கமாகாது. நப்ஸின் ஆசைகைளை உலகியல் விளையாட்டுக்களில் விரும்பியவாறு மேய்வதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது நோன்பின் முக்கிய குறிக்கோளாகும்.
நோன்பின் வெற்றி
நோன்பு பின்வரும் 06 காரியங்களால் பூர்த்தியாகின்றன. இவற்றினை முழுமையாகப் பேனும் போதுதான் நோன்பின் முழுமையான பலா பலன்களைப் பெற முடியும். அவைகள் வருமாறு:-
01. கண்பார்வை இப்லீஸின் நஞ்சூட்டப்பட்ட விஷ அம்புகளில் ஓர் அரும்பாகும். அல்லாஹ்வை அஞ்சி கண்ணைப் பேணியவனுக்கு ஈமானிய மேலாடை வழங்கப்படும். கல்பில் அதன் இன்பத்தை அவன் அனுபவிப்பான் என்று றஸூலுல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அதனால் கண்ணைப் பேணி கல்பில் ஈமானிய பேரின்பத்தைப் பெற நோன்பைப் பேணிக்கொள்ள வேண்டும்.
02. வீண் பேச்சுக்கள், தர்க்கித்தல், பொய்ச் சத்தியம் செய்தல் பேன்ற தீய காரியங்களிலிருந்து நாவைப் பேணுவதுடன் திருக்குர் ஆன் ஓதுதல், திக்று செய்தல், நல்லுபதேசம் புரிதல், ஸலவாத்து மொழிதல், இஸ்திஃபார் செய்தல் பேன்றவற்றில் நாவைப் பேண வேண்டும்.
03. தகாதவைகளைக் கேட்காதவாறு காதைப் பாதுகாக்க வேண்டும். எவற்றையெல்லாம் மொழிவது தடை செய்யப்பட்டுள்ளதோ அவற்றைக் கேட்பதும் தடையாகும்.
04. கை, கால் உள்ளிட்ட உறுப்புக்களால் பாவமான செயல்கள் ஏற்படாதவாறு பேணிக் கொள்ளல் வேண்டும். பாவங்களிலிருந்து உறுப்புக்களைப் பேணாத நோன்பாளி இனிப்புக்களை அதிகம் உண்ணும் சக்கரை (சீனி) வியாதிக்காரனை ஒத்தவனாவான். தன்னைக் கொல்லுபவற்றைத் தானே விரும்பி உண்பதற்கு நிகராகும்.
05. ஹராமான அல்லது சந்தேகமான ஆகாரங்களால் நோன்பு திறக்கக் கூடாது. ஆகாரம் ஹலாலாக இருப்பினும் குறைந்தளவு புசிக்க வேண்டும். இதனால் ஆசை, இச்சை ஒடுங்கும், உடலின் கனம் குறையும், இரவில் அதிக நேரம் விழித்திருந்து வணங்க உதவியாக இருக்கும்.
06. நோன்பு திறந்த பின் நோன்பை அல்லாஹூத் தஆலா கபூல் செய்தானா? இல்லையா? என்ற ஏக்கத்துடனும் அலலாஹ்வின் அருளில் ஆதரவும் கொண்டவனாக இருத்தல் வேண்டும்.
மலக்குகள் உண்ணல், குடித்தல் இன்றி அல்லாஹ்வை வணங்கினர். மனிதனை மலக்கின் உயர் நிலைக்கு உயர்த்துவதுதான் நோன்பின் குறிக்கோளாகும்.
மனிதனை மலக்கின் உயர் நிலைக்கு உயர்த்துவதும், மிருகத்தின் கடை நிலைக்கு கீழிறக்குவதும் இச்சையாகும். இச்சையை துறந்தவன் மலக்கின் நிலைக்கு உயர்வான். இச்சைக்குப் பணிந்தவன் மிருக நிலைக்கு இறங்குவான். அதாவது தகுதியில் இவர்களைச் சேருவான்.
நோன்பு பிடிப்பதால் மனம் தெளிவடைகின்றது. உணர்ச்சிகள் சம நிலைப் படுகின்றன. குணங்கள் செம்மையடைகின்றன. நோன்பை விடுவதால் மணம் இருளடைகின்றது. மறதி அதிகரிக்கின்றது. மன உணர்வுகள் தூர்ந்து போகின்றன. இதனால்தான் நபிமார்கள், ஸித்திகீன்கள், மற்றும் நல்லடியார்கள் அதிகமதிகம் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்டினார்கள். வாரத்தில், மாதத்தில் சில நாட்களில் நோன்பு நோற்பதை ஷரிஅத் முக்கியத்துவப்;படுத்தியிருப்பதும் இந்த நோக்கத்தை மையப் படுத்தியே என்று அறிஞர்கள், சூபீகள், ஆரிபீன்கள் கூறுகின்றனர்.
கலீபதுல் காதிரி மௌலவி பாஸில் ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி – பரேலவி) அவர்கள்