நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு முப்பத்திநான்கு மிஃறாஜ்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் திருமேனியோடு நடந்த மிஃறாஜ் ஒன்றுதான். இது விழிப்பில் நடந்தது.ஸித்ரத்துல் முன்தஹா தாண்டி அர்ஷு, குர்ஷியும் தாண்டிச் சென்று புறக்கண்ணால் அல்லாஹ்வை தரிசித்து, இதில் தொழுகையை பரிசாக வாங்கி வந்தார்கள்.
இதுதவிர ஏனைய மிஃறாஜுகள் றூஹின் மூலம் நடந்தது. இவ்வாறு இமாம் அப்துல் வஹாப் ஷஃறானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தங்களது யவாகிதில் வரைந்துள்ளார்கள்.
விழிப்பில் நடந்த இந்த மிஃறாஜ் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முஃஜிஸாத்துக்களில் மிகவும் முக்கியமானதும் பூரணமானதுமாகும்.
இந்த மிஃறாஜ் சரியான சொல்லின்படி ஹிஜ்ரத்திற்கு ஒன்னரை வருடத்திற்கு முன் றஜப் 27 திங்கள் கிழமையில் நடந்தது. மக்களின் நடைமுறையும் இத்தினத்தில்தான் உண்டு. இவ்வாறு தப்ஸீர் றூஹுல் பயானில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரவில் சிறப்பானது றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த இரவாகும்.அடுத்து லைலத்துல் கத்று இரவு, மிஃறாஜ் இரவு, அரபா இரவு, ஜும்ஆ இரவு, பராஅத் இரவு என்று வரிசைப்படுத்தப் பட்டுள்ளது. நமது நிலையில்தான் இந்தப் பட்டியல் பொருந்தும்.
றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் விடயத்தில் மிகவும் சிறப்பான இரவு புறக்கண்ணால் அல்லாஹ்வைத் தரிசித்த இரவான மிஃறாஜ் இரவுதான் சிறப்பானதாகும். இவ்வாறு பாஜுரி என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
இந்த இரவில் குறிப்பாக சில அமல்கள் செய்யப்படுகின்றன. அவற்றுள் “மிஃறாஜ் தொழுகை“ என்பது முக்கியமாகும்.
றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்,
மிஃறாஜ் இரவில் செய்யப்படும் அமல்களுக்கு நூறு வருட அமல்களின் நற்கூலி கிட்டும். அதனால் ஒருவர் இந்த இரவில் இரண்டு, இரண்டு றகாஅத்துக்களாக பன்னிரண்டு றகாஅத் தொழ வேண்டும். ஒவ்வொரு முதல் றகாஅத்திலும் ஸூறா பாத்திஹாவுக்குப் பின் ஏதாவது ஒரு ஸூறா ஓத வேண்டும்.
தொழுது முடிந்ததும் “ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்“ என்று நூறு முறையும், பின் அஸ்தஃபிறுல்லாஹ் என்று நூறு விடுத்தமும், பின் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் பேரில் ஸலவாத்தும் கூறிய பின், இம்மை மறுமை தொடர்பான தேவைகளை அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்.
பின், நோன்பு நோற்க வேண்டும். பாவமான விடயத்தில் இவர் கேட்ட துஆக்களைத் தவிர ஏனைய துஆக்களை அல்லாஹ் நிச்சயம் அங்கீகரிப்பான் என்று திருநபியவர்கள் திருவாய் மலர்ந்தருளியதாக ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் ஙஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி இஹ்யா உலூமித்தீனில் குறிப்பிடுகின்றார்கள்.
றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக மர்பூஆன ஹதீதில் வருகின்றது.
யாராவது ஒருவர் றஜப் 27வது இரவன்று இரண்டு றகாஅத் தொழுது அதில் ஒவ்வொரு றகாஅத்திலும் ஸுறா பாத்திஹாவுக்குப் பின் குல்ஹுவல்லாஹு அஹத் ஸூறாவை இருபது விடுத்தம் ஓதி, தொழுது முடித்தபின் “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க பிமுஷாஹதத்தி அஸ்றாறில் முஹிப்பீன வபில் கல்வத்தில்லத்தி கஸ்ஸஸ்த பிஹா ஸய்யிதல் முர்ஸலீன, ஹீன ஸறைத்த பிஹீ லைலதுஸ்ஸாபிஈ வல்இஷ்ரீன் அன்தர்ஹம கல்பில் ஹஸீனி வதுஜுப் தஃவத்தி யாஅக்றமல் அக்றமீன்“ என்று துஆக் கேட்டால், அல்லாஹுத்தஆலா அவர்களின் துஆக்களை கபூல் செய்வான். இவர்கள் வேண்டுதலுக்கு றஹ்மத் செய்வான். கல்புகள் மரணிக்கும் வேளையில் இவர்களின் கல்புகளை ஹயாத்தாக்குவான்.இவ்வாறு நுஸ்ஹத் என்ற நூலில் பதிவாகியுள்ளது.
சிறப்பான இந்த இரவின் மகத்துவம் எண்ணில் அடங்காதவையாகும். இதில் வலுவான நிகழ்வு இதுதான்.
புனித மக்கா, மதீனாவில் றஜப் மாதம் 25வது இரவு முதல், 27வது இரவுவரை மூன்று இரவுகளும் புனித மக்கா மதீனாவில் உள்ள வீடுகள், பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், மக்தபுகள் யாவற்றிலும் புனித மீலாது ஷரீபுக்கு அலங்கரிப்பது போன்று அலங்காரம் செய்து, மௌலிது ஓதுவது போன்று புனித மிஃறாஜுக்கும் அலங்காரம் செய்து மௌலிது ஓதி சந்தோஷமாக கொண்டாடப்படும்.
27வது இரவில் புனித கஃபாவையும் சங்கைமிகு ரௌலாவையும் திறந்து விடப்படும். மஸ்ஜிதுல் ஹறாம்,மஸ்ஜிதுன் நபவி, ஆகிய இரு ஹறம்களையும் ஸுல்தான் தரப்பில் அலங்கரிக்கப்படும். பின் அரசர்கள் உலமாக்கள், ஸாலிஹீன்கள் மற்றும் யாவரும் ஒன்று கூடி மிஃறாஜ் சரித்திரம் பாராயணம் செய்யப்படும்.பின் ஓதியவர்களுக்கு ஸுல்தான் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்திய பின், கூடியிருந்தோர் யாவருக்கும் இனிப்புப் போன்றவைகள் வழங்கப்படும். இவ்வாறு மிஃறாஜ் இரவைக் கொண்டாடுவது ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும். இது யாவரும் அறிந்த விடயமே!
மிஃறாஜ் இரவில் நமது நாட்டிலும் மற்றும் உலகின் எல்லாப் பாகங்களிலும் மிஃறாஜ் மௌலிது ஓதி வருகின்றனர். இது மிக நல்ல விடயம் என்று கருதியதால் மிஃறாஜ் சரித்திரம் எழுதப்பட்ட மௌலிதுகளில் மிகச் சரியான ஆதாரபூர்வமான மௌலிதாக இமாம் பர்ஸன்ஜி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய மௌலித்.
மிஃறாஜ் இரவன்று மௌலிது ஓதி சந்தோஷம் கொண்டாடுதல் முஸ்தஹப்பு என்று மௌலானா,அல்அல்லாமா, ஷெய்குனா, அல்பஹ்ஹாமா, அம்மாப் பட்டணம் ஷெய்கு யூஸுப் லெப்பை ஆலிம்,பகீஹ், ஸுபி, அல்ஆரிபுபில்லாஹ் அவர்களின் சீடராகிய ஹளரத் மௌலவி முஹம்மது தமீம் அல்ஆலிமுல் பாழில் மதராஸிய்யி அவர்களால் பத்வா மார்க்கத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பத்வாவை மதராஸி (சென்னையி)லுள்ள கனம் பொருந்திய மாபெரும் உலமாக்களும் சரி கண்டு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டுள்ளனர்.
ஆதாரம் : துஹ்பத்துல் அஹ்பாப், பதிப்பு (ஹிஜ்ரி 1322) பக்கம் 228 - 231
கேள்வி : மிஃறாஜ் அன்று நோன்பு நோற்பதற்கு ஆதாரம் உண்டா? ஆதாரத்துடன் பதில் தருக!
பதில் : உண்டு, அபான் இப்னு ஙயாஸ் என்பவர் அனஸ் ரழியல்லாஹு அன்ஹுவைத் தொட்டுப் பின்வரும் ஹதீதை அறிவிக்கிறார்கள்.
றஜபில் ஓர் இரவுண்டு. அவ்விரவில் நல்லமல் புரிவோருக்கு நூறு ஆண்டுகள் நல்லமல்கள் புரிந்த நற்கூலி கிடைக்கும். அது றஜப் மாதத்தின் 27 ஆவது இரவாகும்.
யாராவது இவ்விரவில் 12 ரக்அத்துகள் தொழுதால் ஒவ்வொரு றகாஅத்திலும் ஸூறதுல் பாதிஹாவும்,வேறு ஏதாவது ஸூறத்தும் ஓத வேண்டும். ஒவ்வொரு இரண்டு றக்அத்துகளும் தொழுத பின் ஸுப்ஹானல்லாஹி… (மூன்றாம் கலிமாவை) 100 விடுத்தமும், இஸ்திபஃபார் 100 விடுத்தமும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் பேரில் 100 ஸலவாத்தும், ஓதிய பின் இம்மை,மறுமை பற்றி தேவையானளவு துஆக் கேட்க வேண்டும். பின் அன்று பகலில் நோன்பு நோற்க வேண்டும்.அவர்களது துஆக்கள் கபூலாகும்.
ஆதாரம் : பைஹகி
தரத்தில் இந்த ஹதீத் ளயீபாகும். சுன்னத்தான அமல்களுக்கு ளயீபான ஹதீதுகளை ஆதாரமாகக் கொள்ள முடியும் என்பது இஜ்மாவாகும்.
நூல் : பதாவா றிஸ்வியா, பாகம் 4, பக்கம் 657-658
வீடியோ பயான்