السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 20 August 2025

இலகுவாக உணவு கிடைத்தால்

 


உணவு, தண்ணீர், தங்குமிட வசதிகளுடன், இயற்கை அனர்த்த தாக்குதல் எதுவுமின்றி எலிகளை ஓரிடத்தில் வைத்தால் என்னவாகும்?


இந்த யோசனை அமெரிக்க உயிரியலாளர் ஜான் கால்ஹவுனுக்குத் தோன்றியது. 1970-ஆம் ஆண்டு இந்த பரிசோதனையைத் தொடங்கினார்.


ஏராளமான உணவு, நீர் மற்றும் வசதிமிக்க ஓரிடத்தை உருவாக்கினார். பின்னர் அங்கு நான்கு எலிகளை (இரண்டு ஆண், இரண்டு பெண்) வைத்தார்.


முதலில் எலிகள் வியக்கத்தக்க விகிதத்தில் இனப்பெருக்கம் செய்தன, அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் 315 நாட்களுக்குப் பிறகு, இனப்பெருக்க விகிதம் கணிசமாகக் குறையத் தொடங்கியது.


எலிகளின் எண்ணிக்கை தோராயமாக 600-ஐ எட்டியபோது, அவற்றுக்கு இடையே புதிய மாற்றங்கள் தோன்றின. அந்த மாற்றங்கள் மிக மோசமானவையாக இருந்தன.


பெரிய எலிகள் பலவீனமானவற்றைத் தாக்கத் தொடங்கின. இது ஆண்களிடையே உளவியல் ரீதியான சரிவுக்கு வழிவகுத்தது. 


இதற்கிடையில், சில பெண் எலிகள் குட்டிகளைப் பராமரிப்பதை கைவிட்டன. மேலும் எந்த காரணமும் இல்லாமல் மற்ற பெண்களின் குட்டிகளைத் தாக்கத் தொடங்கின.


காலப்போக்கில், இளம் எலிகளிடையே இறப்பு விகிதம் அதிகரித்து, பிறப்பு விகிதம் பூஜ்ஜியமாகக் குறைந்தது.


ஏராளமான உணவு இருந்தபோதிலும்; ஒருபால் உறவு, காட்டுமிராண்டித்தனம், மற்ற எலிகளை கடித்து உண்ணுதல் போன்ற விசித்திரமான நடத்தைகளும் தோன்றின.


சோதனை தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கடைசி எலி 1973-ல் பிறந்தது. 


கைசேதம் என்னவென்றால் "யுனிவர்ஸ் 25" என்று அழைக்கப்பட்ட இந்த சோதனையின் முடிவில் அனைத்து எலிகளும் இறந்தன.


வினோதம் என்னவென்றால் இதே சோதனை 25 முறை மீண்டும் மீண்டும் செய்யப்பட்டது, ஒவ்வொரு முறையும் அதே முடிவு. அதே சரிவு. அதே அழிவு. 


கால்ஹவுன் கூறுகிறார்: சமூகங்களுக்கு - எலிகளோ மனிதர்களோ - முயற்சி அல்லது சவால் இல்லாமல் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டால்; அவற்றின் பண்புகள் நாசமாகி அழிவு நிச்சயம் ஏற்படும்.


1450 ஆண்டுகளாக அல்குர்ஆன் இதைத்தான் கூறிக்கொண்டு இருக்கிறது: 


‌"அல்லாஹ் தன் அடியார்கள் அனைவருக்கும் தாராளமாக வாழ்வாதாரத்தை வழங்கியிருந்தால், அவர்கள் பூமியில் அராஜகப் புயலை பரவச் செய்திருப்பார்கள். ஆகவே அவன் ஒரு கணக்குப்படி, தான் விரும்புகிற அளவில் இறக்கி வைக்கின்றான். திண்ணமாக, அவன் தன் அடிமைகள் பற்றி நன்கு புரிந்தவனாகவும், அவர்களைக் கவனிப்பவனாகவும் இருக்கின்றான்”. 

(42:27)


✍️ நூஹ் மஹ்ழரி