*திருக்குர்ஆன் விளக்கம்*
••••••••••••••••••••••••••••••••
மௌலவி, பாஸில், *ஏ.எல். பதுறுத்தீன்.* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி..
•••••••••••••••••••••••••••••
தொடர் : 11
--------------
فِي قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ
.
2- 10. அவர்களின் மனதில் நோயுண்டு! அல்லாஹுத்த ஆலா அவர்களின் நோயை அதிகப்படுத்தியுள்ளான்,இன்னும், அவர்கள் பொய்யாக்கியதற்குப் பகரமாக அதிக துன்பம் தரும் வேதனை அவர்களுக்கு உண்டு!
•••••••••••••••••••••••••••••••••
தொடர்பு:
கடந்த திருவசனத்தில் முனாஃபிக்குகளின் கெட்ட செயல்களைப்பற்றிக் கூறப்பட்டன, இத் திருவசனத்தில் அவர்களின் மனதில் நயவஞ்சகத்தின் நோய் உண்டு! ஆகவேதான் இத்தீய வேலைகளைச் செய்கின்றனர் என்று செயலுக்கான காரணம் கூறப்படுகின்றது;
இங்கு "பிணி" என்று கூறப்படுவது நப்ஸின் பூணத்துவங்களை இல்லாமலாக்கச் செய்யக்கூடிய மடமை, கெட்ட அகீதா; பொறாமை; சினம்; குரோதம்; உலகத்தின் மோகம், பொய், அக்கிரமம் உள்ளிட்டவையை குறிக்கின்றது. இக்குறைகள் யாவும் றூஹின் மரணமான குப்ரு வரை சேர்க்கக் கூடியதாகும்.
மனதின் நோய் சில வகையில் உள்ளன.
1- கெட்ட அகீதா
2- குணங்களோடு தொடர்பானது
உ+மாக, பொறாமை, குரோதம் உள்ளிட்டவை
3-
செயல்களோடு தெடர்பானவை,
உ+மாக, கெட்ட எண்ணம்.
இத்திருவசனத்தில் கூறப்படும் நோய் என்பது முதல் வகையான தாகும், அவர்களின் உள்ளத்தில் கெட்ட அகீதாவும், குப்றும் ஏற்கனவே குடிகொண்டிருக்கின்றன, அது தினமும் அதிகரித்துச் செல்கின்றது, அல்லது இம்மூன்று நோய்களும் நோக்கமாக இருக்கலாம், அதாவது, முனாபிக்குகளின் உள்ளத்தில் கெட்ட அகீதா, கெட்ட குணங்கள், கெட்ட செயல்கள் இருக்கின்றன, அது மேலும் அதிகரித்துச் செல்கின்றன,
நோய் அதிகரிப்புதற்கான காரணங்கள்.
1- இஸ்லாத்தைப் பார்க்கும் போது அவர்களுக்குக் கவலை ஏற்படுகின்றது, அல்லாஹுத்த ஆலா இஸ்லாத்தைப் பரவச் செய்வதன் ஊடாக அவர்களின் கவலையும் அதிகரிக்கின்றது,
இவ்வாறே அவர்களின் மனங்களில் கெட்ட அகீதாவும், றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் விரோதமும் இருந்தன, உபதே சங்களும்,நல்லுரைகளும் அவர்களின் இதயத்தில் தாக்கம் செய்யாதது அல்லாஹுத்த ஆலா அவர்களின் உள்ளத்தில் முத்திரை குத்தி குப்றை வளர்த்து விட்டான் என்பதற்கான ஆதாரங்களாகும்.
அல்லது , ஷரீஅத் சட்டங்களும், வணக்க வழிபாடுகளும் அதிகரிக்க அதிகரிக்க அதன் மறுப்பும் அதிகரித்துக்கொண்டே இருந்தது, ஷரீஅத் சட்டங்களும் திருக்குர்ஆன் வசனங்களும் முஃமின்களின் ஈமானை வலுப்படுத்தியது , காஃபிர்களின் குப்றை வன்மப்படுத்தியது, மழை சாக்கடையில் விழும்போது அசிங்கத்தை அதிகப்படுத்தும், தூய பொருட்களில் படும்போது மேலும் மேலும் பரிசுத்தப் படுத்தும், இங்கும் இதுவே நடக்கின்றன,
" அவர்கள் பொய்யாக்கியதற்குப் பகரமாக அதிக துன்பம் தரும் வேதனை அவர்களுக்கு உண்டு"
என்பதில் வேதனை என்பது காபிர்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் இவர்களுக்கான வேதனை அதிகமாகும், ஏனெனில் , காபிர்கள் ஈமானின் இன்பத்தைச் சுவைக்க வில்லை, தொழுகையின் இன்பத்தைப்பற்றிய, ஈமான் என்றால் என்ன என்பது பற்றிய தகவலும் அவர்களுக்கு இல்லை,
ஆனால் , முனாபிக்குகள் ஈமானின் வாசல் வரை வந்தவர்கள், அதன் சுவையும் , இன்பமும் அவர்களின் உதடு வரை நெருங்கியும் அதன் கனியைச் சுவைக்க முடியவில்லை , அதாவது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற கவலை அவர்களை வாட்டவே செய்யும்,
காஃபிர்களுக்கு நரக வேதனை மட்டுமே கிடைக்கும், முனாபிக்குகளுக்கு வேதனையோடு சேர்த்து அவமானமும் கிடைக்கும், இதனால் அவர்களுக்கு வேதனை அதிகமாகும், மேலும், இவர்கள் பொய் கூறியதால் நரகத்தின் சூடு முதலில் படும் அடித்தட்டில் போடப்படுவார்கள், குப்றின் காரணத்தால் வேதனை கிடைக்கும், துரோகத்தின் காரணமாக சித்திரவதை கிடைக்கும்,
பொய் பல விதங்களில் உண்டு.
1- பேச்சில் பொய், இது எதார்த்தத்திற்கு மாறான பேச்சு
2- செயலில் பொய்,
சொல்லுக்கு மாறான செயல் , அதாவது சொல்வது ஒன்று செய்வது வேறு ஒன்று.
3- அகீதாவில் பொய்,
உ+மாக, படைத்தவன் ஒருவன்தான், சிலரின் அகீதா படைப்பாளன் பலர், இது பொய்யான அகீதாவாகும், ஒவ்வொரு பொய்யும் தீங்குதான், ஆனால் பொய்யான அகீதா படுமோசமான தீங்காகும், இந்த முனாபிக் அனைத்து வகையிலும் பொய்யனாகும்,
பொய்தான் அனைத்து பாவங்களுக்கும் வேர், எவராவது பொய் சொல்வதில்லை என்று உறுதி கொண்டால், இன்ஷாஅல்லாஹ் அனைத்து பாவங்களிலிருந்தும் தப்பித்துக்கொள்வார், சங்கையான நபிமார்கள் அனைத்து பாவங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட வர்கள், குறிப்பாக பொய்யிலிருந்து பாதுகாக்கப்பட்ட வர்கள், நபிமார்களில் எவராவது பொய் கூறினார்கள் என்று எவராவது கூறினால் அவன் மார்க்க மற்றவனாகும்.
ஹளறத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் தொடர்பாக மூன்று பொய்கள் கூறியதாக வருவதன் பொருள் அவர்கள் சிலேடையாக இரட்டை பொருள் படக்கூறினார்கள், இதற்கு வெளிப்படையான பொருள் கொள்ளக்கூடாது, ஓர் அக்கிரமக்காற அரசன் ஹளறத் ஸாறாவைப்பார்த்து யார் இவர்? என்று கேட்டான்,, மனைவி என்றால் கபளிகரம் செய்து கொள்வான், அதனால் இவர் எனது சகோதரி என்றார்கள், இவர்களின் எண்ணத்தில் மார்க்கத்தில் சகோதரியாகும், அவன் வெளிப்படையான பொருளை விளங்கி விடுதலை செய்தான்.
இவ்வாறு ஹளறத் அபூபக்கர் சித்தீக் றழியல்லாஹு அன்ஹு ஹிஜ்ரத் செல்லும் போது கூடவே இருப்பவர் யார்? என்று வழியில் ஒருவர் கேட்டார், இரகசியத்தை மறைப்பதற்காக "வழிகாட்டி" என் று பதில் கூறினார்கள், கேட்ட வர் பாதையைக் காட்டுபவர் என்று புரிந்து கொண்டார், இவ்வாறு சிலேடையாகப்பேசுவது ஆகுமானதுதான்.
பொய் சில இடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
1- கடுமையான நிர்பந்த நிலையில்.
2 இரண்டு முஸ்லிம்களைச் சமாதானம் செய்வதில்,
3 தனது மனைவியைத் திருப்திப் படுத்துவதற்காக
4- யுத்த களத்தில்.
தப்ஸீர்: றூஹூல்பயான். இத்திருவசனத்தின் சுருக்கம் வருமாறு:
முனாபிக்குகளின் இயல்பில் ஒருபோதும் ஆரோக்கியம் இருந்ததில்லை, பொய் என்ற நோய் அவர்களின் மனதில் சவாரி செய்கின்றது, உடலில் நோய் நீடிப்பது போன்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுடன் மக்கள் அதிகம் உறவு கொள்வதை காணும் போதெல்லாம் அவர்களின் மனதில் இந்த நோய் அதிகரிக்கின்றது,
உடலுக்கான நோயால் மரணம் வருவது போன்று , றூஹுக்கான நோயின் முடிவு துன்புறுத்தும் கொடிய வேதனையாக இருக்கின்றது,
ஸூபிஸ விளக்கம்:
மனதில் பொதுவாக நல்ல சிந்தனைகளும் வரும், கெட்ட சிந்தனைகளும் வரும், நல்ல சிந்தனைகள் றஹ்மானுடைய தரப்பில் வரும் இல்ஹாமாகும், இதற்கென்று ஒரு மலக் நியமிக்கப்பட்டிருப்பார், கெட்ட சிந்தனைகள் ஷைத்தானின் ஊசாட்டங்களால் வரும், எவருடைய மனதில் அல்லாஹுத்த ஆலாவின் அருள் உண்டோ அவருக்கு இல்ஹாம் அதிகமாகவும், வஸ்வாஸ்- ஊசலாட்டம்- குறைவாகவும் இருக்கும், எனினும், அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்ற நல்லடியார்கள் இந்த வஸ்வாஸ்களை விட்டும் முற்றிலுமாகப் பாதுகாக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் ,
எவருடைய மனதில் இல்ஹாம் குறைவாகவும், வஸ்வாஸ் அதிகமாகவும் உள்ளதோ அவர்களின் மனதில் நோயிருக்கும், இந்த நோய்க்கு ஏதாவது ஆத்மீக வைத்தியர் பரிகாரம் செய்வாராயின் ,நோய் சுகமாகும். தவறினால் நோய் வளர்ந்து மனதில் நல்ல சிந்தனைகள் வருவது முற்றிலுமாகத் தடைப்படும்,
சில வேளை இந்த நோய் முற்றி நல்ல செயல்கள் தீயதாகவும், தீய செயல்கள் நல்லதாகவும் புரியக் கூடிய சூழல் உருவாகும். மேலும், தீயவர்களை நண்பர்களாகவும், நல்லவர்களில் வெறுப்பு ஏற்படவும் செய்யும். இதுதான் மனதின்மரணமாகும்.
இதுபோன்று சில வேளைகளில் மனதில் மறைவான புறத்திலிருந்து மனிதனை தீயவையிலிருந்து தடுக்கும் சப்தங்கள் வரும், தீய காரியங்களின் செயல்பாட்டை இழிவாகக் கருத வைக்கும், அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு இந்த சப்தம் அதிக பலமானதாக இருக்கும், தீய வழிகளில் வரமாட்டாது,
பாவமான காரியங்களால் இந்த சப்தம் பலவீனமடைந்து கட்டம் கட்டமாகக் குறைந்து தடைபட்டு விடும்,பின்னர், தவறான சப்தம் வரத் தொடங்கும், பாவமான காரியங்களைச்செய்யும் போது மகிழ்ச்சியான சப்தம் வெளிப்படும், இது மனதின் மரணமாகும், இந்தத் திருவசனத்தில் இந்த நோயைப் பற்றியே கூறப்படுகின்றது,
எவ்வாறு சில ஔடதங்களும்,, சில இடங்களிலுள்ள நீரும், காற்றும் ஆரோக்கியத்தைக்கொடுக்கின்றதோ அவ்வாறே சில அமல்களும் , மற்றும் சில இடங்களின் நீரும், காற்றும் றூஹானியத்தான உற்சாகத்தைக் கொடுக்கின்றன,
இந்த அடிப்படையில்தான் வலிமார்களைச் சந்திப்பதற்கும்,, அவர்களின் புனித கப்றுகளைத்தரிசிப்பதற்கும் கட்டளையிடப் பட்டுள்ளது, அங்குள்ள நீரும், காற்றும் ஈமானுக்கு அதிகளவில் பிரயோசனம் கொடுக்கும்,
உடல் நோயைச் சுத்தப்படுத்த மருத்துவரைத் தேடிச் செல்வது போன்று மனநோயைச்சுகப்படுத்த ஆத்மீக வைத்தியரைத் தேடிச் செல்கின்றோம்,, இதில் என்ன தவறு வரப்போகின்றது,? மாசடைந்த சூழல் நோய்களை ஏற்படுத்துவது போன்று கெட்ட உறவுகள் மனதில் - ஈமானில்- நோயை ஏற்படுத்தும், நல்ல உறவுகள் ஈமானைப் பலப்படுத்தும்,, இறை நெருக்கத்தை ஏற்படுத்தும்,
ஆகவே , மனதின் நோயை சுத்தப்படுத்தும் ஆத்மீக வாதிகளான ஸூபியாக்களின் உறவில் தொடர்ந்து இருக்க வேண்டும். அப்போதுதான் நப்ஸு அம்மாறாவின் கெடுதியிலிருந்து தப்ப முடியும்.







