•••••••••••••••••••••••••••••••• (2)
மௌலவி, பாஸில், *ஏ எல். பதுறுத்தீன்*. ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி..
•••••••••••••••••••••••••••••••••
**ذلك الكتب لا ريب فيه*
*هدى للمتقين.*
2 : 2- உன்னதமான அந்த வேதத்தில் சந்தேகத்திற்குரிய எந்த இடமும் இல்லை, அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அதில் வழிகாட்டல் உண்டு!
---------------------------
தப்ஸீர் : விளக்கம்.
அந்த வேதம் என்பது,
முந்தைய நபிமார்களால் அவர்களின் வேதங்களில் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட முத்திரை நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக அல்லாஹுவால் லௌஹுல் மஹ்பூழ் ஏட்டில் பாதுகாக்கப்பட்டுள்ள வேதத்தைக் குறிக்கும்,
அல்லது , றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு ஏற்கனவே இறங்கிய அத்தியாயங்களும், இதன்பின் இறங்க இருக்கும் லௌஹுல் மஹ்பூழிலிருக்கும் அத்தியாயங்களையும் குறிக்கும்,
இதில் சந்தேகத்திற்கான எந்த இடமும் இல்லை என்பது, அதில் சொல்லப்படும் சட்டங்கள்,நுட்பங்கள், சரித்திரங்கள், எச்சரிக்கைகள், சுப செய்திகள் உள்ளிட்ட யாவும் உண்மை!, இவற்றில் எதிலும் எவ்வித சந்தேகமும் கிடையாது என்பதைக் குறிக்கும்.
ஹிதாயத்திற்கான விளக்கம் சூரத்துல் பாதிஹாவின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
தக்வா மூன்று படித்தரங்களைக்கொண்டுள்ளது.
1- நிரந்தரமான வேதனையிலிருந்து தவிர்ந்திருப்பது,
இந்த வகையில் அனைத்து முஸ்லிம்களும் முத்தகீகளாகும்.
2- பொதுவான பாவங்களை விட்டும் தவிர்த்திருப்பது,
பொதுவாக தக்வாவுக்கு இப்பொருளையே கூறப்படுகின்றது.
3- ஹக்குத்த ஆலாவின் நினைவைத் தடுக்கக்கூடிய அனைத்தையும் விட்டும் தவிர்த்திருப்பது,
அல்லாஹ்வுடைய வலிமார்கள், நபிமார்கள் இந்த வகையான முத்தகிகளாகும்.
இறுதியான இந்த அதிஉயர் படி நிலைக்கு இரு விதங்கள் உண்டு.
1- ஹளறத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப்போன்று உலகியல் தொடர்புகளை விட்டும் முற்றிலுமாக ஒதுங்கி இருப்பது,
2- உலகத்தின் தொடர்புகளில்ஈடுபட்டுக்கொண்டு அதில் மனம் சாயாமல் முழுமையாக அல்லாஹ்வின் நினைவில் மூழ்கியிருப்பது,
ஹளறத் சுலைமான் நபி , ஹளறத் யூஸூப் நபி அலைஹிமஸ்ஸலாம் போன்றவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள், மேலும், கௌதுல் அஃழம் றழியல்லாஹு அன்ஹு அவர்களினதும், ஏனைய ஆரிபீன்களான ஷைகுமார்களின் தரீக்காவும் இந்த வகையைச்சேர்ந்ததாகும்,
,உடல் மக்களோடு உறவாடும், மனம் அல்லாஹ்வின் நினைவில் மூழ்கியிருக்கும்.
திருக்குர்ஆனில் "தக்வா" என்ற சொல் பின்வரும் பொருள்களில் வருகின்றது.
1-ஈமான்
2- தவ்பா
3- வழிப்படுதல்
4- பாவத்தைத் தவிர்த்தல்..
5- இக்லாஸ் கலப்பற்ற எண்ணம்
6- இறையச்சம்.
அச்சம் இருவிதங்களால் ஏற்படும்.
1- தீங்கு செய்யக்கூடிய வையினால் தனக்கு தீங்கு ஏற்படும் என்று நம்பும் போது ஏற்படும் அச்சம்.
2- அரசர், அதிகாரி உள்ளிட்டோரின்ஆற்றல் , அதிகாரம் உள்ளிட்டவையால் ஏற்படும் அச்சம்,
தீங்கு செய்யக்கூடியதின் அச்சத்தால் வெறுப்பும் விரண்டோடுவதும் நிகழும், ஆற்றல், அதிகாரத்தின் அச்சத்தால் கீழ்படிதல் நிகழும், றப்பின் அச்சம் இரண்டாவது வகையில் உள்ளதாகும்.
ஆற்றலின் அச்சமும் இருவகைப்படும்.
1- நம்பிக்கையில்லாத அச்சம்.
2- நம்பிக்கையான அச்சம்.
நம்பிக்கையில்லாத அச்சம் பாவத்தின் பக்கம் இழுக்கும், நம்பிக்கையுள்ள அச்சம் பாவத்திலிருந்து பாதுகாக்கும். றப்புத்த ஆலா வின் அச்சம் இரண்டாவது வகையில் இருக்க வேண்டும்.
வழிகாட்டல்:
ஒவ்வொரு தரத்திலிருக்கும் தக்வாதாரிக்கும் அவர்களின் தகுதிக்குத் தக்க விதத்தில் திருக்குர்ஆன் வழிகாட்டும், இந்த வகையில்
ஷரீஅத்தில் "தக்வா" என்பது,
மறுமையில் நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடிய காரியங்களைத் தவிர்ப்பதைக் குறிக்கும்.
"தக்வா" மூன்று விதத்தில் வழி காட்டுகின்றது,
1- பாமரர்களுக்கு ஈமான் இஸ்லாத்திற்கு வழிகாட்டுகின்றது.
2- விஷேஷமானவர்களுக்கு உறுதிப்பாட்டிற்கும், இஹ்ஸானுக்கும் வழிகாட்டுகின்றது,
3- அதி விஷேசமானவர்களுக்கு அல்லாஹ்வுக்கும், அவர்களுக்குமிடையிலான திரையை அகற்றி அல்லாஹ்வின் பேரழகைக் காட்சி காண்பதற்கு வழிகாட்டுகிறது.
"முத்தகி"' என்பவர், ஆலமுல் அர்வாஹில் (ஆத்மீக உலகில்) அல்லாஹ்விடம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுபவர் என்று ஸூபியாக்கள் கூறுகின்றனர், இதற்கான அடையாளம், சோதனையில் பொறுமையும், நிஃமத்தில் நன்றி பாராட்டலும்; விதியில் பொருத்தமும, குர்ஆனுக்கு முன்னால் தலை சாய்ப்பதுமாயிருக்கும்.
திருக்குர்ஆன் முஸ்லிம் ,காபீர், முனாபிக் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுவாக வழிகாட்டும், ஆனால், முத்தகியைக் கூட்டி வந்து நேரிய வழியில் நிறுத்தி செல்லுமிடத்திற்குத் துணையாக கூடவே வந்து சேர்த்து வைக்கும்.
"ஹிதாயத்", என்பது சேர வேண்டிய இடத்தில் சேர்த்து வைப்பது, அதாவது, திருக்குர்ஆன் தக்வாதாரியை மறுமையில் சொர்க்கத்தில் சேர்த்து வைக்கும், திருக்குர்ஆன் ஒளியாகி தக்வா தாரிக்கு முன்னால் செல்லும், திருக்குர்ஆன் முஃமின்களுக்கும், நல்லமல்களுக்கும் வழிகாட்டும்.







