நீ மனிதனாகப் பிறந்தால் மூன்று விடயங்களை ஆள் வைத்துப் பண்ண முடியாது.
1. உனக்காக வேறு யாரையும் எனக்காக நீ சாப்பிட்டுக்கோ என்று சொல்ல முடியாது.
2. உனக்காக வேறு யாரையும் எனக்காக நீ கழிவகற்று ( பேன்று தள்ளு) என்று மற்றவர் ஒருவரைப் பொறுப்புச் சாட்ட முடியாது.
3. எனக்காக நீ இன்றிரவு தூங்கிக் கொள் என்று யாரையும் கேட்க முடியாது.
ஆனால், எங்களுக்காக நீங்கள் அவர்களை நிர்வாணமாக்குங்கள் என்று யாரும் எவரையும் கேட்க முடிகிற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
காணி எல்லைப் பிரிவினை, மதப் பிரிவினை, இனப் பிரிவினை பாலியல் பிரிவினை,நிறப் பாகுபாடு உட்பட்ட போலியாகக் கட்டமைக்கப்பட்ட பல புனிதப் பிரிவினைகளை உபயோகித்து வன்முறை எனும் வழிமுறை ஆளுகிற நவீன ஜனநாயக உலகில் நாம் வாழுகிறோம்.
1985 க்கு முன்னர் கிழக்கில் தமிழர் முஸ்லிம் முரண்பாட்டு மோதல்கள் இயற்கை வளப் பங்கீடு தொடர்பானதாக மட்டுமே இருந்தன.இவை இயற்கையான வளர்ச்சிப் போக்கை நிர்ணயிக்கும் தன்மையுடையதாக மாத்திரம் அமைந்திருந்தன.இங்கு உயிர்ப் பலிக்கோ மானபங்கப்படுத்தலுக்கோ இடமிருக்கவில்லை.சொற்பகால மன வருத்தங்களோடு முரண்கள் காணாமல் போயின.ஒரே மொழியைப் பேசிய மூன்று மதங்களைச் சேர்ந்த மனிதர்கள் மீண்டும் மீண்டும் கைகளைக் கோர்த்து பட்டினியை விரட்டி வாழ்ந்தனர்.
இதன் பின்னரான தமிழர் முஸ்லிம் மோதல்கள் கடந்த 33 வருடங்களாக செயற்கையானவையாக உருவாக்கப்பட்டன. அவை அரசியல் காரணங்களுக்கானதாக அமைந்திருந்தன. பல உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சக்திகளால் இம்மோதல்கள் அவர்களது வியூக வெற்றிக்காக உருவாக்கப்பட்டன. இம் மோதல்கள் பல்லாயிரம் உயிர்களைப் பலி கொண்டதோடு நூற்றாண்டுப் பகைமையாக வேரூன்றியுள்ளது.
இனத்துவ அரசியல், வன்முறை வடிவத்ததை எடுத்த பின்னர் பெரிய பேரினக் கட்சிகள் இரண்டும், கிழக்கில் தமிழ் முஸ்லிம் கலவரங்களைத் தூண்டி இரண்டு சிறுபான்மையினரும் ஒன்றாக அரசியல் செய்யும் வாய்ப்பை சிதறடித்தே வந்துள்ளன. இந்தச் செயல்பாட்டில் இஸ்ரேல் புலனாய்வின் பங்களிப்பு அளப்பெரியதாகும்.
மேற்குலகின் 2015 ஆம் ஆண்டைய நல்லாட்சி அரசமைக்கும் வியூகத்திற்கு பரிபூரணமாக இணங்கிப் போன மூன்று சிறுபான்மையினங்களையும் அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரித்தாள வேண்டிய அவசரம் சில சக்திகளுக்கு ஏற்பட்டுள்ளது.இந்த வியூகத்தை வகுத்திருக்கும் வலுவான சக்திகளின் வலையில் கிழக்குத் தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் சிக்காதிருக்க வேண்டும்.ஏற்கனவே சிக்கியவர்கள் வெளியேற வேண்டும்.
தம்பிகளே! தங்கைகளே!!
பரஸ்பரம் மன்னித்து பிழைகளை மறந்து கை கோர்த்து செயல்பட முன்வாருங்கள். தமிழ் முஸ்லிம் உறவை மேம்படுத்த அமைப்பாக்கம் பெறுவோம் வாருங்கள்.கிழக்கு வாழ் தமிழர்களும் முஸ்லிம்களுமே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக் கட்சியைத் தீர்மானிக்கும் வாக்காளர்களாகும். இதனை சரியாகக் கணக்கிட்டவர்கள் செய்யும் உத்திகளை அடையாளம் காண்போம், புத்தியைத் தீட்டுவோம், தமிழால் இணைவோம், தமிழால் அடைவோம், கிழக்கின் அபரிமிதமான வளங்களையும் கேந்திர முக்கியத்துவத்தையும் காப்பாற்றி நமது அடுத்த பரம்பரையின் கைகளில் சேர்ப்போம். அவர்கள் கடந்த பரம்பரையின் வேறுபாடுகளை வேரறுத்து இயற்கையை நேசித்து மனிதராக வாழ வழி சமைப்போம்!