السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 17 December 2025

மாணவனின் கற்றல் ஒழுக்கம்*. 02


 *மாணவனின் கற்றல் ஒழுக்கம்*.

••••••••••••••••••••••••••••••••

அரபு மூலம்: 

தஃலீமுல் முத அல்லிம்.


தமிழில்: 


மௌலவி, பாஸில், *ஏ. எல். பதுறுத்தீன்.* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி நக்ஷபந்தி. (2)|••••••••••••••••••••••••••••••••.  


அறிந்து கொள்! ஒவ்வொரு அறிவுத் துறையையும் கற்றுக்கொள்வது ஒவ்வொரு ஆண், பெண் மீதும் கடமையல்ல! தன் வாழ்க்கையில் அன்றாடம் எதிர் நோக்கும் அவசியமான அறிவுகளைக்கற்பது பர்ழு, உ+ மாக, தொழுகை அவர் மீது கடமையானால், தொழுகையின் பர்ழுகளை பூரணமாக நிறைவேற்றுவதில் எதிர்நோக்கும் அத்தனை சட்டங்களையும் அவர். கற்றுக்கொள்வது அவசியமாகும், 


 இவ்வாறு வாஜிபானவையை நிறைவேற்றுவதற்கு அவசியமானவையைக் கற்பதும் வாஜிபாகும், இன்னும், பர்ழானவையை நிறைவேற்ற எதுவெல்லாம் துணையாக இருக்கின்றதோ அவற்றை கற்பதும் பர்ழாகும், வாஜிபானவையை நிறைவேற்றுவதற்குத் துணையாக எதுவெல்லாம் உள்ளதோ அவற்றைக் கற்பதும் வாஜிபாகும்,  

 

நோன்பிலும் இதுதான் சட்டம், அவரிடம் பணம் இருந்தால், ஸக்காத்திலும் இதுதான் சட்டம், ஹஜ்ஜுக்குச்செல்வதற்கான வசதி வாய்ப்புக்கள் இருந்தால், ஹஜ்ஜிலும் இதுதான் சட்டம், வியாபாரியாக இருந்தால், வியாபாரத்திலும் இதுதான் சட்டம்.


 ஹளறத் இமாம் முஹம்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹஸன் ஷைபானி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடத்தில், " நீங்கள் ஸூஹ்து (துறவறம்) பற்றி ஏன் ஒரு நூல் எழுதவில்லை என்று ஒருவர் கேட்டதற்கு, "கொடுக்கல், வாங்கல்," பற்றி ஒரு நூல் எழுதியுள்ளேன், என்று விடை பகர்ந்தார்கள், 


வர்த்தகம், கொடுக்கல், வாங்கல், மற்றும் அன்றாட செயல்பாட்டிலும் , பணத்திலும் சந்தேகங்கள் , (ஷுப்ஹாத்) மக்றூஹுகள் உள்ளிட்டவைத்தவிர்ப்பவர்தான் துறவியாகும், 

இவற்றில் ஈடுபடும் ஒவ்வொருவரும் இதில் ஹறாம் நிகழாமல் பேணிக் கொள்ள வேண்டியது அவர் மீது கடமையாகும், 


இவ்வாறு கல்பின் நிலைகளான தவகுல், ஆல்லாஹுத்த ஆலா வில் சரணடைதல்( انابة) இறையச்சம்(خشية) இறை திருப்பொருத்தம்( رضا) உள்ளிட்டவை அனைத்து நிலைகளிலும் எதிர்நோக்கப்படுவதால் அவை தொடர்பான அறிவைப் பெற்றுக் கொள்வதும் அவசியமாகும், .


அறிவின் சிறப்பு எவருக்கும் மறைந்ததல்ல, அறிவு மனிதனின் தனித்துவமிக்க சிறப்பு, அறிவைத் தவிர்த்து ஏனைய பண்புகளான வீரம், துணிவு, வலிமை, ஈகை, இரக்கம் உள்ளிட்டவையில் மனிதனும் விலங்கும் கூட்டாகின்றன,


அல்லாஹுத்த ஆலா ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிறப்பை மலக்குகளுக்கு மத்தியில் அறிவின் மூலமாகவே தான் வெளியாக்கி ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சுஜூது செய்யுமாறு மலக்குகளுக்குக் கட்டளையிட்டான்,


  அல்லாஹுத்த ஆலாவின் திரு சன்னிதானத்தில் கண்ணியத்தையும் , நித்தியமான வெற்றியையும் அடைவதற்குக் காரணமான நன்மையையும், தக்வாவையும் அடைவதற்குரிய கருவியாக அறிவு இருப்பதனால்தான் அறிவின் தகுதி மேம்பட்டிருக்கின்றது.


 ஹளறத் முஹம்மத் இப்னு ஷைபானி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி கூறுகின்றாரகள்.


تَعَلَّمْ فَإِنَّ الْعِلْمَ زَيْنٌ لِأَهْلِهِ

فَضْلٌ وَعُنْوَانٌ لِكُلِّ الْمَحَامِدِ


وَكُنْ مُسْتَفِيدًا كُلَّ يَوْمٍ زِيَادَةً

مِنَ الْعِلْمِ، وَاسْبَحْ مِنْ بُحُورِ الْفَوَائِدِ


تَفَقَّهْ فَإِنَّ الْفِقْهَ أَفْضَلُ قَائِدٍ

لِلْبِرِّ وَالتَّقْوَى، وَأَعْدَلُ قَاصِدِ


هُوَ الْعِلْمُ الْهَادِي إِلَى سُنَنِ الْهُدَى

هُوَ الْحِصْنُ يُنْجِي مِنْ جَمِيعِ الشَّدَائِدِ


فَإِنَّ فَقِيهًا وَاحِدًا مُتَوَرِّعًا

أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنْ أَلْفِ عَابِدِ


1- கற்று விளங்குக; ஏனெனில் அறிவு அதன் உடையவருக்கு அழகும் மேன்மையும் கொடுக்கும்;

அது அனைத்து நற்குணங்களுக்கும் தலைப்பாகவும், பெருமைகளின் அடையாளமாகவும் விளங்குகிறது.”


2. “நாள்தோறும் அறிவில் ஒரு புதுமை, ஒரு அதிகரிப்பை அடைவதற்கு முயல்க;

நன்மைகளின் பெருங்கடலில் நீந்திக் கொண்டு பலன்களைச் சேர்த்துக் கொள்.”


3. ஃபிக்ஹுக்கலையைக் கற்றுக்கொள்;

ஏனெனில், அது நற்காரியத்திற்கும், தக்வாவிற்கும் சிறந்த வழிகாட்டியாகவும், நேர்மையான வழிகளில் நடத்துபவனாகவும் இருக்கிறது.”


4. ஃபிக்ஹு ஞானம் நேர்வழியைக்காட்டும் கலங்கரை விளக்கு!

எல்லா துன்பங்களிலிருந்தும் காத்து விடுவிக்கும் கோட்டை.”


5. “உண்மையோடும் தக்வாவோடும் இருக்கிற ஒரு ஃபகீஹ் (சட்ட அறிஞர்) 

ஷைத்தானுக்கு ஆயிரம் வணக்க சாலிகளைவிட வலிமையானவர்.


அந்தரங்க அறிவைப்போன்று ஈகை, கஞ்சத்தனம், கோழைத்தனம், துணிவு, செருக்கு, பணிவு, கற்பு , விரயம், சிக்கனம் உள்ளிட்ட ஒழுக்க வியல் சார்ந்த அறிவும் அவசியமாகும், செருக்கு, கஞ்சத்தனம், கோழைத்தனம், விரயம் உள்ளிட்டவை ஹறாமாகும், இந்த பண்புகளை விட்டும் தவிர்ந்து கொள்வதற்கு அதற்கு எதிரான பண்புகளை அறிவதன் மூலமே சாத்தியமாகும், ஆகவே, அவைபற்றிய அறிவு ஒவ்வொரு மனிதன் மீதும் பர்ழாகும்.


அதிமேதகு இமாம் ஷஹீத் நாஸிறுத்தீன் அபுல் காசிம் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி ஒழுக்க வியல் தொடர்பில் மிகச்சிறந்த ஒரு நூலை எழுதியிருக்கின்றார் கள்,ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் அதைப்படிக்க வேண்டும்.


 சில நேரங்களில் சம்பவிக்கும் விடயங்கள் பர்ழு கிபாயாவாகும், ஊரிலுள்ள சிலர் அதை நிறைவேற்றினால் ஏனையவர்களின் கடமை நீங்கிவிடும், ஊரில் எவரும் அதை நிறைவேற்றாவிட்டால் , ஊரிலுள்ள அனைவரும் பாவத்தில் பங்காளியாவார்கள், ஆகவே, ஊருக்கு அப்போது பொறுப்பு தாரியாக இருக்கும் பிரதிநி அந்தக் கடமையை நிறைவேற்றுமாறு மக்களுக்குக் கட்டளையிடுவதும், அதற்காக அவர்களை வற்புறுத்துவதும் வாஜிபாகும்.,  


சகல நிலைகளிலும் தன்மீது நிகழக்கூடியவையை அறிவது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான ஆகாரத்தைப் போன்று இருப்பதாகவும்,அவ்வப்போது நிகழுபவற்றை அறிவது , நோய் உள்ளபோது மட்டுமே அதன் தேவை இருக்கும்.ஔடதத்தைப் போன்று இருப்பதாகக் கூறப்படுகின்றது, 


 நட்சத்திரக் கலை- சோதிடக்கலை- நோயைப் போன்றது, அதைக் கற்பது ஹறாமாகும், அது தீங்கு செய்யும், இலாபம் தராது , அல்லாஹுத்த ஆலாவின் கழாக் கத்றை விட்டும் விரண்டோடுவது ஒருபோதும் சாத்தியமாகாது.


,அனைத்து வேளைகளிலும் ஆல்லாஹுத்த ஆலாவை திக்ரு செய்வது, மனக்கிளர்ச்சியோடு ,துஆக்கேட்பது, திருக்குர்ஆனை ஓதுவது, பலாய்களைத் தடுக்கக்கூடிய ஸதகாக்களைக்கொடுப்பது, இம்மையிலும், மறுமையிலும் பலாய்கள், ஆபத்துக்களிலிருந்து அவன் பாதுகாக்கப்படுவ தற்காக , மன்னிப்பையும், ஆரோக்கியத்தையும் கேட்பது, ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமாகும், ஏனெனில் , ஒருவருக்கு துஆக்கேட்பதற்கான தௌபீக் கிடைத்தால்,அவரின் துஆ அங்கீகரிக்கப்படாமல் விடப்படுவதில்லை, 


   விதியில் தீர்மானிக்கப்பட்ட சோதனை நடந்தே தீரும், அதில் மாற்றுக்கருத்துக் கிடையாது, ஆயினும், அதை அல்லாஹுத்த ஆலா இலகுவாக்கி வைப்பான், அவரின் துஆவின் பறக்கத்தால் அவருக்கு பொறுமையையும், நேரிய வழியில் உறுதியாக இருக்கும் இஸ்திகாமத்தையும் வழங்குவான்.  


கிப்லாவையும், மற்றும் தொழுகையின் நேரங்களையும் அறியக்கூடிய அளவு நட்சத்திரக் கலையைக் கற்பது ஆகுமானது. மருத்துவக்கலையைப் படிப்பது ஆகுமானது, காரணம், அது ஏனைய காரணங்களைப் போன்ற ஒரு காரணமாகும், அதனால் ஏனைய காரணங்களைக் கற்பது போன்று இதைக் கற்பதும் ஆகுமானதுதான், றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் தங்களுக்கு மருத்துவம் செய்திருக்கின்றார்கள், 


ஹளறத் இமாம் ஷாபி ஈ றஹ்மத்துள்ளாஹிஅலைஹி அவர்கள்பின்வருமாறு கூறியதாக நக்லு செய்யப்படுகின்றது, 


  அறிவுத்துறை இரண்டு,  


1- மார்க்கத்தை அறிவதற்கு பிக்ஹுக்கலை.

 

,2- உடலின் நிலைகளை அறியும் மருத்துவ அறிவு


, இவையல்லாத அறிவுத்துறைகள் சபை அலங்காரமாகும்.


, அறிவு என்பது ஒரு பண்பு, அது எவரிடம் இருக்கின்றதோ, அவர் மூலமாக அது வெளிப்படும். இதுதான் அறிவுக்கான விளக்கமாகும்


அறிவின் நுட்பங்களை அறிவது ஃபிக்ஹுக்கலையாகும்,

ஃபிக்ஹு என்பது தனக்கு நன்மை செய்யக்கூடியதையும், தீங்கு செய்யக்கூடியதையும் அறியக்கூடிய துறை என்று இமாமுல் அஃழம் அபூ ஹனீபா றஹ்மத்துள்ளாஹிஅலைஹி கூறுகின்றார்கள்,


  மேலும் , கூறுகின்றார்கள்,


அறிவுசெயல்படுவதற்குத்தான் ,! ( தவிர, வெறுமனே கற்பதற்கல்ல) மறுமைக்காக அதனைச்செய்யும்போது இவ்வுலகம் தவிர்க்கப்படுகின்றது.


ஆகவே, இவ்வுலகிலும், மறுமையிலும் தனக்கு பயனளிக்கக்கூடியதும், தீங்கு செய்யக்கூடியதுமான விடயங்களைப் பற்றி பாராமுகமாக இல்லாதிருப்பது மனிதனுக்கு அவசியமாகும், ஆகவே, தனக்கு நன்மையான தைச் செய்ய வேண்டும், தீமையானதை விட்டும் தூரமாகிவிடவேண்டும், அவனுடைய அறிவும், புத்தியும் அவனுக்கு எதிரான ஆதாரமாகிவிடக்கூடாது ! அவருக்கான தண்டனையும் இரட்டிப்பாகக்கூடாது, அல்லாஹ்வின் கோபம், அவனுடைய தண்டனை ஆகியவற்றை விட்டும் அல்லாஹுத்த ஆலா விடம் பாதுகாப்புத் தேடுகின்றோம்.


அறிவின் மேன்மைகள், சிறப்புக்கள் பற்றிய திருக்குர்ஆன் வசனங்கள், பிரபலமான ஹதீதுகள் ஏராளமாக இருக்கின்றன, நூல் நீண்டுவிடும் என்று அஞ்சி அவற்றைத் தவிர்த்துள்ளோம்.