ஜனாப். எம்.வை.எம். இப்ராஹிம் (கவிமணி – யூவன்னா)
தன்னுடைய ஆரம்பக் கல்வியை மட்/ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் தொடர்ந்த இவர் சாதாரண தரத்தை அலிகாரிலும் தொடர்ந்தார்.
1977.05.12 அன்று ஆசிரிய நியமனமும் கிடைக்கப் பெற்றார்.
1981 ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை பயிற்சிக் கலாசாலையில் கணித ஆசிரியர் பயிற்சியையும் பெற்றார். இவரது ஆசிரியர் சேவையில் முதலாவது பாடசால மட்/ மீராகேணி அரசினர் முஸ்லிம் பாடசாலையாகும். பின்னர் ஓட்டமாவடி மகா வித்தியாலயத்திலும், அதனைத் தொடர்ந்து வ/தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் (முல்லைத்தீவு) பின்னர், அங்கிருந்து பொ/திவுலான முஸ்லிம் வித்தியாலயத்திலும் அதனைத் தொடர்ந்து மட்/ ஏறாவூர் றகுமானியா வித்தியாலயத்திலும் (10 வருடங்கள்) அதன் பின்னர் மட். மீராகேணி மகா வித்தியாலயத்திலும் 12 வருடங்கள்) அதன் பின்னர், ஏறாவூர் மிச்நகர் இல்மா வித்தியாலத்திலிருந்து 38 வருட கால 21.10.2014 இல் தனது பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.
1966 இல் ஏ.அப்துல் றகுமான் (ஆன்பு மகன்), மர்ஹூம் தாஹா ஹஸன் ஆகியோருடன் சேர்ந்து “தாறயூம்” என்ற குழுப் பெயருடன் “செந்தேன்” கையெழுத்துப் பத்திரிகையினை ஆரம்பித்து நடாத்தினார்.
“செந்தேன்” கையெழுத்துப் பத்திரிகைத் தொடரில் , இளமையில் காலஞ்சென்ற மர்ஹூம் எம்.இஸ்மாயில் ஆசிரியர் அவர்களுக்கான
இரங்கல் இதழ் ஒன்றையும் வெளியிட்டார்.
“உலகம் சுழல்கிறது என்று படித்திருக்கிறேன்.
உன் மறைவுச் செய்தியை கேள்விப் பட்ட போதுதான் அதை அனுபவத்தில் உணர்ந்தேன்.” என்று தொடர்ந்தது அந்தக் கட்டுரை.
மட்/ றகுமானியா வித்தியாலயத்தில் கற்பித்த காலத்தில் “றகுமானியா” என்ற பத்திரிகையினை “றோனியோ” முறையில் அச்சிட்டு வெளியிட்டார்.
இலச்சினைகளை வரைவதிலும் , ஆக்கங்களை வரைவதிலும் ஆர்வம் கொண்ட இவர், ஏறாவூர் நகர சபையின் உத்தியோக பூர்வ இலட்சினையை வரைந்திருந்தார். இன்று வரைக்கும் அந்த இலட்சினையே நடை முறையில் உள்ளது.
அதே போல மட்/அல் முனீறா பாலிகா மகா வித்தியாலய இலட்சினையையும் இவறே வரைந்தவராவார்.
எழுத்துத் துறையிலே தீராத ஆர்வமுள்ள இவர் நீண்ட காலமாக பத்திரிகைகளுக்கு ஆக்கங்களை எழுதி வருபவராவார். அந்த வகையில் மட்/ ஏறாவூர் றகுமானியா தேசிய பாடசாலயின் கீதத்தையும் இவரே எழுதியிருந்தார். அவ்வாறே மட்/ மாக்கான் மார்க்கார் தேசிய படசாலயின் கீதத்தினையும் இவரே வடிவமைத்தார்.
பல சிறுகதைகளையும் ,கவிதைகளையும் எழுதியுள்ள இவர், மாவட்ட மட்டம் மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் பல வெற்றிகளையும் பெற்றிருக்கிறார். இன்றும் இவரது கலை இலக்கியப் பணியை பாராட்டி ஏறாவூர் நகர பிரதேச செயலகம் “கலாச்சார பேரவை விருது” வழங்கி கௌரவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மீராகேணி-ஏறாவூர் சமூக உறவு ஒன்றியத்தினால் 2014.05.17 அன்று சமூக நலப் பணிகளில் பங்குபற்றியவர்களைப் பாராட்டிய வைபவத்தில் ,இவரது சமூக நலப் பணிகளைப் பாராட்டி “கவிமணி” பட்டத்துடன் பாராளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான அல்ஹாஜ் றஊப் ஹக்கீம் அவர்களினால் பொன்னாடை போர்த்தி, கௌரவிக்கப்பட்டார்.