மீலாதுன் நபி (ﷺ) சிறப்புப்பார்வை
தொடர்கிறது
தொடர்கிறது
ஆயிரக்கணக்கானோர் திரண்டு உறுதிமிக்க நெஞ்சோடு மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒரு மாவீரனின் முன்னால் நின்று கொண்டிருந்த பரபரப்பான தருணம் அது.
ஆம்! குபைப் (ரலி) அவர்கள் கழுமரத்தில் ஏற்றப்பட்டு மக்காவின் முக்கியமான ஒரு தலைவரின் வருகைக்காக காத்திருந்தது அந்தக் கூட்டம்.
எதிர்பார்த்த அந்த தலைவர் அங்கே வருகை புரிந்தார். மக்கள் அமைதியானார்கள். ஆம்! மக்காவின் பெரும் தலைவராக பொறுப்பேற்று இருந்த அபூசுஃப்யான் அங்கே வந்தார்.
வந்தவர், ஃகுபைப் (ரலி) அவர்களின் அருகே சென்று “குபைபே! உம்மை துன்புறுத்த வேண்டும், உம்மைக் கொல்ல வேண்டும் என்பதெல்லாம் எங்களின் நோக்கமல்ல!
குபைபே! உம்மிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இது தான்! அதுவும் ஒற்றை வார்த்தை தான் சொல்லிவிடு குபைபே!
“இந்தக் கழுமரத்தில் முஹம்மத் {ﷺ} அவர்கள் ஏற்றப்படுவதை நான் விரும்புகின்றேன்” என்று ஒற்றை வார்த்தை சொல்லிவிடு!
உமக்கு வாழ்க்கை தருகின்றோம்! உமது மனைவி, மக்களோடு நீர் இன்பமாக வாழலாம்” என்றார்.
“என் மனைவி, மக்களுடன் வாழவோ, உலக இன்பத்தில் திளைக்கவோ நான் ஆசைப் படவில்லை. என் குடும்பத்தையே அடியோடு அழிப்பீர்களே அப்போதும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை.
என் வாயால் ஒரு போதும் நீங்கள் கூறுவது போன்ற எந்தவொரு வார்த்தையையும் சொல்லப்போவதில்லை.
கேட்டுக் கொள்ளுங்கள்! நபி {ﷺ} அவர்களின் திருப்பாதங்களில் சிறு முள் தைக்கப்படுவதைக் கூட என் மன ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது” என்று அஞ்சா நெஞ்சத்தோடு ஃகுபைப் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.
இது கேட்ட அபூசுஃப்யான் ஆவேசமடைந்தார். கொலைவெறியோடு திரண்டிருந்த மக்களிடையே ஃகுபைபை காலி செய்யுமாறு சைகை செய்தார்.
தனியொரு மனிதனை, கழுமரத்தில் உடல் முழுவதும் கயிறுகளால் கட்டப் பட்டிருந்த ஒரு மாவீரனை திரண்டிருந்த மக்கள் கூட்டம் சின்னா பின்னப்படுத்தியது.
கையில் கொண்டு வந்திருந்த அம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களால் குபைபை கொடூரமாக தாக்கினார்கள் எதிரிகள்.
மரணத்தின் விளிம்பில் பயணித்துக் கொண்டிருந்த ஃகுபைப் (ரலி) அவர்கள் உயிர் பிரிவதற்கு சற்று முன்னதாக தங்களின் முகத்தை கிப்லாவின் பக்கம் திருப்பி “இறைவா! உன் திருத்தூதர் எங்களுக்கு ஒப்படைத்த பொறுப்பை நாங்கள் நிறைவு செய்து விட்டோம்! எங்களின் இந்த நிலையை நீ உன் தூதருக்கு அறிவித்து விடு! என் ஸலாத்தையும் அவர்களுக்கு எத்தி வைத்துவிடு!” என்று இறைஞ்சினார்கள்.
அல்லாஹ் குபைப் அவர்களின் பிரார்த்தனையை உடனே அங்கீகரித்தான். ஆம்! குபைப் (அலி) அவர்களின் தூய ஷஹாதத்தை அல்லாஹ் மாநபி {ﷺ} அவர்களுக்கு அறிவித்தான்.
நபி {ﷺ} அவர்கள் குபைப் (ரலி) அவர்கள் தங்கள் மீது வைத்திருந்த உள்ளார்ந்த அன்பை நினைத்து மெய்சிலிர்த்துப் போனார்கள்.
வார்த்தையில் கூட விட்டுக் கொடுக்காத குபைப் (ரலி) அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நபி {ஸல்} அவர்கள் விரும்பினார்கள்.
இந்நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக கழுமரத்தில் ஏற்றப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட குபைப் (ரலி) அவர்களின் பூவுடலை பாவிகள் கழுமரத்திலிருந்து கீழே இறக்காமல் அரபுலக மக்களுக்கு காட்சிப் பொருளாக ஆக்கியிருப்பதைக் கேட்டு நபி {ﷺ} அவர்கள் வேதனை அடைந்தார்கள்.
உடனடியாக, தங்களது தோழர்களை ஒன்று கூட்டிய நபி {ﷺ} அவர்கள், தோழர்களை நோக்கி “தோழர்களே! ஃகுபைப் (ரலி) அவர்களை ஏனைய ஷுஹதாக்களோடு நல்லடக்கம் செய்ய வேண்டும் என என் மனம் விரும்புகின்றது. மக்காவிற்குச் சென்று குபைப் (ரலி) அவர்களின் பூவுடலை கைப்பற்றி இங்கே யார் கொண்டு வருகின்றார்களோ அவர் சுவனவாசியென்று நான் சாட்சி பகர்கின்றேன்!” என்று கூறினார்கள்.
அங்கே, கூட்டத்தில் அமர்ந்திருந்த ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்கள் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் சென்று குபைப் (ரலி) அவர்களின் உடலைக் கொண்டு வருகின்றேன்! எனக்கு துணையாக, நீங்கள் எனக்கு கொள்கைச் சகோதரராக ஆக்கிய மிக்தாத் இப்னு ஆமிர் (ரலி) அவர்களை அழைத்துச் செல்கிறேன்” என்றார்கள்.
உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு மக்காவின் எல்லைக்கு இருவரும் வந்தார்கள். பகலில் மக்கள் நடமாட்டத்தையும், எதிரிகளின் எண்ணிக்கையையும் கண்காணித்து விட்டு, சிறந்த ஓர் திட்டத்தை தயார் செய்து இரவுக்காக காத்திருந்தார்கள்.
நள்ளிரவு நேரத்தில் ஓசைபடாமல் நடந்து கழுவேற்றப்பட்ட தன்ஈம் என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே கழுவேற்றப்பட்ட மரத்தை சுற்றி பாதுகாப்புக்கு நின்ற நாற்பது வீரர்களும் போதையில் தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்.
விவேகத்தோடு செயல்பட்ட அவ்விரு ஸஹாபாக்களும் துணிச்சலுடன் அம்மரத்திலிருந்து குபைபை இறக்கினார்கள். அப்போது குபைப் (ரலி) அவர்களின் அந்த பூவுடல் சிதையாமல் அப்படியே இருந்தது.
கொல்லப்பட்டு 40 நாட்களாகியும் உடலில் ஒரு மாறுதலும் ஏற்படவில்லை. அவர்களுடைய கை காயத்தின் மீது இருந்தது. பூஉடல் செந்நிறமாகவும், வாடை கஸ்தூரி வாடையாகவும் இருந்தது.
குபைப் (ரலி) அவர்களின் உடலை சுபைர் (ரலி) அவர்கள் குதிரையில் வைத்துக் கொண்டு வந்தார்கள்.
இதே நேரத்தில் பாதுகாப்புக்கு நிண்றிருந்தவர்கள் போதையிலிருந்து தெளிந்து, கண் விழித்துப் பார்த்த போது குபைபை காணாது திகைத்துப் போனார்கள்.
உடனே குறைஷித்தலைவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, 70 குதிரை வீரர்கள் விரைவாக சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இறுதியாக, ஸுபைர் (ரலி) அவர்களையும், மிக்தாத் (ரலி) அவர்களையும் அந்த குதிரை வீரர்கள் மடக்கினர்.
மடக்கியதும் குபைப் (ரலி) அவர்களின் உடலை ஸுபைர் (ரலி) அவர்கள் பூமியில் வைத்தார்கள். பூமி குபைப் (ரலி) அவர்களின் உடலை விழுங்கிக் கொண்டது. அதனாலேயே முதன் முதலாக பூமியால் விழுங்கப்பட்டவர் என்று குபைப் (ரலி) அவர்கள் வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படுகிறார்கள்.
( நூல்: தஃப்ஸீர் அல் பஃக்வீ, உயூனுல் அஸர் ஃபீ ஃபுனூனில் மஃகாஸி வஷ்ஷமாயிலி வஸ்ஸியர் லி இமாமி இப்னு ஸைய்யிதின் நாஸ் )
தொடரும்..........