السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 2 July 2012

சிந்திக்கத் தூண்டும் மார்க்கம் இஸ்லாம்



உலகில் வாழும் மனிதர்கள் பல்வேறு மதங்களை மார்க்கங்களைப் பின்பற்றி வருகின்றனர். அவர்கள் பின்பற்றும் அம்மதங்களின் அடிப்படை வேதங்களாகவோ புராணங்களாகவோ மனிதர்கள் சிலரின் வழிகாட்டுதல்களின் தொகுப்பாகவோ எல்லாமே இயற்கையாகவே நிகழ்ந்து இயற்கையின் நியதிப் படி முடிவுறுகின்றன என்ற சித்தாந்தத்தைக் கொண்டதாகவோ இருக்கின்றன. நம்மைப் படைத்த இறைவன் ஒருவன்தான் என்பதில் பல்வேறு மதத்தார் ஒரே கருத்தில் இருந்தாலும் கூட அவர்கள் சார்ந்திருக்கும் வேதங்கள் புராணங்கள் இக்கருத்தை நன்றாக வலியுறுத்தியும் கூட வழிநடாத்திச் செல்லும் மதகுருமார்கள் பண்டிதர்கள் முன்னோடிகள் மார்க்க அறிஞர்கள் செய்யும் போதனைகளால் அம்மார்க்கத்தைப் பின்பற்றக்கூடிய மக்கள் அவர்கள் சார்ந்துள்ள சமயங்களின் அடிப்படையையே மறந்து புதிய மாற்றமான புகுத்தப்பட்ட கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர். இதனால் ஓரிறைக் கொள்கை மறைந்து ஒன்றுக்கு மேற்பட்ட பல்கிப் பெருகிய பல தெய்வங்களின் வருகையும் அத்தெய்வங்களின் கற்பனை செய்யப்பட்ட உருவகங்களுக்கு பூஜை புனஸ்காரங்கள் வழிபாடுகள் என்ற பெயரால் புனையப்பட்டவைகள் நடைமுறையில் இருப்பதையும் நாம் காண்கிறோம். நடைமுறை வணக்க வழிபாடுகள் எவற்றுக்குமே (ஓரிறைக் கொள்கைக்கு முரணான) எந்த அடிப்படையோ அல்லது ஆதாரங்களோ கிடையாது. ஆகவே சிந்தித்து அம்மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லாமல் ஆகிவிடுகின்றது. இந்நிலையில் படைத்த வல்லோன் அல்லாஹ் பொருந்திக்கொண்ட ஏற்றுக் கொண்ட மார்க்கம் என அருள்மறையில் கூறுகையில் இப்படிக்கூறுகிறான்:

நிச்சயமாக தீனுல் இஸ்லாம்தான் அல்லாஹ்விடத்தில் (எற்றுக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். (3:19)

மற்றொரு வசனத்தில்,


இன்னும் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எவரேனும் தேடினால் அப்போது அவரிடமிருந்து (அம்மார்க்கம்) அங்கீகரிக்கப் படவே மாட்டாது. மேலும் மறுமையில் அவர் நஷ்டமடைந்தோரில் இருப்பார். (3:85).

மேற்கூறிய வசனங்கள் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளும் மார்க்கம் இஸ்லாம் மட்டும்தான் என்பதையும் இஸ்லாம் அல்லாத பிற மதங்கள் சமயங்கள் பகுத்தறிவு சித்தாந்தங்கள் பெரும்பான்மை சமுதாயத்தாரால் பின்பற்றப்பட்ட போதிலும் அவைகள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப் படாதவைகள் என்பதற்கு அருள் மறை கூறும் அழகிய சான்றுகளாகும்.
சிந்திக்கும் திறன்: 
எதையும் சிந்தித்துச் செயலாற்றும் மனிதன் தான் சார்ந்திருக்கும் ஆன்மீக நெறிவழி சரிதானா? எனச் சிந்திப்பது மிக அரிது. பிற கால்நடைகள் விலங்குகளுக்கு வழங்கப் படாத விசேஷ அறிவு தனக்கு வழங்கப்பட்டிருக்கிறது எனத் தம்பட்டமடிக்கும் மனிதன் தன் ஆறாவது அறிவான பகுத்தறிவை தான் சார்ந்திருக்கும் மதம் சரியானதா? அறிவுப்பூர்வமானதா? ஆதாரப்பூர்வமானதா? அடிப்படை என்ன? அதன்படி நடந்தால் இம்மை மறுமை நலனைத் தருமா? நாம் ஏன் இந்த மதத்தைப் பின்பற்றுகிறோம்? எனச் சிந்திப்பதற்குப் பயன்படுத்துவதேயில்லை. கண்ணால் பார்த்து உணரும் பார்வையறிவு, காதால் கேட்டு உணரும் கேள்வியறிவு, நாவால் சுவைத்துணரும் ருசியறிவு, தோலினால் உணரும் தொடு அறிவு, மூக்கினால் நுகர்ந்து அறியக்கூடிய நுகர் அறிவு இப்படி அல்லாஹ்வின் படைப்பினங்கள் அனைத்துக்கும் இருக்கக்கூடிய ஐந்தறிவினைப் பட்டியல் போட்டு தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பகுத்தறிவைப் பற்றிப் பீற்றும் போது நல்லது எது? கெட்டது எது? எனத் தேர்வு செய்யும் திறனை சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதாக அங்கலாய்க்கிறான். தனக்குத் தேவையான உலகாசை சம்மந்தமானவற்றைத் தேர்வு செய்வதில் மனிதன் காட்டும் அக்கறையும் அபிலாஷையும் ஆன்மீகத்தில் துளியளவும் காட்டுவதில்லை. அவன் சார்ந்திருக்கும் மதத்தில் ஒன்று, ஆகும் என்றோ ஆகாது என்றோ தீர்மானிக்கும் முழு அதிகாரமும் மதகுருமார்கள் கையில் இருந்தது என்பதற்கு கீழ் காணும் அருள்மறை வசனமும் அதன் விளக்கவுரையாகிய நபிமொழியும் சான்றுகளாகும்.


யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! (சத்தியத்தை விட்டும் இவர்கள்) எங்கே திருப்பப்படுகிறார்கள்? அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன். (9:30-31).

அருள்மறையின் இவ்வசனங்கள் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்ட அதீபின் ஹாத்திம் (ரலி) அவர்களுக்கு தங்கள் பாதிரிகள் மதகுருக்கள் ஆகுமாக்கி வைத்ததை ஏற்றும் அவர்கள் தடுத்ததை விலக்கியும் வந்த சமுதாயத்தாரின் இச்செயலையே அல்வாஹ் அவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும் தெய்வங்களாக்கிக் கொண்டனர் எனக் கூறுகிறான் என்று விளக்கமளித்தார்கள் என்பதை நபிமொழிகளில் காணமுடிகிறது. ஆகவே சமுதாயம் ஆன்மீகத் துறையில் சிந்தித்து செயல்படவில்லை என்பது நன்கு விளங்குகிறது.


சிந்திக்கத் தடை:- 
தான் சார்ந்திருக்கும் மதம் கூறும் கோட்பாடுகள் சரியா?. அறிவுப்பூர்வமானவையா? ஏன ஆய்வு செய்தார் ஒரு கிறிஸ்தவ விஞ்ஞானி. அவருடைய அறிவியல் ஆய்வின் தீர்வு உலகம் உருண்ட வடிவத்தில் இருப்பதாகவும் அது சுழல்வதால் இரவு பகல் மாறி மாறி வருகிறது எனக் கூறினார். அவர்தான் கலீலியோ. கிறிஸ்தவ மதச்சித்தாந்தமோ உலகம் தட்டையானது எனக்கூறியது. மதச்சித்தாந்தத்துக்கு மாற்றமாக ஆய்வின் தீர்வை அறிவித்த கலீலியோ மதகுருமார்களால் பாதிரிகளால் கண்டிக்கப்பட்டார். இறுதியில் கல்லெறிந்து கொல்லும் தண்டனைக்குள்ளாகி உயிர் நீத்தார்.


இந்து மதத்தார் போற்றும் பேணும் சட்ட நூல்களில் ஒன்றாகிய மனுஸ்மிருதி மார்க்க ஞானம் (வேதத்தைப் பற்றிய கல்வி) ஒருசாரார்க்கு மட்டுமே சொந்தம். அவர்களைத் தவிர வேறு சாரார் எவரும் கற்ககூடாது எனத்தடை விதிப்பதுடன் பிறப்பால் தாழ்ந்த பிரிவினர் வேத வசனங்களை காதுகொடுத்துக் கேட்கவும் கூடாது என்று பிரகடனம் செய்கிறது. மீறி கேட்பார்களேயானால் அவர்களின் காதுகளில் ஈயத்தைப் பழுக்க காய்ச்சி ஊற்ற வேண்டுமென்ற தண்டனையை நிறைவேற்ற உத்திரவிடுகிறது. இப்படி கல்வியறிவைப்பெற கற்றபடி செயல்பட சிந்திக்க செயலாற்ற என எல்லா நிலைகளின் வாசல்களையும் அடைத்து ஒருசாரார் கூறும் கருத்துக்களே உன்னதமானவை. மறுக்கமுடியாதவை. பின்பற்றத்தக்கவை என பிதற்றும் பித்தலாட்டங்களைப் பார்க்கிறோம். சிந்திக்கத் தடைவிதிக்கும் இம்மதங்கள் மனித சமுதாயத்தாரில் பெரும்பாலும் பின்பற்றப் பட்டு வந்தாலுங்கூட சிந்திக்கத்தூண்டும் அறிவுப்பூர்வமான ஆதாரங்களைப் பெற்ற அல்லாஹ்வின் அங்கீகாரம் கிட்டிய மார்க்கமான இஸ்லாம் சிந்திக்கத் தூண்டுகிறதா? என ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.


சிந்திக்கத் தூண்டுகிறது:- 
இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகிய குர்ஆன் அல்லாஹ்வினால் அருளப்பட்டது. அருள்மறை சிந்திக்கக்கூறி உலகோரை அழைக்கும் வசனங்கள் ஏராளம். ஏராளம். ஓரிரு சான்றுகளைக் காண்போம்.

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (47:24)

நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (54:17)

இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.) (25:73).


மேற்கூறிய அருள்மறை வசனங்கள் சிந்திக்கத் தூண்டுவதுடன் ஒரு படிப்பினையையும் நமக்குக் கற்றுத்தருகிறது. அதாவது எந்த ஒரு கருத்தும் எவரால் சொல்லப்பட்டாலும் அக்கருத்து சரியானதுதானா? என்பதை சிந்தித்து தீர்மானிக்க கூறுகிறது. அருள்மறை வசனங்கள் அல்லாஹ்வினால் அருளப்பட்டதாக இருந்தாலும் அதனையும் சிந்தித்துச் செயல்படக்கூறும் வியப்பை (25:73)ப் பார்த்தோம். சொல்பவர் யார்? என்று பார்க்காமல் சொல்லும் கருத்து சரிதானா? என்ற உயரிய சித்தாந்தம் இங்கு நிலைநாட்டப் படுகின்றது.
முரண்பாடற்றது:- 
அருள்மறை வேதங்கள் மனித வாக்குகள் அல்ல. படைத்த இரட்சகனின் பரிசுத்தக் கருத்துக்கள் என்பதற்கும் மனிதர்களின் உளறலைப்போல் முன்னுக்குப் பின் முரணாகத் திகழாமல் முரண்பாடற்று விளங்குவதும் அருள்மறைக் குர்ஆன் அல்லாஹ்வினால் தான் அருளப்பட்டது என்பதற்கு அருமையான சான்றுகளாகும். அல்லாஹ்வே வேத நூலாகிய அருள்மறைக் குர்ஆனை அருளி அதனைப் பிற வேதங்கள் மனிதக் கரங்களால் மனோஇச்சைக்கு ஆளாகி மாசுபடுத்தப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட்டதைப் போல எவிவித மாற்றங்களுக்கும் ஆளாகாமல் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறான் என்பதை வல்லோன் அல்லாஹ் வான்மறையில் கூறுவதைப் பாருங்கள்:

அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (4:82).

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.(15:9).


பிற வேதங்கள் அது அருளப்பட்ட மூல மொழியில் எவ்வாறு அருளப்பட்டதோ அவ்வாறு இல்லாமல் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு வேதவசனங்களை நீக்கியும் மனித கருத்துக்களைச் சேர்த்து இடைச்செருகல் செய்தும் கூட்டியும் குறைத்தும் மாசுபடுத்தப்பட்டு முரண்பாடுகளின் சிகரத்தில் இருப்பதை நம்மால் காணமுடியும். ஏனவே வல்ல அல்லாஹ் அருள்மறைக் குர்ஆனை பிற வேதங்களை உண்மைப்படுத்தக் கூடியதாக அருளினான்.

(நபியே) முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை அவன்தான் (அல்லாஹ்) உம்மீது இறக்கியருளினான். இவ்வேதம் இதற்கு முன்னுள்ள (வேதங்கள்) அனைத்தையும் உண்மைப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. (3:3).
இஸ்லாத்தில் கல்வியின் மகிமை :


மனிதனின் சிந்தனை சக்திக்கு உறுதுணையாய் அமைவது கல்வியறிவே. இக்கல்வியறிவு இஸ்லாத்தில் முக்கிய கடமைகளில் ஒன்றினைப் போல் மிக வலியுறுத்தப் படுகின்றது. அல்லாஹ் முதன்முதலில் மனிதனைப் படைத்துவிட்டு அவனுக்கு கல்வியறிவைப் புகட்டியதை அருள்மறை கூறுவதைக் காணுங்கள்.

(ஆதமைப் படைத்து) ஆதமுக்கு (பொருட்களின்) பெயர்கள் அனைத்தையும் கற்றுக்கொடுத்து பின்னர் அவற்றை வானவர்களிடம் எடுத்துக்காட்டி அவர்களிடம் நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்குத் தெரிவியுங்கள் என (அல்லாஹ்) கூறினான். (2:31). அல்லாஹ் ஆதமுக்கு பொருட்களின் பெயரைக் கற்றுக் கொடுத்துவிட்டு மலக்குகள் மூலம் இஸ்லாமிய ஒழுக்கமாண்புகளில் ஒன்றாகிய ஸலாத்தைக் கற்றுக் கொடுத்ததைக் கீழ் காணும் நபிமொழி உணர்த்துகிறது.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹூத்தஆலா ஆதம் (அலை) அவர்களைப் படைத்தபொழுது அவர்களுக்கு கூறினான்: ஆதமே நீர் சென்று அங்கு அமர்ந்திருக்கும் மலக்குகளின் கூட்டத்தார்க்கு ஸலாம் கூறுவீராக. அதற்குப்பதிலாக அம்மலக்குகள் உமக்கு வழங்கும் பதிலைச் செவிமடுப்பீராக. நிச்சயமாக அதுவே உமக்கும் உம் சந்ததியினர்க்குமுரிய பதிலா(ஸலாத்தின்)கும். அதன்படி ஆதம் (அலை) அம்மலக்குகளிடம் சென்று உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக எனக்கூற அதற்கு அம்மலக்குகள் அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மத்துல்லாஹி உங்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அவனின் கருணையும் உண்டாவதாக என்று கூறினார்கள். வரஹ்மத்துல்லாஹி என்ற சொல்லைத் தம் பதிலில் மலக்குகள் அதிகப்படுத்தினார்கள். (புஹாரி: அபூஹூரைரா (ரலி).
குர்ஆனின் முதல் வஹிச் செய்தி : 
"நபி (ஸல்) அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா(ரலி) அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, 'ஓதும்' என்றார். அதற்கவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே!' என்றார்கள்.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள்."அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டி அணைத்து என்னை விட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி அணைத்து விட்டுவிட்டு, 'படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதும்! அவனே மனிதனை 'அலக்'கில் (கருவளர்ச்சியின் ஆரம்பநிலை) இருந்து படைத்தான். ஓதும்! உம்முடைய இரட்சகன் கண்ணியம் மிக்கவன்' என்றார்." மேலும், ஆயிஷா (ரலி) கூறினார். பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா (ரலி) விடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள் 'அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்' என்றார்கள். (96:1-3) வசனங்களின் பினனணி. (புஹாரி: ஆயிஷா( ரலி) ஹதீஸ் எண்:3.)


வல்ல அல்லாஹ் படைப்பின் துவக்கத்தைக் கல்வியில் ஆரம்பித்தது போல் மனித வாழ்வின் ஒட்டுமொத்த அழிவு நாளாகிய கியாமநாளின் அடையாளமாகவும் கல்வியை ஆக்கியிருப்பதை கீழ்காணும் நபிமொழி உணர்த்துகிறது. கல்வி அகற்றப்பட்டு விடுவதும், அறியாமை மலிந்துவிடுவதும், விபசாரம் அதிகரித்து விடுவதும், மது அருந்துதல் அதிகரித்து விடுவதும், ஐம்பது பெண்களுக்கு - அவர்களை நிர்வகிக்க ஒரே ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து, ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி :5231 அனஸ் (ரலி). இவ்வாறு கல்வியின் இன்றியமையாமை பற்றி இஸ்லாம் கூறுவதுபோல் எந்த மதமும் கூறவில்லை என அறியலாம். இஸ்லாமிய வரலாற்றில் முதல்போராகிய பத்ர் போர் இறை நிராகரிப்பாளர்களுக்கும் இறை விசுவாசிகளுக்கும் இடையில் நிகழ்ந்தது. இப்போரில் அல்லாஹ் இறை விசுவாசிகளுக்கு வெற்றியை நல்கினான். முஸ்லீம்களால் சிறை பிடிக்கப்பட்ட குறைஷிய முஷ்ரிக்குகள் கல்வியறிவு இல்லாத முஸ்லீம்களில் ஒரு பகுதியினர்க்கு கல்வி கற்பித்துவிட்டு தம்மை சிறையிலிருந்து விடுவித்துக்கொண்டு விடுதலை பெற்ற செய்தியை நபிமொழிகளில் நம்மால் காணமுடிகிறது.
பகுத்தறிவுப் பாசறை இஸ்லாம்:- 
அல்லாஹ் ஆட்சி அதிகாரங்கள் வழங்கி கண்ணியப் படுத்திய ஒருவன் நன்றிகொன்றவனாக இறை விசுவாசி ஒருவரிடம் செய்த தர்க்கத்தையும் அவ்விசுவாசி வழங்கிய பகுத்தறிவுப் பூர்வமான பாங்கான பதிலை அருள்மறை அழகுடன் விவரிப்பதைப் பாருங்கள்.

அல்லாஹ் தனக்கு ஆட்சியைக் கொடுத்ததற்காக (நன்றி கொன்ற)அவன் அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீமிடம் அவரின் இரட்சகனைப் பற்றித் தர்க்கித்ததை (நபியே) நீர் பார்க்கவில்லையா?. அதுசமயம்; இப்ராஹீம் கூறினார்; "எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு (இறைவன்)" என்று. அதற்கவன், "நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்" என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்; "திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில்உதிக்கும்படிச் செய்!" என்று. (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர்வழி காண்பிப்பதில்லை. (2:258).

விவாதம் புரிவதில் விசுவாசி காட்டவேண்டிய நிதானம் நளினம் பகுத்தறிவு மிளிரும் வினா இவை இங்கே நாம் படிப்பினை பெறும் விஷயங்கள். மார்க்கம் என்ற பெயரால் இன்று நிகழ்த்தப்படும் விவாதங்களில் வரைமுறை மீறி வாய்க்கு வந்ததை கூறிவிட்டு வார்த்தை தவறி கவனக்குறைவாக வந்து விட்டது எனச் சமாளிப்பது இவை இன்றைய நடைமுறைகள்.


அறிவியல் ரீதியாக: 
இன்றைய விஞ்ஞான உலகில் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் உலாவந்து கொண்டிருக்கும் வேளையில் பின்பற்றும் மார்க்கம் அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக முரணாக அமைந்து விடுமானால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எல்லா காலத்துக்கும் பொருந்தும் மார்க்கம் எனச் செய்யும் பிரகடனங்கள் பிசுபிசுத்துவிடும். இஸ்லாம்கூறும் எந்த ஒரு தீர்வும் அறிவியல் முடிவுகளுடன் பொருந்திப்போவது நம்மை பிரமிக்க வைக்கிறது. அறிவியல் தீர்வுகள் இஸ்லாமியச் சித்தாந்தத்துடன் முரண்பட்டால் அறிவியல் தீர்வுதான் மாற்றம் பெறுகிறது மறுபரிசீலனைக்குள்ளாகிறது என்பதை நாம் உணரவேண்டும்.அறிவியல் ரீதியாக அருள்மறை அன்றே கூறிய விஷயங்கள் இன்று உண்மைப் படுத்தப்பட்டதை ஓரிரு சான்றுகளில் காண்போம்.

சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லா கோள்களும் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (36:40)

கோளங்கள் விண்மீன்கள் நட்சத்திரங்கள் வான வெளியில் தத்தம் பாதைகளில் மிதந்து சுழன்று கொண்டிருப்பதை இன்றைய அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்து கூறுகின்றனர்.

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா. (55:19-20).

சங்கமிக்கும் இருகடல்களின் நீர் ஒன்றோடொன்று சேர்ந்து விட்டதுபோல் நம் கண்ணுக்குப் புலப்பட்டாலும் அவற்றின் சுவை நிறம் தன்மை அடர்த்தி ஆகியவற்றின் வேறுபாட்டால் அவ்விரு கடல்களின் இடையில் வெளிப்பார்வைக்குத் தெரியாத ஒரு மெல்லிய திரை உள்ளதை இன்றைய அறிவியல் தீர்வு உறுதிப் படுத்துகிறது. நபி மொழி ஒளியில் அறிவியல் விந்தைகளை அலசுவோமேயானால் உங்களில் எவருடைய பானத்திலாவது ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்; பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில், அதன் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி :3320 அபூஹூரைரா (ரலி).)


இவ்வாறு அறிவியல் ரீதியிலான தீர்வுகள் இஸ்லாத்தின் கோட்பாடுகளில் ஒவ்வொன்றையும் இன்று உறுதிப் படுத்திக் கொண்டிருக்கின்றன.
சிந்திப்பதில் தடையில்லை தீர்வு செய்வதில் வரையறை:-

இஸ்லாமியச் சித்தாந்தங்கள் சிந்திப்பதற்கு எப்பொழுதும் தடை விதித்ததேயில்லை. மாறாக சிந்தித்துப் பெரும் தீர்வில் வரையறை உள்ளது. அவைகளில் சிலவற்றை இங்கு ஆய்வு செய்வோம். அருள்மறை வசனம் கூறும் கூற்று இதோ: (இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) "நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!" என்று நாம் கூறினோம். (21:69).

ஏகத்துவக் கருத்தை எடுத்துக்கூறிய இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் இணைவைப்பாளர்களால் நெருப்புக் கிடங்கில் வீசப்பட்டதும் அல்லாஹ் நபி இப்ராஹீம் (அலை) அவர்களப் பாதுகாக்க எரியும் நெருப்பின் சுடக்கூடிய தன்மையை மாற்றி அதனை இதமளித்து இடரிழைக்காத தன்மையை வழங்குவதாக அல்லாஹ் மாற்றும் நிலையை மேற் கூறிய வசனம் கூறுகிறது. இதனைச் சிந்தித்துப் பார்த்தால் நம் பகுத்தறிவு சுடும் நெருப்பு இதமளிக்குமா? என்ற வினாவுடன் ஏற்றுக் கொள்ள மறுக்கும். ஆனால் இத்தன்மையை மாற்றியதாக யார் கூறுகிறார்? என்று பார்த்தால் நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல அல்லாஹ் அந்நேரத்தில் சுடும் நெருப்புக்கு இட்ட உத்தரவு என்பதை விளங்கிக் கொண்டால் ஏற்றுக் கொள்வதில் எந்தசிரமும் இல்லை. மற்றொரு அருள்மறை வசனத்தின் கூற்று இதோ: உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்" என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலைபோன்று ஆகிவிட்டது. (26:63)

கைத்தடியால் கடலில் அடித்ததால் கடல் பிளந்து மலைபோல் குவிந்து நபி மூஸா (அலை) அவர்கள் தம்கூட்டத்தாருடன் அதனைக் கடந்து செல்ல வழிவிட்டது என்ற இவ்வசனத்தின் படியுள்ள செய்தியை நம் பகுத்தறிவு இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கும். ஆனால் கைத்தடியினால் கடலில் அடியுங்கள் என உத்திரவிட்டது அக்கடலைப் பிளந்து வழிவிட வைத்தது வல்லஅல்லாஹ்தான் என்பதைப் புரிந்து கொண்டால் பிரச்சினைக்கு இடம் இல்லாமல் ஆகிவிடுகின்றது. இதுபோன்று அருள்மறை ஒளியில் இன்னும் சில நிகழ்வுகளைக் காணலாம். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அறுத்துப் பலியிட தம் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அழைத்துச்சென்றது. நபி ஈஸா (அலை) அவர்கள் தந்தையின்றிப் பிறந்தது. இப்படி நிறைய நிகழ்வுகள் நம் பகுத்தறிவுக்கு அப்பற்பட்டதாக இருந்தாலும் இக்கூற்றை படைத்த அல்லாஹ் கூறுகிறான். ஆகவே அல்லாஹ் எப்படி நமக்கு கூறுகிறானோ அதை சிந்தித்த பின் அப்படியே ஏற்றுக் கொள்வது ஈமானிய உறுதியை மேலும் வலிமைப்படுத்தும்.

ஹதீஸ்களின் அடிப்படையில் சில நிகழ்வுகளை இனி அலசுவோம். உங்கள் மனதில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ அல்லது அதை நீங்கள் மறைத்து வைத்தாலோ அதைப்பற்றி அல்லாஹ் உங்களை விசாரிப்பான் (2:284) என்ற அருள்மறை வசனம் இறங்கிய போது நபித்தோழர்கள் இதனை மிகச் சிரமமாக எண்ணினர். எனவே நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் திருத்தூதரே எங்கள் மீது தொழுகை ஜிஹாது நோன்பு தர்மம் ஆகிய பணிகள் இயன்ற அளவு செய்ய பணிக்கப்பட்டதும் அதனை நாங்கள் செய்து வருகிறோம். இப்பொழுது தாங்கள் மீது இவ்வசனம் இறங்கியுள்ளது. இதனைச் செய்ய நாங்கள் சக்தி பெறவில்லை எனக்கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு முன்பு வேதங்கொடுக்கப்பட்ட இருசாரார் (யூத கிறிஸ்தவர்கள்) கூறியது போன்று நாங்கள் செவிமடுத்தோம் மாறுசெய்தோம் எனக்கூற நாடுகிறீர்களா?. அவ்வாறல்லாமல் நாங்கள் செவிமடுத்தோம் கட்டுப்பட்டோம் எனக்கூறுங்கள். எங்கள் இரட்சகனே உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம். உன்னிடமே எங்களின் மீட்சியுள்ளது என பிரார்த்தியுங்கள் எனக்கூற நபித்தோழர்கள் அவ்வாறே ஏற்றுக்கொண்டு பிரார்த்தித்ததும் அல்லாஹ் அருள்மறையின் இவ்வசனத்தை இறக்கினான்.

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (2:286).


(முஸ்லீம்: அபூஹூரைரா (ரலி). இறைத்தூதர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன்படிச் செயல்பட இந்த ஹதீஸ் கூறுகிறது. மற்றொரு ஹதீஸ் ஹஜருல் அஸ்வத் கல் பற்றி கூறுவதைப் பாருங்கள். உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவதைக் கண்டேன். அவர்கள் அந்த (ஹஜருல் அஸ்வத்) கல்லை நோக்கி நீ ஒரு கல். உன்னால் எந்த பயனையும் தரமுடியாது. நீ எத்தகைய தொல்லையும் அளிக்க இயலாதது. உன்னை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் நான் உன்னை (ஒருபோதும்) முத்தமிட்டிருக்க மாட்டேன் எனக் கூறினார்கள். (புஹாரி முஸ்லீம் : ஹாஃபிஜ் பின் ரபீஆ (ரலி). இதுபோன்றே ஒளு எடுக்கத் தண்ணீர் இல்லாத போது செய்யும் தயம்மம் காற்று பிரிந்து விட்டால் அம்மறைவிடத்தை சுத்தம் செய்யாமல் முறிந்த ஒளுவை மீண்டும் செய்வது போன்ற சில அமல்கள் நமது பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டதாக இருப்பினும் உத்தம திருநபி (ஸல்)அவர்கள் அவ்வாறு செய்து காட்டினார்கள் என்பதால் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அமல் செய்வதே இறைப்பொருத்தத்தைப் பெற்றுத்தரும்.

பகுத்தறிவைப் பெறாத படைப்பினங்கள் பெற்றுள்ள சிறந்த அறிவு பகுத்தறிவு என்பது ஒரு காரியத்தைச் செய்யும்போது அது நமக்கு பயனளிக்குமா? தீங்கிழைக்குமா? என பிரித்துப் பார்த்து இம்மை மறுமை நலன்களை நாடிச் செய்தால் பகுத்தறிவில் நிறைய பலன்களுண்டு. ஆனால் பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதன் அதனைத் தவறாக துஷ்பிரயோகம் செய்கிறான். மது மனிதனின் மதியை மயக்கி அவனை பிறர்கண்டு நகைக்கும்படி செய்துவிடும் என்ற முடிவை நன்கு தெரிந்திருந்தும் மது அருந்துகிறான். பிறர் பொருளைத் திருடுபவன் அமானித மோசடி செய்பவன் அதனை இழந்து தவிப்பவன் படும் அல்லல்களை நன்றாக அறிந்தே அத்திருட்டை மோசடியைச் செய்கிறான். இதுபோல பிற சமூக விரோதச் செயல்களான விபச்சாரம் வரதட்சணை என அடுக்கிக்கொண்டே போகலாம். இவையனைத்தும் பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதன்தான் செய்கிறான். மறுமைப் பலனை அவன் மறந்தே விடுகிறான். ஆனால் வல்ல அல்லாஹ் பகுத்தறிவு கொடுக்காமல் மிகச் சிறந்த நுண்ணறிவு ஒன்றை மனித ஜின்கள் தவிர பிற படைப்பினங்களுக்கு வழங்கியிருப்பதை நடைமுறையும் நபிமொழியும் நமக்குணர்த்துவதைக் காண்போம். அண்மையில் இந்தோனேஷியா இலங்கை தமிழகத்தைத் தாக்கிய சுனாமி என்ற பேரழிவு அதன் பாதிப்புகள் பற்றி செய்தி ஊடகங்கள் விலாவாரியாகக் கூறின. அச்செய்திகளில் ஒன்று: சென்னை மெரீனா கடற்கரை ஓரம் அதிகாலையில் உடற்பயிற்சிக்காக ஓடிக் கொண்டிருந்த கால்நடை மருத்துவர் ஒருவர் அங்கே மிரண்டு ஓடிக்கொண்டிருந்த ஒரு மாட்டைப் பின் தொடர அம்மாடு ஓடி நின்ற இடத்திலிருந்து சற்று அருகாமை வரையில் சுனாமி அலைகளின் பேரழிவு தாக்கியிருப்பதைக் கண்ட அக்கால்நடை மருத்துவர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில் மாடு-வின் உதவியால் தாம் உயிர் பிழைத்ததாகக் கூறினார். சுனாமி அலைகள் நம்மைத் தாக்க வருகின்றது அதன் எல்லை இங்கு வரையுள்ளது என்ற நுண்ணறிவை வல்ல அல்லாஹ் ஒரு மாட்டுக்கு வழங்கியிருப்பதையும் மனிதன் பகுத்தறிவு பெற்றவன் பரிதாபமாகப் பாதிக்கப் பட்டதையும் செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம்.

அண்மையில் அண்டை நாடான பாகிஸ்தானில் நிகழ்ந்த பூகம்பம் ஏற்படுத்திய மிகப்பெருஞ் சேதாரங்களை விவரித்துக் கூறிய செய்தி ஊடகங்கள் ஒரு ருசிகரமான வியத்தகு உண்மையொன்றை கூறத் தவறவில்லை. அச்செய்தி இதுதான்:

பாகிஸ்தானின் தலைநகராகிய இஸ்லாமாபாத்தில் நிலநடுக்கம் நடந்த அவ்விடத்தையொட்டிய மரங்களின் மீதிருந்த பறவைகள் நிலநடுக்கம் நடப்பதற்கு சில நொடிகளுக்கு முன்பு அங்கிருந்து கூட்டம் கூட்டமாக இடப்பெயர்ச்சி செய்ததை அரப் நியூஸ் ஆங்கில நாளேடு குறிப்பிட்டிருந்தது. பகுத்தறிவு பெற்ற மனிதன் பெறாத இந்த நுண்ணறிவை படைத்த ரப்புல் ஆலமீன் பறவைகளுக்கு வழங்கியிருப்பதைக் கண்டு கொள்ளவில்லையா?. இச்செய்திகளை உறுதிப் படுத்தும் ஒருநபிமொழியைப் பாருங்கள்:


"ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால், என்னை விரைந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:1314 அபூஸயீத் அல்குத்ரி (ரலி). மற்றொரு ஹதீஸின் பிரகாரம் : "ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 1338 அனஸ் (ரலி). மற்றொரு அறிவிப்பில் மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்தபோது) 'மண்ணறை வாசிகள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுகின்றனர்' என்று கூறினர். அவர்கள் கூறியதை நம்புவது எனக்குச் சரியாகப் படவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! இரண்டு மூதாட்டிகள் (என்னிடம் வந்து இப்படி இப்படிச் சொன்னார்கள்) என்று அவர்களிடம் தெரிவித்தேன்.அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இருவரும் உண்மையே சொன்னார்கள். (மண்ணறையிலிருக்கும் பாவிகள்) கடுமையாக வேதனை செய்யப்படுகிறார்கள். அந்த வேதனை(யால் அவதியுறும் அவர்களின் அலறல்)தனை எல்லா மிருகங்களும் செவியேற்கின்றன" என்றார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை.(புஹாரி :6366 ஆயிஷா (ரலி).

அல்லாஹ்வின் நல்லடியார்களே வல்ல அல்லாஹ் அருள் மறையில் கூறிய படியும் உத்தம திரு நபி (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரங்களின் படியும் அதற்குறிய வரையரைக்குள் சிந்தித்து நல்லறங்கள் புரிந்து நமது இம்மை மறுமை வாழ்வைச் செம்மைப் படுத்த வல்ல அல்லாஹ் நம் அனைனைவருக்கும் நல்லருள் புரிவானாக. ஆமீன்.

திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு (பகுதி 1)

இறைவெளிப்பாட்டின் அடிப்படையில் சமுதாயத்தை வழிநடத்திய இறைதூதர்கள் மற்றும் அவர்களுக்கு அருளப்பட்ட இறைவசனங்களின் தாக்கத்தை உட்கொண்ட ஒரு நூலே பைபிள் என்பதில் முஸ்லிம்களுக்கு மாற்று அபிப்பிராயம் இல்லை. இறைவசனங்களும் தீர்க்கதரிசிகளின் உபதேசங்களும் வரலாற்றாசிரியர்களின் அபிப்பிராயங்களும் புரோகிதக் கருத்துக்களும் சேர்ந்த ஒரு கலவையே பைபிள். தீர்க்கதரிசிகளின் வாழ்க்கைப் புராணங்கள் பைபிளின் முதுகெலும்பு எனலாம். இந்த வாழ்க்கைப் புராணங்களின் மேல் புரோகிதக் கருத்துக்களைப் பொதிந்து உருவாக்கப்பட்டதே இன்று நடைமுறையில் உள்ள பைபிள் என்று கூறினால் வியப்படையத் தேவையில்லை. 

பைபிளில் காணப்படும் பல வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் திருக்குர்ஆனில் உள்ள தகவல்களை ஒப்ப அமைந்திருப்பதைக் காணலாம். பைபிளில் காணப்படும் அத்தகைய தகவல்கள் இறைவசனங்கள், கண்ணால் கண்ட காட்சிகள் மற்றும் பிறர் கூறக் கேட்ட கருத்துக்களின் அடிப்படையில் பிற்கால எழுத்தாளர்களால் பதிவுசெய்யப்பட்டவை ஆகும். புரோகிதர்களின் மனித அபிப்பிராயங்கள் பைபிளில் மலிந்து காணப்படுவதால் முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களும், அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களும் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றது. 

திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள வரலாற்றுத் தகவல்கள் இதிலிருந்து முற்றிலும் வேறபட்டுள்ளது. அது அருளப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை எந்த மனிதக் கரங்களாலும் மாசுபடாமல் அதன் பரிசுத்தத் தன்மையிலேயே நிலைத்திருக்கின்றது. எனவே அது கூறும் வரலாற்றுத் தகவல்கள் முற்றிலும் உண்மையானவையகவும் முரண்பாடுகளற்றவையாகவும் பரிபூரணத் தன்மை வாய்ந்ததாகவும் நிலைத்து நிற்கின்றன. எனவே திருக்குர்ஆனில் எந்த முரண்பாடுகளையும் விமர்சகர்களால் கூறமுடியாது. அவ்வாறு விமர்சித்தாலும் சான்றுகளின் துணையோடு அவற்றை நிரூபிக்க இயலாது என்பதே உண்மை. 

இறைவசனங்களின் தாக்கம் உள்ள பைபிளிலும் இறைவசனங்களை மட்டுமே கொண்ட திருக்குர்ஆனிலும் வரலாற்றுத் தகவல்கள் அடிப்படையில் ஒன்றாகத் தோன்றினாலும் அவற்றை விளக்கும் தொனியில் இரண்டிற்கு மத்தியிலும் பாரிய வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தகைய வேறுபாடுகள் திருக்குர்ஆன் இறைவாக்கு என்பதை உண்மைப் படுத்துவதோடு 

பைபிள் மனிதக் கற்பனைகளின் கலவை என்பதையும் நிரூபிக்கின்றன. சில உதாரணங்களைக் கொண்டு இதனை நிரூபிப்போம். 

1. இறைக் கொள்கை மற்றும் இறைவனைப் பற்றிய தகவல்கள்.
திருக்குர்ஆனில் இறைவனைக் குறித்துக் கூறப்படும் தகவல்கள் யாவும் அவனது வல்லமையையும் மகத்துவத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. ஆனால் பைபிளில் பல இடங்களிலும் இறைவனின் மகத்துவத்திற்குக் களங்கம் ஏற்படும் வகையில் கருத்துக்கள் அமைந்துள்ளன. யஹோவாவின் பகத்துவம் பற்றிக் கூறினாலும் இஸ்ரவேலிய இனஉணர்வின் தாக்கங்கள் வரும் இடங்களில் இறைவனின் மகத்துவத்தைச் சிறுமைப் படுத்தும் விதத்தில் கருத்துக்கள் காணப்படுகின்றன. 

உதாரணமாக ஆதியாகமம் 1:26 மனிதனை தனது சாயலில் இறைவன் உருவாக்கினான் என்று கூறி மனிதனுக்கு இறைவனை ஒப்பாக்கி தரம் தாழ்த்துகின்றது. 

ஆதியாகமம் 2:23 கடவுள் ஓய்வு எடுத்தார் என்ற தகவலைக் கூறி களைப்பும் ஓய்வும் உடைய இறைவனை பைபிள் அறிமுகப்படுத்துகின்றது. 

ஆதியாகமம் 3:8 முதல் 13 வரை ஏதேன் தோட்டத்தில் ஒளிந்துகொண்ட ஆதாமையும் ஏவாளையும் கடவுள் தேடி அலைந்தார் என்று கூறி முற்றிலும் பரிபூரணமடைந்த அவனது ஞானத்தைக் களங்கப்படுத்துகின்றது. 

தான் செய்து விட்ட காரியத்திற்காக வருத்தப்படும் கடவுள் என்ற ஆதியாகமம் 6:6ல் கூறப்பட்டுள்ள தகவல் பின்விளைவை அறியாதவனாக இறைவனைச் சிறுமைப் படுத்துகின்றது. 

தான் முனரே தீர்மானித்து உறுதிப்படுத்திய ஒரு காரியத்தைச் செய்யாமல் மனம் மாறிவிட்ட தெய்வத்தைப் பற்றி யாத்திராகமம் 32:14 கூறுகின்றது. 

இஸ்ரவேல் இனத்தின் பிதாவாகிய யாக்கோபுடன் மல்யுத்தம் நடத்தி இறைவன் தோற்றுவிட்டதாக ஆதியாகமம் 32:28 கூறுகின்றது. மேலும் இஸ்ரவேல் இனஉணர்வின் ஆதிக்கம் பைபிளில் மேலோங்கியுள்ளது என்பதற்கு மேற்படி வசனம் ஒரு சான்றாகும். 

ஆனால் திருக்குர்ஆனில் இப்பேரண்டத்தின் படைப்பாளனும் ஆட்சியாளனும் ஆகிய அல்லாஹ்வைப் பற்றி எடுத்துக் கூறும் இடங்களில் அவனது மகத்துவத்திற்கோ வல்லமைக்கோ களங்கம் கற்பிக்கும் எந்தக் குறிப்புகளும் இல்லை. மாறாக இறைவனைக் குறித்த தகவல்கள் யாவும் அவனது வல்லமையையும் மகத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதுடன் அவற்றைப் படிப்பவர்களின் இறைநம்பிக்கையையும் பயபக்தியையும் அதிகப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. அல்லாஹ்வாகிய அவ்விறைவன் அரபிகளுக்கு மட்டும் உள்ள இறைவனாகத் திருக்குர்ஆன் அவனைக் குறித்து அறிமுகப்படுத்தவில்லை. திருக்குர்ஆன் அறிமுகப்படுத்தும் இறைவன் அரபிகளையும் அரபியல்லாதவரையும் இன நிற வேறுபாடின்றி அனைவரையும் படைத்தவன், அகி உலகத்தாரின் இரட்சகன். 


சில வசனங்கள். 
அல்லாஹ் அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் உயிரோடிருப்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன். அவனை சிறுதுயிலோ, உறக்கமோ பீடிக்கா. வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியது. (அல ல2:255)

இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும் உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (6:3)

வானங்களையும் பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான் அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன்ää பார்ப்பவன். (42:11)

நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும்ää அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112: 1-4)

2. தீர்க்கதரிசிகளின் வரலாறு
வரலாற்றுத் தகவல்களைப் பொறுத்தவரை விவரிக்கும் விதம் தெய்வீகத் தன்மை ஆகியவற்றில் பைபிளும் திருக்குர்ஆனும் முற்றிலும் வேறுபடுகின்றது. முதலாவதாக ஆதிபிதாவாகிய ஆதமுடைய வரலாற்றைப் பற்றி பைபிள் மற்றும் திருக்குர்ஆன் தரும் தகவல்களைக் காண்போம். 

1. ஆதமிடமும் அவரது மனைவியிடமும் உண்ணக் கூடாது என்று விலக்கப்பட்ட கனியானது நன்மை தீமை குறித்து அறிவிக்கக் கூடிய கனி என்று பைபிள் கூறுகின்றது. (ஆதி 2:17)

பைபிளின் கூற்றுப்படி விலக்கப்பட்ட கனியைப் புசித்ததன் காரணமாகவே மனிதனுக்கு நன்மை தீமைகளைப் பற்றிய அறிவு கிடைக்கின்றது. (ஆதி 3:6,7 3:22) (கனியைப் புசிப்பதற்கு முன் நன்மை தீமைகளைப் பிரித்தறியாத நிலையில் இருந்த மனிதனிடம் விலக்கப்பட்ட கனியைப் புசிக்க வேண்டாம் என்று எவ்வாறு கட்டளையிட முடியும் ? ஏவல் விலக்கல்களெல்லாம் நன்மை தீமையைக் குறித்து அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் என்பதல்லவா உண்மை ? இதன் காரணமாகவே விலங்கினங்களிடம் ஏவல் விலக்கல்கள் செல்லுபடியாவதில்லை என்பதை கவனத்தில் கொள்க.) 

ஆனால் திருக்குர்ஆன் விலக்கப்பட்ட கனியைக்குறித்து பேசும் இடத்தில் அது நன்மை தீமைகளைப் பிரித்தறிவிக்கும் அறிவின் கனி என்று குறிப்பிடவில்லை. 

நன்மை புரிந்து உயர்நிலை அடையக்கூடிய அல்லது தீமை புரிந்து இழிநிலை அடையக்கூடிய நிலை இயற்கையாகவே மனுதனின் படைப்பில் அமைந்துள்ளது என்ற உண்மையை திருக்குர்ஆன் எடுத்தியம்புகின்றது. நன்மை தீமைகளைக் குறித்த அறிவு விலக்கப்பட்ட கனியைப் புசிப்பதற்கு முன்னரே இறைவனால் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு அதனால் ஒவ்வொரு பொருளையும் பிரித்தறிந்து அதன் தன்மைகளுக்கு ஏற்ப பெயரிட்டு அழைக்கக் கூடிய ஒரு உன்னதமான ஒரு படைப்பாகவே திருக்குர்ஆன் மனிதனை அறிமுகப்படுத்துகின்றது.(2:30-33) விலக்கப்பட்ட கனியையும் நன்மை தீமைகளைப் பிரித்தறிதலையும் எந்த இடத்திலும் திருக்குர்ஆன் சம்மந்தப்படுத்தவே இல்லை. 

2. விலக்கப்பட்ட கனியைப் பற்றிய இறைவனின் கட்டளையை பைபிள் எடுத்துக் கூறும்போது '' அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்'' (ஆதி 2:17) என்று ஆதமிடம் கர்த்தர் கூறியதாகக் குறிப்பிடுகின்றது. ஆனால் இறைக் கட்டளைக்கு மாறு செய்யத் தூண்டிய சர்ப்பமோ ''நீங்கள் நன்மை தீமையை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் என்று (ஆதி: 3:5) கூறியது. அவவாறு விலக்கப்பட்ட கனியை உண்டபோது ஆதம் சாகவில்லை. மாறாக சர்ப்பம் கூறியது போன்று நடந்தது. (பார்க்க. ஆதியாகமம்: 3:6,7 3:22)

இறைவன் பொய் கூறி ஆதமை பயமுறுத்தினான் என்றும் பாம்பு ஆதமுக்கு உண்மையை எடுத்துக் கூறியது என்றும் இக்கதை மூலம் விளங்க முடிகின்றது. இவ்வாறு இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் கற்பிக்கும் கதைகள் திருக்குர்ஆனில் இல்லை. 

3. நன்மை தீமைகளைப் பகுத்துணரும் அறிவு தரும் கனியைப் புசித்த மனிதனைப் பற்றிய அச்சத்தால் மனிதன் தன்னைப் போல் ஆகாதிருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும் பலவீனமானவனாக இறைவனை பைபிள் காட்டுகின்றது. (ஆதி 3:22)

விலக்கப்பட்ட கனியைப் புசித்தன் காரணமாக இறைதன்மை மனிதனிடம் ஊடுருவி விட்டதாக எந்த இடத்திலும் திருக்குர்ஆன் கூறவில்லை. இவ்வாறு இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் ஏற்படுத்தும் இக் கதைகளை விட்டும் திருக்குர்ஆன் பரிசுத்தமானது! 

4. விலக்கப்பட்ட கனியை உண்ணுமாறு மனிதனைத் தூண்டியது பாம்பு (சர்ப்பம்) என்று பைபிள் கூறுகின்றது. (ஆதி 3:1-5, 3:13) இதன் காரணமாகவே பாம்பு இறைவனின் சாபத்துக்கு ஆளாகியது என்றும், அச்சாபத்தின் காரணமாகவே அது தன் வயிற்றினால் (ஊர்ந்து) சஞ்சரிக்கிறது என்றும், அதன் காரணமாகவே மனிதனுக்கும் பாம்புக்கும் பகை ஏற்பட்டது என்றும் பைபிள் கூறுகின்றது. (2:35,36)

ஆனால் திருக்குர்ஆனோ மனிதனை வழிகெடுத்து அவனைச் சுவனத்திலிருந்து வெளியேற்றியவன் ஷைத்தான் என்று கூறுகிறது. (2:35,36) இச்சம்பவத்தைப் பற்றி திருக்குர்ஆன் குறிப்பிட்டுக்காட்டும் எந்த இடத்திலும் பாம்பைப் பற்றிய தகவல் இல்லை. 

இறைசாபத்தின் காரயமாகவே பாம்பு வயிற்றினால் ஊர்கின்றது என்பதும் அச்சாபத்தின் காரணமாகவே அது மனிதனால் வெறுக்கப்பட்டது என்பதுவும் உண்மையாயின் இறைசாபத்துக்கு முன் உள்ள பாம்பு எந்த நிலையில் இருந்தது ? கால்களால் நடந்து சென்றதா ? மனிதனால் விரும்பப்பட்டதா? இது குறித்த எந்த விளக்கமும் பைபிளில் இல்லை.

5. விலக்கப்பட்ட கனியை உண்டதோடு அதனை உண்ணத் தூண்டியவள் பெண், இதன் காரணமாக அவள் இறைவனால் சபிக்கப்பட்டு அச்சாபத்தின் காரணமாகவே பெண்ணுக்கு கற்பகால சிரமங்களும் பிரசவ வேதனையும் ஏற்படுகின்றது என்று பைபிள் (ஆதி 3:16) கூறுகின்றது. இன்றுவரை தாய்மார்கள் அனுபவித்து வரும் கற்பகால சிரமங்களுக்கும் பிரசவவேதனைக்கும் ஆதிமாதாவின் பாவம் காரணமாம் ? (அப்படியாயின் மனிதனல்லாத இதர ஜீவிகள் அனுபவிக்கும் பிரசவ வேதனைக்கு யார் செய்த பாவம் காரணமாம்?)

தாய்மார்களுக்கு ஏற்படும் பிரசவ வேதனை பாவத்திற்காக வழங்கப்பட்ட தண்டனை என்று திருக்குர்ஆன் கூறவில்லை. மாறாக அதனை ஓர் அருட்கொடையாகவே குறிப்பிடுகின்றது. தாயின் தியாகத்துக்கு எடுத்துக்காட்டாக அச்சம்பவத்தைக் குறிப்பிடுகின்றது. (29:8, 46:15, 31:14) இதன் காரணமாகவே மனிதன் தனது தாய்க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும் எனவும் கட்டளையிடுகின்றது. 

விலக்கப்பட்ட கனியையும் கற்ப காலசிரமங்கள் மற்றும் பிரசவ வேதனையையும் திருக்குர்ஆன் எந்த இடத்திலும் சம்மந்தப்படுத்தவே இல்லை. 

6. மனிதனுடைய உழைப்பு, பொருளீட்டல், விவசாயம் போன்றவை எல்லாம் விலக்கப்பட்ட கனியை உண்டதன் காரணமாக ஏற்பட்ட சாபம் என்று பைபிள் (ஆதி 3:18,19) ஆனால் திருக்குர்ஆன் உழைப்பு, பொருளீட்டல் எல்லாம் மனிதனின் திறமையை வெளிப்படுத்தும் அருட்கொடை என்று கூறுகின்றது. (62:10) (இதன் காரணமாகவே குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கி ஒரு ஆண்மகனை கண்ணியப்படுத்துகின்றது (4:34)) மனிதனின் கடின உழைப்பையும் முயற்சியையும் எந்த இடத்திலும் விலக்கப்பட்ட கனியுடன் திருக்குர்ஆன் தொடர்பு படுத்தவில்லை. 

7. விலக்கப்பட்ட கனியை உண்ட ஆதமும் ஹவ்வாவும் பாவமன்னிப்புக் கோரியதாகவோ இறைவன் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கியதாகவோ எந்தத் தகவலும் பைபிளில் இல்லை. ஆனால் திருக்குர்ஆன் ஆதி மாதா பிதாக்கள் இருவரின் மனமுருகிய பிரார்த்தனையையும் பாவமன்னிப்புக் கோரலையும், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கிய இறைவனின் மகத்தான கருணையையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. 

பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார் ; (இன்னும் அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும் கருணையாளனும் ஆவான். (2:37) 

அதற்கு அவர்கள்; '' எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்"" என்று கூறினார்கள். (7:23) 

இன்ஷா அல்லாஹ் தொடரும் 

செல் பேசி - ஓர் கழுகுப்பார்வை


தொலைத்தொடர்பு சாதனங்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருப்பது நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றது. எங்கிருந்தும், எப்போதும், யாரிடமும் தொடர்புகொள்ளலாம் என்கிற அளவிற்குச் செல் ஃபோன்கள் நமக்குக் காலத்தைச் சுருக்கித் தந்துவிட்டன. தொலைபேசி (Land Line) இணைப்புகளை முழுமையாகப் பயன்படுத்தாமலேயே ஒரு தலைமுறை சென்றுகொண்டிருக்கையில் இன்று பிறந்த குழந்தைகள் கூட செல் ஃபோன்களில் பேசத் தொடங்கிவிட்டன. உங்கள் பேர் என்ன? என்று கேட்பதற்குப் பதில் உங்கள் செல் நெம்பரைச் சொல்லுங்கள் என்று கேட்கும் அளவிற்கு இன்று காலம் மாறிவிட்டது.

2004-டிசம்பர் மாதம் எடுத்த கணக்கெடுக்கின்படி இந்தியாவில் செல் ஃபோன் பயன்படுத்துவோர்கள் 4.74 கோடி பேர். இது கடந்த 2003-ஐ காட்டிலும் 68% அதிகம்.(1) இந்த அளவிற்குச் செல் ஃபோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது.

இப்போதெல்லாம் செல் ஃபோன் திருடர்கள் பெருகிவிட்டார்கள். சாலையோரம் பேசிக் கொண்டிருக்கும் போதே பிடுங்கிச் சென்று விட்டார்கள் என்று ஒரு பெங்காலி நண்பருக்கு நேர்ந்த சோகக்கதையைச் சொல்லி விழிப்பூட்டும் நண்பர்.., குளியலறையில் கேட்கும் ஹலோ சப்தங்கள், செல் ஃபோனை கழிவறையில் தவறவிட்டு பல்வேறு பழுதுபார்க்கும் கடைகள் ஏறிஇறங்கி அதன் ஈமச்சடங்குகளை முடிந்து சோகமாய் அமர்ந்திருக்கும் என் தொழிற்சாலைத் தோழன். செல் ஃபோன் வாங்க கடைகளில் மொய்ந்து கொண்டிருக்கும் இளைஞர் கூட்டம்.

"சொல் இல்லார்க்கு உய்வுண்டாம் - உய்வில்லை
Cell இல்லாதவர்க்கு"

என்று எனது துபாய் தோழர் செல் ஃபோனில் உதிர்த்த நகைச்சுவை... என்று நம் வாழ்க்கையின் நிகழ்வுகள் ஏதாவது ஒரு வகையில் செல் ஃபோன்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவே தோன்றுகிறது.

"செல்" வைத்துக் கொள்வது அவசியமா? என்று சிலரிடம் கேட்டபோது, ஆம்! ஹாஜிகளுக்குச் சேவை செய்ய! தவறியவர்களை கண்டெடுக்க! புதிய முகவரிகளைக் கண்டுபிடிக்க! உறவுகளுடன் தொடர்பு கொள்ள!.. என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது, என்றாலும் செல் ஃபோன்கள் முழுக்க முழுக்கப் பலன்களை மட்டுமே கொண்டுள்ளது அல்ல! என்ற குற்றச் சாட்டையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. செல் ஃபோன் பற்றிய நன்மைகளை நாம் நிறையவே அறிந்து வைத்திருக்கின்றோம். ஆகவே அதில் உள்ள தவறான உபயோகங்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு ஊட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

பல பேர் "செல்" வாங்கிவிடுகின்றனர். அதை முறையாகப் பயன்படுத்தத் தெரியவில்லை. குறிப்பாக ரிங் டோன் (Ring Tone)ஐ அலறவிடுகின்றனர். இரவெல்லாம் (Night Shift) வேலை பார்த்துவிட்டு அயர்ந்து தூங்கும் அறைத்தோழர்களை Fire Alarm போல செல் ஃபோனை அலறவிட்டு எழுப்பக்கூடிய சூழல்.
பள்ளிவாசல்கள், கல்விச்சாலைகள், மருத்துவமனைகள் என்று இடவேறுபாடு பாராமல் செல் ஃபோன் சப்தங்கங்ளை அலறவிடுவதை தவிர்க்க வேண்டும். இடத்திற்குத் தகுந்த முறையில் சப்தங்களை சரிசெய்ய வேண்டும். இந்த நேரத்தில் பள்ளிவாயில்களில் நடக்கும் செல் ஃபோன் இடையூறுகளை சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.

இமாம் தக்பீர் கட்டியவுடனேயே இந்த செல் ஃபோன் ஆலாபனைகள் ஆரம்பமாகிவிடுகின்றன. சிலபேர்கள் இமாமத் செய்யும்போதுகூட செல் ஃபோன் கதற தொழுகையில் நெழிய வேண்டிய சூழல்.
Ring Tone என்று பல சப்தங்கள் இருந்தாலும் பெரும்பாலானோர் விரும்புவது சங்கீதத்தைத்தான். குறிப்பாக சினிமா மெட்டுக்களை(தான்) Ring Tone ஆக உபயோகிக்கின்றனர். இதை முஸ்லிம்களும் ஏன் விபரம் அறிந்தவர்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல என்ற அளவுக்கு நிலைமை போய்விட்டது. காலணிகளை கழற்றிவிட்டு உள்ளே வரவும் என்று எழுதுவது போன்று செல் ஃபோன்களை அமர்த்திவிட்டு உள்ளே வரவும், என்று பள்ளிவாயில்களில் அறிவிப்புப் பலகை வைக்கும் நிலைமை!
தொழுகை என்பது இறைவனுடன் அடியான் உரையாடுவது. பள்ளிவாயில்கள் இறைவனை நினைவுகூறும் இடம் என்பதை எல்லாம் ஏனோ இவர்கள் மறந்துவிடுகின்றனர்.

"என்னை நினைவுகூறுவதற்காக தொழுகையை நிறைவேற்றுவீராக!" (2)

என்று இறைவன் கூற இவர்கள் இடையூறு செய்பவர்களாக உருவானது ஏன்? இதேபோல் மார்க்கச் சொற்பொழிவு நடக்கும் இடங்களில் கூட பேச்சாளரை மிஞ்சும் வகையில் இடையிடையே ஹலோ! சப்தங்களையும், சம்பாஷனைகளையும் கேட்க முடிகிறது. மலக்குகள் சூழ்ந்துள்ள சபையல்லவா! இடையூறு தரும் இந்த இசைத் தொல்லைகள் இறைவனைக் கோபமூட்டுமல்லவா!
அன்புக்குரியவர்களே! இத்தகைய செயல்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். முதலாளியுடன் பேசும்போது அமர்த்திவைக்க ஆர்வம் காட்டும் "செல்"களை இறைவனுடன் உரையாடும்போது அலறவிடுவது முறைதானா? சிந்தியுங்கள்!

இப்போதெல்லாம் மிகச்சிறிய "செல்" வைத்துக்கொள்வது ஃபேஷன் ஆகிவிட்டது. என்னுடைய செல் தான் மிகச் சிறியது, என்னிடத்தில் கலர் ஸ்கிரீன் செல் உள்ளது, என்னிடத்தில் கேமரா செல் உள்ளது, என்னிடத்தில் வீடியோ கேமரா செல் உள்ளது என்று பெருமை பாராட்டுவதே சிலரின் வழக்கமாகிவிட்டது. சாதாரணமாக மிஸ் கால்(Missed Call) கொடுப்பதற்கும், நேரம் பார்ப்பதற்கும் மட்டுமே "செல்"ஐ உபயோகப்படுத்தும் எத்தனையோ நண்பர்கள். ஆயிரங்களை செலவழித்து செல் ஃபோன் வாங்குவதைப் பார்க்கிறோம். மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் ஏழைகள் கூட எங்கே நம்மை வறுமைக்கோட்டிற்கு கீழே சேர்த்து விடுவார்களோ?! எனப்பயந்து தன்மானப் பிரச்சனையாகக் கருதி செல் ஃபோன் வாங்கிவிடுகின்றனர். இன்னும் சிலபேரிடம் வர்ண செல்கள், வகைவகையாக (ஒன்றுக்கும் மேற்பட்ட) செல்களைக் காணமுடிகிறது.

இனிவரும் காலங்களில் ஒரே ஒரு செல் ஃபோன் (Cell Phone) வைத்திருப்பவர்களை ஒரு செல் (Cell) உயிரினம் என்று அழைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! ஒரு சாதாரண தொடர்பு சாதனத்துக்கு பல்லாயிரம் செலவழிக்க வேண்டுமா? வார்த்தைகளை புரியவைக்க வர்ணங்கள் அவசியம்தானா? இது ஒரு பெருமையின் சாயலைப் பிரகடனப்படுத்துவதே அன்றி வேறல்ல. தமது தேவைகளுக்கேற்றவாறு செல் ஃபோன் வாங்கிக் கொள்வதே சிறந்தது.

யாரின் உள்ளத்தில் ஓர் அணுஅளவு பெருமையுள்ளதோ, அவர் சுவர்க்கததில் நுழைய மாட்டார் என நபி(ஸல்) கூறினார்கள். (3)

சிலர் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு (Bill) பணம் கட்ட கஷ்டப்படுவதும், கட்டாமல் தலைமறைவானதும் கூட நடக்கின்றது. தலைநகர் சென்னையில் மட்டும் பணம் கட்டாத 550 பேர் மீது BSNL நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த 550 பேரும் 25,000 ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்தவர்கள். இதுபோல் 2 கோடி ரூபாய் சென்னையில் மட்டும் பாக்கி, இது தேவைதானா? (4)

அடுத்ததாக ளுஆளு எனப்படும் "குறுந்தகவல் சேவை" ஒரு குறிப்பிடத்தக்கது. செல்லில் பேசி பணத்தை விரயம் செய்யாமல் சுருக்கமாக தகவல்களை பரிமாற்றிக்கொள்ள இந்த ளுஆளு வகை செய்கிறது. தொழுகை, நோன்பு போன்றவை சம்மந்தமான நபி மொழிகளை அனுப்பி மக்களுக்கு தஃவா செய்யக்கூட இந்த அறிய ளுஆளுஐ பயன்படுத்தலாம். ஆனால் இன்று இந்த ளுஆளு பயன்படுத்துவதெல்லாம் முறை தவறிய செயல்களுக்குத்தான்.

என்னுடன் பணிபுரியும் தமிழ்ச் சகோதரருக்கு வந்த ஆங்கில SMS, (குறுந்தகவல்) "தோழி தேவையென்றால் தொடர்புகொள்ளவும் இப்படிக்கு லாரா" .நல்லவேளை அவருக்கு ஆங்கிலம் தெரியாது. நான் அந்தத் தகவலை அழித்துவிட்டேன். இது ஒரு மாதிரிதான். இதைப்போன்று பல்வேறு தகவல்கள் ஆண், பெண் பேதமின்றி பரிமாற்றிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்திய காதலர் தினக் களியாட்டங்களில் கூட இந்த SMS பங்கு அதிகம் என்றால் அது மிகையாகாது. நல்ல குடும்பப் பெண்களுக்கும், தொழுகையாளிகளுக்கும் கூட சில விஷமிகள் கெட்ட படங்களை அனுப்பி விடுகின்றனர். இதனால்தான் கிரைம் பிரான்ச் (Crime Branch) காலம் போய் சைபர் கிரைம் பிரான்ச் (Cyber Crime Branch) குற்றப்பிரிவுகள் காவல்துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள.

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒரு குடும்பப் பெண்ணுக்கு தினமும் வரும் நிர்வாணப்படங்களை தொடர்ந்து Cyber Crime Police வட பழனியைச் சேர்ந்த கண்ணன் என்ற வாலிபனை கைது செய்தனர். அவர் கிரெடிட் கார்டுகளுக்கு பணம் வசூலிப்பவர். அப்போது தனிமையில் இருக்கும் பெண்களை நோட்டமிட்டு செல் நெம்பர் வாங்கி பின் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அறியப்படுகிறது.

கேமரா செல் ஃபோன்கள் மார்க்கெட்டில் வந்த புதிதில் அதன் விபரீதம் புரியாமல் பலர் வாங்கினார்கள். பாஸி.காம் என்ற இணையதளத்தின் உரிமையாளர் அஸ்வின் பஜாஜ் என்பவர் கைது செய்யப்படும்வரை அரசாங்கமும் ஏதும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. புது டில்லியில் ஒரு மாணவனும், மாணவியும் பள்ளியறையில்(!?) ஏடாகூடாமாக இருந்ததை சகமாணவர்கள் வீடியோ கேமரா செல்"லில் கிளிக் (Video Clip) செய்து சேவை(?) நோக்கில் பலருக்கும் இதை அனுப்ப இது பாஸி.காம் என்ற இணையத்தளம் உபயோகிப்போருக்கு எட்டிவிட்டது. உலகம் முழுவதும் இணையதளம் உபயோகிப்போருக்கு விருந்தளித்தபின்தான் இது சர்ச்சையானது. மாணவி பெரிய இடத்து பெண் என்பதால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு, இணையதள உரிமையாளர் அஸ்வின் பஜாஜ் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்தபின்தான் அரசாங்கமும், கல்வி நிறுவனங்களும் விழித்துக்கொண்டன. பல மாநிலங்களில் கல்லூரிக்குள் கேமரா மொபைல் கொண்டு வருவது தடை செய்தன. முட்டிய பின் குனிவதுதான் நம் மக்களின் கலாச்சாரம் போலும். மாணவ மாணவியருக்கு இது ஒரு அதிர்ச்சி என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது. இது பற்றி கல்லூரி வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் பயிலும் ராம்குமார் கூறுகிறார்... "இந்த உத்தரவை முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தபின்தான் நடவடிக்கை எடுப்பது வழமையாகிவிட்டது. யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் என்பது எப்படி ஆபத்தானதோ அதேபோன்றுதான் கேமரா செல் ஃபோன் வைத்துக்கொள்வதும். முதலில் இது பள்ளிக்கூடங்களிலே தடைசெய்யவேண்டும்". (5)

இது மட்டுமல்ல, பொது இடங்களில் செல்லும் குடும்பப் பெண்களின் இடை போன்ற பகுதிகளை அவர்களுக்குத் தெரியாமல் படம் எடுப்பதுகூட நடக்கின்றது. இவ்வளவு அசம்பாவிதங்கள் போதாதென்று சினிமாத்துறையும் தனது திரைப்படங்களை கேமரா செல் மூலம் ரிலீஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

"சீனாவில் SMS மூலம் தொடராக வெளியான அவுட் சைடு தி ஃபோர்ட்ரஸ் பீ ஸீஜ்டு (Out Side the Portress Seized) என்ற நாவல் திரைப்படமாக்கப்பட்டு இதை செல் ஃபோன் மூலமே 30-40 தொடராக காட்டப்படும். திருமணமானவர்கள் புரியும் தவறான உறவுகளை சித்தரிக்கிறது இத்திரைப்படம்."
தேவைதானா இந்த கேமரா செல்ஃபோன்கள்." செல்ஃபோன்" என்ற இந்த அரிய சாதனம் மக்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது. திரையரங்குகளில் பலர் முன்னிலையில் காண வெட்கப்படுபவர்கள் கூட செல் ஃபோன் உதவியால் தனிமையில் ஆபாச காட்சிகளையும், செய்திகளையும் பார்க்கலாம், கேட்கலாம். எவ்வளவு பெரிய விபரீதத்திற்கான வித்துக்கள் தூவப்பட்டுள்ளன.

இறைவன் தன் மாமறையில்
"இறுதியாக (நரகமாகிய) அதன்பால் அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்களாயின் (பாவம்) செய்த அவர்களுக்கு விரோதமாக அவர்களது செவிப்புலனும், பார்வைகளும், தோலும் அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி சாட்சி சொல்லும்". (6)

எனவே அன்புள்ளம் கொண்டவர்களே! செல் ஃபோன் என்பது இறைவன் நமக்களித்த இந்த நூற்றாண்டின் அருட்கொடை எனலாம். அதைப் பயன்படுத்தும் முறையில்தான் அது ஹராமா? ஹலாலா? என தீர்மானிக்க முடியும். நிச்சயமாக இதை தவறாக பயன்படுத்தினால் மறுமை மன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவோம்.

நபி(ஸல்) அவர்களும், அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் அபுல் ஹைதம் பின் அத்தீஹான்(ரலி) அவர்களின் வீட்டில் விருந்துண்டபின் நபி(ஸல்) அவர்கள் கூறிய வாசகம் இங்கே நினைவுகூற ஏற்றம். "நிச்சயமாக அல்லாஹ்வின்மீது ஆணையாக இந்த அருட்கொடை பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்" (7)

சாதாரண பேரிச்சம் பழத்தினை உணவாக உட்கொண்டதற்கே (அருட்கொடையாக) விசாரணை உண்டென்றால்.. செல் ஃபோன் என்ற இந்த அரிய தொடர்புச்சாதனம் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!

எனவே! பெருமைக்காக அனாச்சாரங்களில் பயன்படுத்துவது, தவறான வழியில் பயன்படுத்துவது, Cell-லில் தேவைக்கதிகமாகப் பேசி வீண்விரயம் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்போம். செல் ஃபோன் இறைவனின் அருட்கொடை என்பதை கருத்தில் கொண்டு முறையாகப் பயன்படுத்துவோம்!

செல் ஃபோன் பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டியவை
-Ring Tone-களில் இசையை முழுமையாகத் தவிர்க்கவேண்டும். சாதாரணமான Ring Tone அல்லது மணியோசை போன்றவற்றை பயன்படுத்தலாம்

-சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் Ring Tone சப்தத்தை வைத்துக் கொள்ளவேண்டும். தொழுகை நடக்கும் இடம், மார்க்கச் சொற்பொழிவு அரங்கங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் அதிர்வூட்டலை (Vibration Mode) பயன்படுத்தலாம். அமர்த்திவிடுவது சாலச்சிறந்தது.

-எதிர் முனையில் நாம் தொடர்பு கொள்ளக்கூடிய நபர் துக்கம் அல்லது முக்கியமான சந்திப்பில் (Meeting) இருக்கலாம், அல்லது வாகனத்தை ஓட்டிக்கொண்டோ அல்லது பயணத்திலோ இருக்கலாம். முன் அனுமதி பெறுவது நல்லது.

-நாம் Dial செய்யும்முன் தொழுகைக்குரிய நேரமா என்பதைப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

-பேசும் போது பொருளாதார வீண்விரயம் கருதி சுருக்கமாகப் பேசவேண்டும், சிலர் பத்து நிமிடம் பேசினால் 5 நிமிடம் சிரிப்பில் கழிந்துவிடுகிறது.

-எதிர் முனையில் நாம் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் இல்லாமல் அவரது மனைவி மற்றும் பெண்கள் எடுக்கும் பட்சத்தில் நீட்டாமல் சுருக்கமாகச் செய்தியைக் கூறி முடிக்கவேண்டும்.

-பிறர் செல் ஃபோன் எண்களை வாங்கும் போதும், பிறருக்கு நாம் சொல்லும் போதும் சரியாகக் கொடுக்க வேண்டும். டயல் செய்யும் முன் டயல் செய்யும் எண்ணைச் சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.

-வாகனம் ஓட்டும்போது செல் பேசிகளில் பேசுவது அல்லது ரிசீவ் செய்வதைத் தவிர்க்கவும்.

-நிர்பந்தம் எற்படாவிட்டால் தவிர நமது செல் பேசிகளை மற்றவர்கள் சுதந்திரமாக பாவிக்க அனுமதிக்க வேண்டாம். அதேபோல் நாம் மற்றவர்கள் செல் ஃபோன்களை உபயோகிக்க நேர்ந்தால் மென்மையாக உபயோகிப்பது நல்லது.

-அறிமுகமில்லாதவர்களிடம் தங்கள் செல் ஃபோனில் பேச அனுமதிக்க வேண்டாம். செல் பேசிக்கொண்டே அவர்கள் ஓடிப்போய்விடுவது... அல்லது நமது தனிப்பட்ட எண்களைக் குறித்துக் கொண்டு தவறான முறையில் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.

-பேசும் போது நடுத்தரமான குரலில் பேசுவது நல்லது. அதிக சப்தமாக பேசினால் நம் பேச்சை மற்றவர்கள் கேட்கவும், மற்றவர்களுக்கு இடைஞ்சலாகவும் இருக்கும்.

-உரையாடலுக்கு முன்னும், பின்னும் முகமன் (சலாம்) சொல்ல மறவாதீர்கள்.

Reference:
(1) தினமணி
(2) அல்-குர்அன் : 20:14
(3) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊது(ரலி), ஆதாரம் : முஸ்லிம்)
(4) தினமணி-அக்டோபர் 26, 2005
(5) தினமணி
(6) அல்-குர்ஆன் : 41:20
(7) ஹதீஸின் சுருக்கம், அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), ஆதாரம் : முஸ்லிம்

Saturday 23 June 2012

மூன்று மதாங்கள் அசந்து தூங்கிய அதிசய சிறுமி


ஒரு மனிதன் கட்டாயமாக குறைந்தது 6 மணி நேரம் தூங்க வேண்டும்.ஆனால் நம்மில் பலருக்கு தூக்கம் வருவது என்பது பெறிய பிரச்சசனை அதாற்காகபலர் மாத்திரை எடுப்பது உண்டு அத்தகைய தூக்கம்
 வராமல் தவிப்பவர்கள் மத்தியில் ஒரு சிறுமி தந்து வாழ் நாளில் மூன்று மாதங்கள் தொடர்ந்து தூங்கி எழுந்துள்ளார் என்றால் நம்புவீர்களா?பிரிட்டனை சேர்ந்த ஸ்டேசி கோமர்ஃபோர்டு(வயது 15) என்ற சிறுமி, கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து தூங்கி உள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு மிட்லாண்டின் டெல்ஃபோர்டைச் சேர்ந்த ஸ்டேசி கோமர்ஃபோர்டு(வயது 15) என்பவர் அரிதான நரம்புக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல மாதங்களுக்கு தூங்கிக் கொண்டிருப்பார்கள். உலகில் ஆயிரத்தில் ஒருவர் தான் இந்த லெயின் லெவின் நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. 3 மாதங்களாக அந்த சிறுமி தூங்கியதால் 9 தேர்வுகளை அவர் எழுதவில்லை. மேலும் தனது பிறந்தநாளன்றும் அவர் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.
இதுகுறித்து வெளியில் சொன்னால் மக்கள் நம்புவதில்லை. இது மிகவும் சிரமமாக உள்ளது என அந்த சிறுமி வருத்தத்துடன் கூறியுள்ளார்.